என் படத்துல கண்ணதாசன் பாட்டு எழுதக்கூடாது.. எம்ஜிஆர் போட்ட ஸ்ட்ரிக்ட் ஆர்டரின் பின்னணி என்ன?

தமிழ் சினிமாவின் மிக முக்கியமான பாடலாசிரியர் மற்றும் கவிஞராக இருந்தவர் கண்ணதாசன். எம்ஜிஆர், சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்த ஏராளமான படங்களுக்கு பாடல்களை எழுதி உள்ளார். அதே போல, சில திரைப்படங்களை தயாரித்துள்ள கண்ணதாசன், சிறு சிறு கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். மேலும் சில படங்களுக்கு திரைக்கதை, வசனமும் எழுதி உள்ள கண்ணதாசனின் பல பாடல்கள், அவரது வரிகளுக்காகவே ரசிகர்கள் பலரையும் ஈர்க்க செய்தது.

அந்த காலத்து திரைப்படத்திற்கு கண்ணதாசனின் வரிகளில் மிகவும் சுவாரஸ்யமான விஷயத்தை அதே வேளையில் மக்களுக்கு தேவையான கருத்துக்களை மிக அழகாக படத்தின் கதை ஓட்டத்திலே சொல்லக்கூடிய வல்லமை படைத்தவர். எம். எஸ். விஸ்வநாதன், விஸ்வநாதன் – ராமமூர்த்தி உள்ளிட்ட பல பிரபல இசை அமைப்பாளர்களுடனும் இணைந்து பணிபுரிந்த கண்ணதாசன், ஒரு காலத்தில் வறுமையின் பிடியில் சிக்கித் தவித்ததும், பின்னர் எம். எஸ். விஸ்வநாதன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானதுடன் தனக்கான ஒரு தடத்தையும் பதித்தவர் ஆவார்.

இன்றளவிலும் கண்ணதாசனின் பாடல் வரிகள் பலருக்கு புதுமையாக தோன்றும் அளவிற்கு மக்களை கவரும் வகையிலும் அமைந்துள்ளது. அப்படி இருக்கையில், எம்ஜிஆர் கண்ணதாசன் இடையே இருந்த மோதல் பற்றி காணலாம். கண்ணதாசன் எழுதி இருந்த புத்தகம் ஒன்றில் அவருக்கும் எம்ஜிஆருக்கும் இடையே இருந்த மோதல் குறித்து குறிப்பிட்டுள்ளார்.

அவர்கள் இருவரும் திமுகவில் இருந்த போது தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் எம்ஜிஆரை வைத்து ஒரு திரைப்படம் தயாராக்க முடிவு செய்திருந்தார் கண்ணதாசன். ஆனால், சில காரணங்களால் எம்ஜிஆர் நடிக்க முடியாமல் போக, பெரிய நட்சத்திரம் யாரும் இல்லாமல் ‘மாலையிட்ட மங்கை’ என்ற படத்தை உருவாக்கினார். எம்ஜிஆர் நடிக்க இருந்த கதாபாத்திரத்தில் டி.ஆர். மகாலிங்கம் நடித்திருந்தார். மேலும் இந்த படத்தை கட்சிக்காரர்கள் ஏற்று கொள்ளாமல் போனால் படம் தோல்வி அடையும் என கருதிய கண்ணதாசன், எங்கள் திராவிட பொன்நாடே என்ற பாடலை வைத்து தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் பாராட்டை பெற செய்தார். இந்த படமும் பெரிய வெற்றி பெற்றிருந்தது.

தொடர்ந்து திமுகவில் இருந்து கண்ணதாசன் விலகிய பின்னர், எம்ஜிஆர் படத்தில் பாடல்கள் எழுதவும் இல்லை. அந்த சமயத்தில் தான் வாலி, புதுமைபித்தன் உள்ளிட்ட பாடலாசிரியர்கள், எம்ஜிஆர் படங்களுக்கு பாடல் எழுதவும் ஆரம்பித்தனர். 1977 ஆம் ஆண்டு எம்ஜிஆர் முதல் முறையாக முதலமைச்சர் ஆன சமயத்தில், கருத்து வேறுபாடை தாண்டி கண்ணதாசனை அரசவை கவிஞாராக்கி அழகு பார்த்தார்.

இதன் பின்னர் ஒரு முறை எம்ஜிஆர் பற்றி குறிப்பிட்டிருந்த கண்ணதாசன், ‘என் படங்களுக்கு கண்ணதாசன் தான் பாடல்கள் எழுத வேண்டும் என எம்ஜிஆர் சொன்ன காலமும் உண்டு. கண்ணதாசன் என் படங்களுக்கு எழுதவே கூடாது என சொன்ன நாட்களும் உண்டு. ஆனால், என் பாடல் மற்றும் கவிதைகளை எம்ஜிஆர் பாராட்டியது போல யாரும் பாராட்டியதே இல்லை. நண்பர் என பாராட்டி அவர்களின் முதுகில் குத்தும் பழக்கம் எம்ஜிஆருக்கு இல்லை. இது தான் அவரோட தத்துவம்’ என கண்ணதாசன் குறிப்பிட்டுள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews