செய்திகள்

தமிழ்நாட்டை தாண்டினால் விஜய்யை யாருக்கும் தெரியாதாம்.. சொல்பவர் எல்.கே.சுதீஷ்.. விஜயகாந்த் இல்லையென்றால் சுதீஷ் அட்ரஸ் இல்லாதவராக இருந்திருப்பார்.. விஜயகாந்த் மச்சான் என்ற ஒரு அடையாளம் இல்லையென்றால் அவருக்கு ராஜ்யசபா எம்பி சீட் கிடைத்திருக்குமா?

தமிழ்நாட்டை தாண்டினால் விஜய்யை யாருக்கும் தெரியாதாம்.. சொல்பவர் எல்.கே.சுதீஷ்.. விஜயகாந்த் இல்லையென்றால் சுதீஷ் அட்ரஸ் இல்லாதவராக இருந்திருப்பார்.. விஜயகாந்த் மச்சான் என்ற ஒரு அடையாளம் இல்லையென்றால் அவருக்கு ராஜ்யசபா எம்பி சீட் கிடைத்திருக்குமா? விஜய் பற்றி பேச சுதீஷுக்கு அருகதை இருக்கின்றதா? கேரளா உள்பட தென்னிந்தியாவில் வெறித்தனமான ரசிகர்கள் இருக்கும் நிலையில், பச்சையாக பொய் சொல்லும் சுதீஷ்க்கு என்ன நோக்கம்?

விஜய் குறித்து தேமுதிக தரப்பிலிருந்து தொடர்ந்து வரும் விமர்சனங்கள் தற்போது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளன. குறிப்பாக, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தொடர்ந்து விஜய்யை விமர்சித்து வரும் நிலையில், அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் எல்.கே.சுதீஷும் விஜய்யின் அரசியல் செல்வாக்கு குறித்து கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டை தாண்டி விஜய்க்கு பெரிய அளவில் அறிமுகம் இல்லை என்றும், சமூக வலைதளங்களின் மூலமாக அவரது அரசியல் பிரபலப்படுத்தப்படுவதாகவும் அவர் விமர்சித்ததாக கூறப்படும் கருத்துகள் தற்போது விவாதமாகியுள்ளன.

தமிழ்நாட்டின் எல்லையை தாண்டி ஆந்திரா அல்லது கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களுக்கு சென்றால் விஜய்யை எல்லோருக்கும் தெரிந்திருக்காது என்பதுதான் சுதீஷின் வாதமாக இருப்பதாக தெரிகிறது. குறிப்பாக திருத்தணி தாண்டி நகரி உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்றால் அங்குள்ள மக்களுக்கு விஜய் குறித்து எவ்வளவு தெரியும் என்ற கேள்வியை அவர் முன்வைத்துள்ளார். தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களான பாலையா, மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன் போன்றவர்கள்தான் தங்களுக்கு பரிச்சயமானவர்கள் என்றும், விஜய் குறித்து அதிகம் தெரியாது என்றும் அவர் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதோடு நின்றுவிடாமல், விஜய்யின் சமூக வலைதள பிரபலத்தையும் சுதீஷ் கடுமையாக விமர்சித்துள்ளார். விஜய்க்கு ஆதரவாக தனியாக ஐடி விங் போன்ற அமைப்புகள் செயல்பட்டு, சமூக வலைதளங்களில் அவரது பெயரை இந்திய அளவில் பெரிதுபடுத்தி வருவதாக அவர் குற்றம்சாட்டியதாக கூறப்படுகிறது. சமூக ஊடகங்களை தவறாக பயன்படுத்துவதாகவும், அவற்றை விலைக்கு வாங்கியதாக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவதாகவும் அவர் விமர்சித்துள்ளார். ஆனால் சமூக ஊடகங்களில் ஒரு தலைவரின் பிரபலத்தை மட்டும் வைத்து அவரது உண்மையான அரசியல் ஆதரவை அளவிட முடியுமா என்பதும் விவாதிக்க வேண்டிய விஷயமாக உள்ளது.

இந்த நிலையில் எல்.கே சுதீஷை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். விஜயகாந்த் என்ற மிகப்பெரிய அரசியல் ஆளுமை இல்லாமல் இருந்திருந்தால், சுதீஷைன் இன்றைய அரசியல் அடையாளம் கிடைத்திருக்குமா என்ற கேள்வியை அவர்கள் முன்வைத்துள்ளார்கள். ஆரம்பத்தில் எந்தக் கட்சியில் உறுப்பினராக இருந்தார், வட்டச் செயலாளர், நகரச் செயலாளர், மாவட்டச் செயலாளர் என படிப்படியாக அரசியலில் வளர்ந்தாரா என்ற கேள்விகளும் எழுப்பப்பட்டுள்ளது.

இதனால் விஜய்யை தேமுதிக தரப்பினர் தொடர்ந்து விமர்சிப்பது வெறும் தனிப்பட்ட கருத்து மோதலா அல்லது எதிர்கால கூட்டணி மற்றும் தேர்தல் கணக்குகளின் தொடக்கமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. விஜய்யின் அரசியல் வளர்ச்சியை குறைத்து மதிப்பிட வேண்டும் என்று ஒரு தரப்பு கூறுகிறது; சமூக வலைதள பிரபலத்தை தாண்டி களத்தில் அவருக்கு என்ன ஆதரவு இருக்கிறது என்பதுதான் முக்கியம் என்று மற்றொரு தரப்பு வாதிடுகிறது. ஆனால் அரசியலில் இறுதி தீர்ப்பை சமூக வலைதளங்களோ, மேடைப் பேச்சுகளோ வழங்குவதில்லை. தேர்தல் களத்தில் மக்கள் அளிக்கும் வாக்குதான் யார் உண்மையான மாஸ், யார் வெறும் மீடியா மாஸ் என்பதை முடிவு செய்யும்.

Avatar photo
Bala Siva

டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.