செய்திகள்

அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சி.. நீராவி குளியல்.. சேலம் ஜிம் உரிமையாளர் உயிரிழந்தது எப்படி?

சேலம்: அதிக நேரம் உடற்பயிற்சி செய்த ஜிம் உரிமையாளர் சேட்டு என்பவர் குளியல் அறையில் பரிதாபமாக உயிரிழந்தார். அப்படி எப்படி உயிரிழந்தார் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

சேலம் கோட்டை பகுதியை சேர்ந்தவர் சேட்டு என்ற மகாதிர் மகமுத் (வயது 35) என்பவர் குகை ஆற்றோர வடக்கு தெருவில் சொந்தமாக ஜிம் ஒன்றை வைத்து நடத்தி வந்தார். இவர், தினமும் அவருடைய ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் சேட்டு ஜிம்மில் உடற்பயிற்சியில் ஈடுபட்டார். இரவு 8 மணி அளவில் ஜிம்முக்கு வந்த அனைவரும் உடற்பயிற்சியை முடித்துக்கொண்டு சென்று விட்டார்கள். ஆனால் சேட்டு மட்டும் தொடர்ந்து உடற்பயிற்சியில் ஈடுபட்டு இருந்துள்ளார்.

பின்னர் ஜிம்மில் உள்ள குளியல் அறையில் குளிக்க போனார். ஆனால் வெகுநேரம் ஆகியும் வெளியே வரவில்லை. இதனால் அவருடைய கார் டிரைவர் முஸ்தபா ஜிம்முக்கு சென்று பார்த்த போது, திறக்கவில்லை.. சந்தேகம் அடைந்த முஸ்தபா குளியல் அறை கதவை தட்டினார். பதில் இல்லை. முஸ்தாபவின் சத்தம் கேட்டு ஜிம்மிற்கு ஓடி வந்து அக்கம் பக்கத்தினர் பார்த்தனர். அவர்கள் குளியல் அறை கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு தலை மற்றும் காதில் ரத்தம் வழிந்த நிலையில் சேட்டு மூச்சுபேச்சு இல்லாமல் அசைவின்றி தரையில் கிடந்துள்ளார். உடனே அவரை தூக்கிக்கொண்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை டாக்டர்கள் பரிசோதித்தபோது அவர் ஏற்கனவே இறந்துவிட்டார்..

இது குறித்து தகவல் அறிந்த சேலம் போலீசார் ஜிம்மிற்கு சென்று பார்வையிட்டனர். பின்னர் அங்குள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை பார்வையிட்டு ஆய்வு நடத்தினர். இதுகுறித்து போலீசார் கூறும்போது, அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சியில் ஈடுபட்ட அவர் நீராவியில் குளித்து உள்ளார். இதனால் மயக்கம் ஏற்பட்டு கீழே விழுந்து அவர் இறந்திருக்கலாம் என்று போலீசார் கூறினார்கள்.

தினமும் கடினமாக உடற்பயிற்சியில் ஈடுபட்டு உடலை ஆணழகன் போல் கட்டுக்கோப்பாக வைத்திருந்த அவர், அதிகப்பட்சமாக 150 முதல் 200 கிலோ வரை எடை தூக்குவார் என்று நண்பர்கள் கூறுகிறார்கள். அளவுக்கு அதிகமான பயிற்சி உயிரை பறித்தாக கூறப்படுகிறது.,

Avatar photo
Keerthana

நான் கீர்த்தனா, கடந்த 8 வருடங்களாக ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். தமிழ் மினிட்ஸ் இணையதளத்தில் சப் எடிட்டராக இருக்கிறேன். தமிழகம், அரசியல், கிரைம், ட்ராவல்/பயணம், வேலைவாய்ப்பு, பொழுதுபோக்கு, வணிகம் செய்திகள் எழுதுவதில் மிகுந்த ஆர்வம் உள்ளவள்.