பிரபல இயக்குநர் மறைவு : ரஜினி, கமலை இயக்கியது முதல் தேசிய விருது வரை குவித்த இந்த ஹிட் படமெல்லாம் இவர் எடுத்ததா?

தமிழ் சினிமாவில் கே. பாலச்சந்தருக்கு அடுத்தபடியாக பெண்களை மையப்படுத்தி பெண்ணியம் சார்ந்த கதைகளையும், யதார்த்த படங்களையும் இயக்கி வெற்றி கண்டவர் தான் இயக்குநர் துரை. இவரது படைப்புகளில் காலத்திற்கும் பெயர் சொல்லும் படமாக விளங்கியது பசி திரைப்படம்.

நடிகை ஷோபாவுக்கு தேசிய விருதினைப் பெற்றுக் கொடுத்த படம் இது. முற்றிலும் சென்னை வட்டார வழக்கில் யதார்த்த கதைக் களத்தோடு இந்தப் படத்தினை இயக்கி வெற்றி கண்டார் இயக்குநர் துரை. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் சுமார் 46 படங்களை இயக்கியுள்ள துரை 1974-ல் முத்துராமன் நடித்த அவளும் பெண்தானே படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.

கொஞ்சம் மிஸ் ஆகி இருந்தாலும்.. நூலிழையில் உயிர் தப்பிய ராமராஜன்.. யாரிடமும் சொல்லாத ரகசியம்

இயக்கம் மட்டுமின்றி எழுத்து, திரைக்கதை உள்ளிட்டவற்றிலும் கைதேர்ந்த திரைக் கலைஞராக விளங்கியவர் துரை. ரஜினியை வைத்து சதுரங்கம் என்ற படத்தையும், கமல்ஹாசனை வைத்து நீயா, மரியம் மை டார்லிங் (கன்னடம்) போன்ற படங்களை இயக்கினார். இவரது இயக்கத்தில் வெளிவந்த கிளிஞ்சல்கள் படம் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றி பெற்றது. மேலும் திரையரங்குகளில் 175 நாட்களைக் கடந்து ஓடியது. நடிகர் மோகனுக்கு மிகப்பெரிய அடையாளத்தை தமிழ் சினிமாவில் கொடுத்தது.

தொடர்ந்து பல ஹிட் படங்களைத் தமிழ் சினிமாவிற்குக் கொடுத்தவர் திரையுலகில் அடுத்த பாலச்சந்தர் என்று அழைக்கப்படுகிறார். ஏனெனில் துரையின் படங்களில் பெரும்பாலும் பெண்கள் கதாபாத்திரங்களே முன்னிலைப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும். அதற்கு நீயா, பசி, கிளிஞ்சல்கள் போன்ற படங்களே உதாரணம்.

மேலும் தமிழக அரசின் கலைமாமணி பட்டமும் பெற்றுள்ளார் இயக்குநர் துரை. பசி திரைப்படத்திற்கான சிறந்த இயக்குநருக்கான தேசிய விருதினையும் பெற்றார். இன்றும் தமிழ் சினிமாவின் முக்கியமான படங்களில் பசி படத்திற்கு என்றும் தனி இடம் உண்டு.

இப்படி காலத்தால் அழியாத பல காவியப் படைப்புகளைக் கொடுத்து வெற்றி கண்ட இயக்குநர் துரை வயது மூப்பு காரணமாக உடல் நலம் குன்றியிருந்தார். இந்நிலையில் அவரது சொந்த ஊரான திருவள்ளுரில் நேற்று உயிரிழந்தார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews