வரிகளால் வாழ்க்கை கொடுத்த வாலி.. தேவா முன்னனி இசையமைப்பாளர் ஆனது இப்படித்தான்..

தமிழ் சினிமாவில் இளையராஜாவின் காலம் கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்த நேரம் அது. எஸ்.ஏ.ராஜ்குமார், ஏ.ஆர்.ரஹ்மான் போன்றோர் மற்றொரு பாணியில் கலக்கிக் கொண்டிருக்க தேனிசையாய் வந்து இசையை தென்றலாய் மாற்றியவர்தான் தேவா.

1989-ல் மனசுக்கேத்த மகராசா படம் மூலமாக அறிமுகமான தேனிசைத் தென்றல் தேவா தனது அடுத்த படமான வைகாசி பொறந்தாச்சு படத்தில் கவனிக்க வைத்தவர். இப்படம் இவருக்கு தமிழக அரசின் சிறந்த இசையமைப்பாளர் விருதினைக் கொடுக்க தொடர்ந்து பல ஹிட் பாடல்களைக் கொடுத்தார்.

இசைஞானி ஒருபக்கம், ஏ.ஆர்.ரஹ்மான் ஒருபக்கம் என இசை சாம்ராஜ்யம் நடத்திக் கொண்டிருக்க தேவாவின் பாடல்கள் தனி ஆளுமையைக் கொண்டு ஹிட் அடித்தது.. அப்போது வளர்ந்து வந்த ஹீரோக்களான அஜீத், பிரசாந்த், விஜய், சரத்குமார் போன்றோருக்கு தேவாவின் இசையில் அமைந்த பாடல்கள் அவர்களை மிகுந்த பிரபலமடையச் செய்தது. மேலும் ரஜினியுடன் அண்ணாமலை, பாட்ஷா, அருணாச்சலம் என தொடர் வெற்றிகளையும், தனது தனித்துவ குரலில் கானா பாடல்களுக்கு அடையாளம் கொடுத்தும் வெற்றிகளைக் குவித்தார்.

இளையராஜாவிடமிருந்து வராத அழைப்பு.. திரைக்கதை மன்னன் இசையமைப்பாளராக மாறியது இப்படித்தான்..

இப்படி தேனிசைத் தென்றலாய் வலம் வரும் தேவாவிற்கு முதன்முதலாக சினிமா கதவைத் திறந்தவர் கவிஞர் வாலிதான். தேவா, முதன் முதலில் கார்த்திக் நடிப்பில் வெளியான நீலக்குயிலே நீலக்குயிலே படத்திற்குதான் இசையமைக்க கமிட் ஆகியுள்ளார். இரண்டு தயாரிப்பாளர்கள் தயாரித்த இந்த படத்தில், ஒருவருக்கு தேவா இசையமைப்பது விரும்பவில்லை. ஆனாலும் மற்றொரு தயாரிப்பளார் தேவா இசையமைத்தால் நன்றாக இருக்கும் என்று கூறியதால், விருப்பம் இல்லாமல் ஒப்புக்கொண்டுள்ளார்.

இதனிடையே ஒருநாள் தேவா போட்ட டியூனை வேண்டாம் என்று கூறிய அந்த தயாரிப்பாளர், நாளை கவிஞர் வாலி வருகிறார். உங்கள் தலையெழுத்து அன்றுதான் இருக்கிறது என்று சொல்லிவிட்டு சென்றுள்ளார். சொன்னபடியே வாலி வந்து தேவாவின் டியூன்களைக் கேட்க அவருக்கு மிகவும் பிடித்துப் போய் விட்டது. அதன்பின் வாலி தனது வரிகளில் ‘ஆரம்பம் நல்லாருக்கு வயலெல்லாம் நெல்லா இருக்கு’’ என்று பாடல் எழுத ஒதுக்கிய அந்த தயாரிப்பாளர் அதன்பிறகு தேவா இசையமைக்க ஒப்புக் கொண்டார். இந்தப் படம் 1990-ல் வெளிவந்தது.

அதன்பின் தேவா மளமளவென பல படங்களில் இசையமைக்கத் துவங்கினார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews