இளையராஜாவின் முதல் பாடல் பிறந்த கதை.. அன்னக்கிளியே உன்னைத் தேடுதே.. இப்படித்தான் உருவாச்சா?

மேடைக் கச்சேரிகளிலும், கம்யூனிஸ்ட் மேடைகளிலும் தனது சகோதரர்களுடன் இணைந்து இசையமைத்துக் கொண்டிருந்த இளையராஜா முதன் முதலாக சினிமாவிற்கு இசையமைக்க சென்னை வருகிறார். சில இசையமைப்பாளர்களிடம் உதவியாளராகப் பணியாற்றிக் கொண்டே வாய்ப்புத் தேடுகிறார். மேலும் தனக்குக் கிடைத்த ஓய்வு நேரங்களில் புதுப் புது மெட்டுக்களையும் உருவாக்கி வைக்க ஒருநாள் நிகழ்சி ஒன்றில் இசையமைக்க பஞ்சு அருணாச்சலம் இவரின் திறமையைக் கண்டு தான் எடுக்கப் போகும் அடுத்த படத்திற்கு இளையராஜாவை இசையமைக்க ஒப்பந்தம் செய்கிறார்.

இவ்வாறாக 1976-ல் அன்னக்கிளி உருவானது. பாடல்களைக் கேட்ட அனைவரும் ஒருகனம் சொக்கிப் போய் விடுகின்றனர். இளையராஜாவின் இசையானது மனதைத் துளைத்து மூளையைச் சலவை செய்து ஏதோ உடம்பினில் ஒரு புதுவித உயிர்ப்பைக் கொடுக்க ரசிகர்கள் இளையராஜாவை தூக்கிக் கொண்டாட ஆரம்பித்தனர். அதன்பிறகு இன்று இளையராஜா இருக்கும் உச்சம் யாருக்கும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. எந்த இசையைக் கேட்டாலும், இறுதியாக அது இசைஞானியின் இசை மட்டுமே ஒரு முழுமையைக் கொடுக்கும்.

16 வயதினிலே ‘சப்பாணி, மயில்‘ கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்களா? சீக்ரெட் சொன்ன பாரதிராஜா

இதனை அனுபவப் பூர்வமாக உணர்ந்தவர்களுக்கு மட்டுமே தெரியும். இப்படி பஞ்சு அருணாச்சலம் இளையராஜாவை அறிமுகப்படுத்த முதல் பாடலை இசையமைக்கத் தயாரானார் இசைஞானி இளையராஜா. இதற்கான மெட்டை அவர் எங்கிருந்து எடுத்தார் தெரியுமா? தனது சொந்த ஊரான பண்ணைப்புரம், உத்தமபாளையம் பகுதிகளில் வயலில் வேலை செய்யும் பெண்கள் களைப்பு தெரியாமல் இருக்க பாடும் நாட்டுப்புறப் பாடல் தான் இவருக்கு அடிநாதமாக அமைந்தது.

உடனே ஹார்மோனியத்தை எடுத்தவர்..

“மழை பேஞ்சா மழை பேஞ்சா வெதவெதச்சி நாத்து நாட்டு கருதறுத்து
போரடிக்கப் போன மாமன் பொழுதிருக்க வருவாரோ..”

என்ற நாட்டுப்புறப் பாடலுக்கு மெட்டமைக்க

“அன்னக்கிளி ஒன்னத் தேடுதே
ஆறு மாசம் ஒரு வருஷம் ஆவரம்பூ மேனி வாடுதே..”

என்று பஞ்சு அருணாச்சாலம் அதனைப் பூர்த்தி செய்தார். இப்படித்தான் இளையராஜாவின் முதல் பாடல் உருவாகியிருக்கிறது. தான் பிறந்து வளர்ந்த மண்ணின் மகிமையையும், நாட்டுப்புறப் பாடலின் வல்லமையையும் தனது முதல் பாட்டிலேயே கொண்டு வந்து நிறுத்தி பின்னாளில் மண் மணம் வீசும் பாடல்களுக்கு சொந்தக்காரராகிப் போனார் இளையராஜா.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews