பாக்யராஜ் இயக்கிய ஒரே த்ரில்லர் படம்.. மக்களிடம் ரெஸ்பான்ஸ் கிடைத்ததா?

பொதுவாக பாக்யராஜ் படம் என்றால் அந்த படம் ரொமான்ஸ், காதல், குடும்ப செண்டிமெண்ட் கொண்டதாகதான் இருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அவர் ஒரு திரில்லர் படத்தையும் இயக்கி இருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா? ஆம் அந்த படம்தான் ‘விடியும் வரை காத்திரு’.

ஒரு இயக்குனர் ஒரே மாதிரி படங்களை இயக்கக் கூடாது சற்று வித்தியாசமாக ஒரு படம் இயக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் பாக்யராஜ் ‘விடியும் வரை காத்திரு’ படத்தை இயக்கினார். இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும் ஓரளவு வெற்றி பெற்றது.

ஒரு கை ஓசை: படம் முழுவதும் ஒரு வசனம் கூட பேசாமல் கே.பாக்யராஜ் நடித்த படம்..!

பாக்யராஜ், சத்யகலா, கராத்தே மணி, சங்கிலி முருகன் உள்ளிட்ட பலர் நடித்த இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசை அமைத்திருந்தார். பாடல்கள் சுமாராக இருந்தாலும் இந்த படத்தின் பின்னணி இசை பட்டையை கிளப்பியது. இந்த படம் ஓரளவு வெற்றி பெற்றதற்கு பின்னணி இசைதான் காரணம்.

vidiyum varai kaathiru1

இந்த படத்தின் கதையின்படி நாயகி தன்னுடைய அக்கா மறைவால் மனநிலை சரியில்லாமல் இருக்கும் நிலையில் அவருக்கு நிறைய சொத்து இருக்கிறது என்பதால் பாக்யராஜ் அவரை திருமணம் செய்து கொள்வார். இதனையடுத்து மனைவியை கொன்று விட்டால் அந்த சொத்து முழுவதும் தனக்கு வந்துவிடும் என்ற எண்ணத்தில் அவர் மனைவியை கொல்ல முயற்சி செய்வார். ஒவ்வொரு முறையும் அவர் மனைவியை கொல்ல முயற்சி செய்யும்போது எதேர்ச்சையாக அவர் தப்பி விடுவதும், அவருக்கு பதில் இன்னொருவர் இறந்து போகும்படியும் ஆகி விடும்.

இந்த கொலைகளை விசாரணை செய்யும் காவல்துறை அதிகாரி கராத்தே மணி, பாக்யராஜ் தான் இந்த கொலைகளுக்கு காரணம் என்று கண்டுபிடித்தாலும் அதற்கான ஆதாரம் இல்லாததால் திணறிக் கொண்டிருப்பார். அதன் பிறகு கிளைமாக்ஸில் என்ன நடக்கும் என்பது தான் இந்த படத்தின் கதை.

இந்த படத்தில் பாக்யராஜ் தனது மனைவி சத்யகலாவை கொல்ல முயற்சி செய்யும் காட்சிகள் விறுவிறுப்பாக இருக்கும். பக்காவாக பிளான் போட்டு அவர் கொலை செய்ய முயற்சிக்கும்போது எதைச்சையாக அந்த திட்டத்தில் சில மாற்றம் வந்து சொதப்பிவிடும்.

ஒரே ஒரு ஒன்லைன் கதை.. அபார திரைக்கதையால் சூப்பர் ஹிட்டான பாக்யராஜ் படம்!

குறிப்பாக இந்த படத்தில் இடைவேளையின் போது வரும் ரயில் காட்சியின் போது ரசிகர்கள் கைதட்டி ரசிப்பார்கள். பாக்யராஜ் வெளியூர் செல்கிறேன் என்று கூறிவிட்டு ரயிலில் பயணம் செய்வார். ரயிலில் பயணம் செய்யும்போது இதை நீங்கள் செய்ய வேண்டும் என்று ஒரு வேலையை கராத்தே மணி கொடுப்பார். ஆனால் பாதி வழியில் ரயிலில் இறங்கி அவர் தனது மனைவியை கொல்வதற்காக வீட்டுக்கு வருவார். ஒரு கொலை முயற்சியை செய்துவிட்டு மீண்டும் அதே ரயிலை பிடிக்க வேண்டும் என்பதுதான் பாக்யராஜ் திட்டம்.

vidiyum varai kaathiru2

இந்த நிலையில் ரயிலில் பாக்யராஜ் இல்லை என்பதை தெரிந்து கொண்ட கராத்தே மணி அடுத்த ரயில்வே ஸ்டேஷனில் பாக்யராஜ் இருக்கிறாரா என்பதை சோதனை செய்வதற்காக வந்திருப்பார். ரயில் இரண்டு ரயில் நிலையங்களுக்கு இடையே சென்று கொண்டிருக்கும் நிலையில் திடீரென நின்றுவிடும். ஒரு பக்கத்தில் இருந்து பாக்யராஜ் ஓடி வர, இன்னொரு பக்கத்திலிருந்து கராத்தே மணியும் ரயிலை பிடிக்க ஓடி வருவார். அப்போது நடக்கும் ஒரு விஷயம் தான் ரசிகர்களை கைதட்ட வைக்கும்.

இந்த படத்தில் பாக்யராஜ் தனது மனைவியை கொல்ல முயற்சிப்பதை பெண் ரசிகைகள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் கூறப்பட்டது. பாக்யராஜ் என்றால் மனைவி மீது அன்பாக இருப்பார், பாசமாக இருப்பார், காதலுடன் இருப்பார் என்று பல படங்களில் காண்பித்து விட்டு, திடீரென மனைவியை கொல்கிறார் அதுவும் சொத்துக்காக கொல்கிறார் என்பதை பெண் ரசிகைகள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் ஆண் ரசிகர்கள் இந்த படத்தின் த்ரில்லிங் காட்சிகளை ரசித்தனர்.

ஒரே தீபாவளியில் ரிலீஸ் ஆன சிவாஜி, கமல், ரஜினி படங்கள்.. ஆனால் ஜெயித்தது பாக்யராஜ் தான்..!

இதனையடுத்துதான் தனது இமேஜ் பாதிக்கும் அளவிற்கு இது போன்ற படங்கள் இனிமேல் எடுக்க மாட்டேன் என்று பாக்யராஜ் முடிவு செய்தார். இருப்பினும் பாக்யராஜின் வித்தியாசமான திரைக்கதை அம்சம் கொண்ட படங்களில் ஒன்றுதான் ‘விடியும் வரை காத்திரு’ என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews