அதென்ன திரிபுராரி பௌர்ணமி? அன்று தானம் செய்தால் இவ்ளோ பலன்களா…?!

கார்த்திகை மாதம் என்றாலே தீபம் தான் நம் நினைவுக்கு வரும். இந்த மாதம் முழுவதும் வீடுகளின் வாசல்களில் மாலை நேரத்தில் அகல்விளக்கு ஏற்றுவர்.

இப்படி வீடு முழுவதும் அகல்விளக்கு தீபமானது திருக்கார்த்திகை அன்று வீடு முழுவதும் ஏற்றப்படும். அப்போது வீட்டைப் பார்க்கும்போது சொர்க்கலோகத்திற்கே சென்றது போல அப்படி ஒரு அழகு. அது கண்கொள்ளாக் காட்சி தான்.

எத்தனை மின்விளக்குகளை செயற்கையாகப் போட்டாலும் அது இந்த கார்த்திகை தீப ஒளிக்கு ஈடாகாது. இது எதற்காக ஏற்றுகின்றனர்? தீபம் ஏற்றினால் என்னென்ன பலன்கள் உண்டாகும் என பார்ப்போமா…

தமிழ் மாதமான கார்த்திகை மாதத்தில் திருக்கார்த்திகை தீபம் மிக விஷேசமாக கொண்டாடப்படுவது வழக்கம். சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் அக்னித் தலமாக விளங்குவது திருவண்ணாமலை. அன்று திருவண்ணாமலையில் அகண்ட தீபம் ஏற்றப்படும். இது மகா தீபம் என்று அழைக்கப்படுகிறது.

பௌர்ணமி, அமாவாசை திதிகள், இறை வழிபாடு முன்னோர் வழிபாட்டிற்கு உரியது. முழு நிலவு நாளில் ஆலயங்களில் அற்புத திருவிழாக்கள் நடைபெறும். சித்திரை பௌர்ணமி தொடங்கி பங்குனி உத்திரம் வரை ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி நாளில் பல விஷேசங்கள் நடைபெறுகின்றன.

karhigai pournami
karhigai pournami

கார்த்திகை மாத பௌர்ணமி நாளில் விரதம் இருந்து சிவனை வழிபாடு செய்வதால் பிரகாசமான எதிர்காலம் அமையும். கார்த்திகை பௌர்ணமி அன்று அம்மையையும் அப்பனையும் நினைத்து மேற்கொள்ளும் இவ்விரத முறை உமாமகேஸ்வரர் விரதம் என்று அழைக்கப்படுகிறது.

திரிபுராரி பௌர்ணமி

கார்த்திகை மாதத்தின் வளர்பிறையின் முழு நிலவு நாள் கார்த்திகை பௌர்ணமி. இதை திரிபுராரி பவுர்ணமி என்றும் அழைக்கின்றனர். இன்று நாம் செய்யும் தானம் ஆயிரம் மடங்கு பலன்களைத் தரும் என்பதால், இன்று தானம் வழங்குவதற்கான நாளாகவும் அனுசரிக்கப்படுகிறது.

ஒளி வடிவாக இறைவனை வழிபடும் நாளான கார்த்திகை பவுர்ணமியன்றுதான், பிரம்மாவும், விஷ்ணுவும், ஐயன் சிவபெருமானின் அடி-முடி காணாமல் இருவரும், இறைவனை தீபத்தின் வழியாக அழைப்பதாகும்.

ஜோதிப்பிழம்பாக சிவன்

மேலும் கார்த்திகை மாதத்தில், கார்த்திகை நட்சத்திரத்தில் வரும் பவுர்ணமி தினத்தன்று, சிவபெருமான் ஜோதிப்பிழம்பாக காட்சி தந்த நாளை திருக்கார்த்திகை தீபமாக திருவண்ணாமலையில் மகா தீபமாக ஏற்றுவது காலம் காலமாக இருந்து வரும் வழக்கம்.

கார்த்திகை மாத பௌர்ணமியன்று விளக்கேற்றினால் ஐஸ்வரியம் பெருகும், நிலைத்த புகழ் ஏற்படும். . இன்றைய தினம் நாள் முழுவதும் உண்ணாமல் விரதம் இருந்து சிவபெருமானை நினைத்து பாடல்களை பாடி வழிபாடு செய்ய வேண்டும்.

Agal vilakku 2
Agal vilakku

நாள் முழுவதும் விரதம் இருக்க முடியாதவர்கள் ஒருவேளை மட்டும் உணவருந்தி விரதம் அனுஷ்டிக்கலாம். மாலையில் சிவன் கோவிலுக்கு சென்று நெய்தீபம் ஏற்றி வழிபாடு செய்த பின்னர் விரதத்தை நிறைவு செய்யலாம். இதனால் நாம் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கிவிடும் என்பது நம்பிக்கை.

இந்த இனிய தருணம் டிசம்பர் 7 பௌர்ணமி வருகிறது. ஆனால் டிசம்பர் 6லேயே திருக்கார்த்திகை கொண்டாடப்படுகிறது. அன்று மாலை திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்படுகிறது. பக்தர்கள் அன்று விரதம் இருந்து அண்ணாமலையாரைத் தரிசித்து வருவர்.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews