தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரங்களாக வலம் வரும் நடிகர்களின் அரசியல் பிரவேசம் எப்போதுமே தமிழ்நாட்டில் பெரும் விவாதப் பொருளாகவே இருந்து வருகிறது. ரஜினிகாந்த் பல ஆண்டுகளாகப் பேசிவந்த ஆன்மீக அரசியல் எங்கு தொடங்குவது என்றே தெரியாமல் ஆரம்பிக்காமலேயே முடிந்துபோனது. அதேபோல, கமல்ஹாசனின் பகுத்தறிவு அரசியலும் மக்கள் மத்தியில் எதிர்பார்த்த இடத்தைப் பிடிக்க முடியாமல் தடம் புரண்டு நின்றது.
இவர்களைத் தொடர்ந்து அரசியலில் குதிக்க முயன்ற விஷாலின் அரசியல் ஆசை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் களேபரத்துடனே முடிவுக்கு வந்துவிட்டது. மேலும், சூர்யாவைப் போன்ற நடிகர்களைப் பொறுத்தவரை, திரையில் சமூகப் படங்கள் நடித்தாலும், நடைமுறையில் அரசியலுக்கு வந்து கோடிக்கணக்கில் பணம் செலவழித்துத் தன் நிம்மதியைக் கெடுத்துக்கொள்ளும் தைரியமோ மனதோ நிச்சயம் இருக்காது என்பதே பலரின் கருத்தாக உள்ளது.
இவர்களின் இந்தச் செயல்களைப் பார்க்கும்போது, இவர்கள் திரையில் மட்டுமே மாஸ் காட்டும் நிஜத்திற்குச் சம்பந்தமில்லாத நாயகர்களாகத் தெரிகிறார்கள். நடைமுறையில் அரசியல் களம் என்று வரும்போது சிறு சிக்கல் எழுந்தால் கூட அதை எதிர்த்து நிற்கும் தைரியமோ, உறுதியோ இவர்களிடம் கொஞ்சமும் இருக்காது என்பதே நிதர்சனமான உண்மையாக இருக்கிறது.
ஆனால், இவர்களிடமிருந்து முற்றிலும் மாறுபட்டு நின்றவர் நடிகர் விஜய். ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோதே துணிச்சலாகத் தனது படங்களுக்கு வந்த நெருக்கடிகளையும் வழக்குகளையும் எதிர்கொண்டார். அதன்பிறகு மு.கருணாநிதியின் ஆட்சியிலும் சரி, தற்போதைய மு.க.ஸ்டாலின் ஆட்சியிலும் சரி, எதற்கும் அஞ்சாமல் தனது நிலைப்பாட்டைக் தைரியமாக வெளிப்படுத்தினார். மோடியின் ஆட்சியில் படப்பிடிப்பில் இருந்த விஜய்யை வருமான வரித்துறையினர் வலுக்கட்டாயமாக அழைத்து சென்ற போதும் அதையும் எதிர்கொண்டார்.
தமிழக அரசியலின் அத்தனை பலப்பரீட்சைகளையும் நேருக்கு நேர் பார்த்து, ஆளுங்கட்சிகளின் நெருக்கடிகளைத் தாண்டி இன்று தன் சொந்தக் காலில் கட்சியைத் தொடங்கி நிற்கும் விஜய், மற்ற நடிகர்களைப் போல வெறும் வாய்ஜாலம் காட்டாமல் களத்தில் இறங்கியுள்ளார். உதயநிதியையும், மற்ற முன்னணி அரசியல் தலைவர்களையும் சட்டை செய்யாமல் தனது பாதையைத் தானே செதுக்கிக் கொண்டுள்ள இவர்தான் உண்மையான மாஸ் என்பதை அரசியல் களம் நிரூபித்துள்ளது.
தமிழ் திரையுலகில் இருந்து இதுபோன்று அனைத்து எதிர்ப்புகளையும் துணிச்சலாகத் தாண்டி, நேரடி அரசியலில் இறங்கி மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர் இதுவரை யாருமில்லை. இனிவரும் காலங்களிலும் திரையுலகில் இருந்து இப்படி ஒரு உறுதியான மற்றும் அதிரடியான அரசியல் தலைவரும் உண்மையான மாஸ் நாயகனும் உருவாவதற்கான வாய்ப்பே இல்லை என்பதே காலத்தின் கட்டாயமாக உள்ளது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
