அண்ணாமலை கைக்கு வந்த ஈரோடு கிழக்கு பந்து.. அதிமுக தலைவர்கள் சந்திப்பு!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இந்த இடைத்தேர்தல் காரணமாக அரசியல் கட்சிகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

திமுக கூட்டணியை பொறுத்தவரை காங்கிரஸ் கட்சி மீண்டும் போட்டியிடும் என தெரிவித்ததை அடுத்து அந்த கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் அதிமுக கூட்டணியில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

அதிமுகவே தற்போது இரண்டு பிரிவுகளாக இருக்கும் நிலையில் இதில் எந்த பிரிவு போட்டியிடும் அல்லது இரண்டு பிரிவுகளும் போட்டியிடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அது மட்டும் இன்றி அதிமுக கூட்டணியில் உள்ள பாஜகவிற்கு இந்த தொகுதியில் போட்டியிட வேண்டும் என்றால் எண்ணம் உள்ளது. அதற்கு அதிமுகவின் இரண்டு பிரிவுகளும் சம்மதிக்குமா என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

அதிமுக கூட்டணியில் ஏற்கனவே இந்த தொகுதியில் போட்டியிட்ட தமிழ் மாநில காங்கிரஸ், ஈரோடு கிழக்கு தொகுதியை விட்டு கொடுத்த படியால் தற்போது ஒரு சின்ன குழப்பம் நீங்கி உள்ளது. இருப்பினும் அதிமுகவின் எந்த அணி போட்டியிடும் என்பதை அண்ணாமலை தீர்மானிப்பாரா? அல்லது பாஜக மேலிடம் தீர்மானிக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை அதிமுகவின் எடப்பாடி பழனிச்சாமி பிரிவின் மூத்த தலைவர்கள் இன்று சந்தித்துள்ளனர். அவர்கள் இது குறித்து அண்ணாமலையுடன் ஆலோசனை செய்ததாகவும் அதிமுக நிறுத்தும் வேட்பாளருக்கு பாஜக ஆதரவளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. அதற்கு அண்ணாமலை ஒப்புக்கொள்வாரா? அல்லது அந்த தொகுதியை தங்களுக்கு விட்டுக் கொடுக்க வேண்டும் என அதிமுகவிடம் கோரிக்கையை வைப்பாரா? என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இந்த நிலையில் அதிமுகவின் இன்னொரு பிரிவின் தலைவரான ஓபிஎஸ் விரைவில் அண்ணாமலையை சந்திக்க இருப்பதாகவும் அவரும் தனக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே பாஜக போட்டியிட்டால் தான் ஆதரவு அளிக்க தயார் என ஓபிஎஸ் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews