சினிமாவில் நெல்லை தமிழ் பிரபலமாக காரணமானவர்.. கிணத்தை காணோம்-னு வடிவேலு கதிகலங்க வெச்ச நடிகர்

Nellai Siva : தமிழ் சினிமாவில் பல காமெடி காட்சிகள் புதுமை கலந்து காலம் கடந்தும் நிலைத்து நிற்கக் கூடிய வகையில் அமைந்திருக்கும். இது பற்றிய பட்டியலை போட்டால் அதன் வரிசை நீண்டு கொண்டே போகும். அதில் முக்கியமான ஒரு காமெடி தான் வடிவேலுவின் ‘கிணத்தை காணோம்’ காட்சி. தனது கிணறு காணாமல் போனதாக கூறி ஒட்டுமொத்த காவல்துறையையும் கதிகலங்க விட்டிருப்பார் வடிவேலு. அதில் வடிவேலுவால் மாட்டிக் கொண்டு தவிக்கும் போலீஸ் கேரக்டரில் நடித்தவர் தான் நடிகர் நெல்லை சிவா.

தமிழில் பல மாவட்ட மொழி வழக்குகள் சினிமாவிலும் அதிக பிரபலமாக இருப்பதற்கு சில நடிகர்கள் முக்கிய பங்கு வகிப்பார்கள். அதில் நெல்லை தமிழ் சினிமாவில் பரவலாக இருந்ததற்கு ஒரு முக்கிய காரணம் நெல்லை சிவா தான். 1952 ஆம் ஆண்டு நெல்லையில் பிறந்த இவர், சிவாஜிகணேசனின் தீவிர ரசிகர் ஆவார். அவரது நடிப்பை கண்டே அவர் சினிமாவில் சேர்வதற்காக சென்னை வந்தார்.

பல போராட்டங்களுக்கு பிறகு அவருக்கு ஆண்பாவம் படத்தில் ஒரு கேரக்டரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு வெற்றி கொடி கட்டு, மகா பிரபு, கண்ணும் கண்ணும், சாமி, திருப்பாச்சி உள்ளிட்ட பல இடங்களில் நடித்தார். என் ஆசை மச்சான், சீவலப்பேரி பாண்டி, ராவணன் போன்ற படங்களில் அவர் சூப்பர் கேரக்டரில் நடித்தார். மேலும் டாட்டா பிர்லா, உன்னை தேடி, சுயம்வரம், கண்ணன் வருவான் போன்ற படங்களில் நடித்தார்.

அஜீத் நடித்த ரெட் திரைப்படத்திலும், கமல்ஹாசன் நடித்த அன்பே சிவம் திரைப்படத்திலும், விக்ரம் நடித்த சாமி திரைப்படத்திலும், பிரசாந்த் நடித்த வின்னர் திரைப்படத்திலும், விஜய் நடித்த திருமலை திரைப்படத்திலும் அவர் காமெடி கேரக்டரில் நடித்திருந்தார். குறிப்பாக திருமலை திரைப்படத்தில் விஜய்யின் நண்பர்களில் ஒருவராக நடித்திருப்பார்.

nellai siva 1

அதன் பின்னர் திருப்பாச்சி, ஒரு நாள் ஒரு கனவு, வெற்றிவேல் சக்திவேல், பாரிஜாதம், வட்டாரம், மணிகண்டா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தமிழ் திரை உலகில் மட்டும் அவர்  சுமார் 100 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். அவரது பிளஸ் பாயிண்ட் அவரது நெல்லை தமிழ் தான். அவரது நெல்லை தமிழுக்காகவே பல இயக்குனர்கள் அவருக்கு வாய்ப்பு கொடுத்த கதையும் உள்ளது.

வடிவேலு, விவேக் ஆகிய இரண்டு நகைச்சுவை நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ள நெல்லை சிவா, 35 ஆண்டுகள் தமிழ் சினிமாவில் வலம் வந்துள்ளார். திரைப்படங்களில் மட்டுமின்றி ஒரு சில தொலைக்காட்சி தொடர்களிலும் அவர் நடித்துள்ளார். குறிப்பாக விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர் சீரியலில் அவர் குமரேசன் மாமா என்ற கேரக்டரில் நடித்திருந்தார். அதேபோல் மாமா மாப்பிள்ளை என்ற சீரியலிலும் அவர் நடித்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு மே மாதம் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் அவர் காலமானார். அவரது இறுதிச் சடங்கு அவரது சொந்த ஊரான நெல்லையில் நடந்தது. அவர் மறைந்தாலும் திரைப்படங்களில் அவர் பேசிய நெல்லை தமிழ் காலம் கடந்து நிலைத்து நிற்கும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...