சினிமாவில் நடிச்சே தீருவேன்.. 4 நாள் உண்ணாவிரதம் இருந்து நம்பர் 1 நடிகையாக மாறிய சாந்தகுமாரி..

இன்றைய காலகட்டத்தில் நாளுக்கு நாள் ஏராளமான நடிகைகள் அறிமுகமாகி வந்த வண்ணம் உள்ளனர். ஆனால், சுமார் 50 முதல் 60 ஆண்டுகளுக்கு முன்பாக தங்களின் குடும்ப சூழலை தாண்டி அவர்கள் சினிமாவுக்கு நடிக்க வருவதே பெரிய சவாலாக தான் பல நடிகைகளுக்கு இருந்தது. அப்படி சில தடைகளை கடந்து தனது உறுதியால் ஜெயித்த நடிகை பற்றி தற்போது காணலாம்.

நடிகை சாந்தகுமாரி சிறு வயதிலேயே நடனம், நாட்டியம், பாடல் பாடுவது ஆகியவற்றில் மிகுந்த ஆர்வத்துடன் இருந்தார். ஆந்திர பிரதேச மாநிலத்தில் உள்ள கடப்பா பகுதிகளில் பிறந்த இவர் சிறுவயதிலேயே முறையாக சங்கீதத்தை கற்றுக் கொண்டார். அவர் சங்கீத ஆசிரியராக மாதம் இரண்டு ரூபாய் சம்பளத்தில் ஆந்திரா பள்ளி ஒன்றில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அவர் பாட்டு பாடும் அழகை பார்த்த இயக்குனர் ஒருவர் அவரை தனது கன்னட படத்திற்கு முக்கிய கேரக்டரில் நடிக்க அனுமதி கோரினார்.

ஆனால் சாந்தகுமாரியின் பெற்றோர்கள் சினிமாவில் தங்கள் மகள் நடிக்க மாட்டார் என்றும் அவரை நாங்கள் ஒரு சங்கீத வித்வான் ஆக்க மாற்ற முடிவு செய்துள்ளதாகவும் கூறினார். ஆனால் தனக்கு சினிமாவில் நடிக்க விருப்பம் என்று சாந்தகுமாரி கூறிய நிலையில் பெற்றோர் மறுத்ததால் உண்ணாவிரத போராட்டம் இருந்தார். நான்கு நாட்கள் அவர் தண்ணீர் கூட குடிக்காமல் உண்ணாவிரதம் இருந்ததையடுத்து அவரது பெற்றோர் வேறு வழியில்லாமல் சினிமாவில் நடிக்க ஒப்புக்கொண்டனர். அவரது முதல் படம் அப்படித்தான் உருவானது.

santhakumari

இதனை அடுத்து தெலுங்கில் அவருக்கு பல திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதனால் ஒரு சில ஆண்டுகளிலேயே அவர் பிசியான நடிகையாக குறிப்பாக 1940 களில் அவர் முன்னணி தெலுங்கு நடிகையாக உயர்ந்தார். இந்த நிலையில் 1948 ஆம் ஆண்டு பக்த ஜனா என்ற திரைப்படத்தின் மூலம் அவர் தமிழில் அறிமுகமானார். இந்த படத்தை தயாரித்தவர் புல்லையா என்பவர். இவர்தான் பின்னாளில் சாந்தகுமாரியை திருமணம் செய்து கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழில் நடித்த முதல் படமே மிகப்பெரிய வெற்றி பெற்றதன் காரணமாக தமிழிலும் முன்னணி நடிகையாக உயர்ந்தார். வேலைக்காரி மகள், பொன்னி, பெண்ணின் பெருமை, சாரங்கதாரா, பொம்மை கல்யாணம், விடிவெள்ளி உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். 1960களில் அவர் தமிழ், தெலுங்கு என மாறி மாறி பிஸியாக நடித்துக் கொண்டிருந்தார்.

தமிழில் அவர் கடைசியாக பிரியாவிடை என்ற திரைப்படத்தில் நடித்திருப்பார். இதனிடையே, சுமார் 1979 ஆம் ஆண்டுக்கு பின்னர் அவர் நடிப்பதை நிறுத்திவிட்டார். கிட்டத்தட்ட 35 ஆண்டுகால சினிமா பயணத்தில் 250 படங்களில் சாந்தகுமாரி நடித்துள்ளார்.

1947 ஆம் ஆண்டு சாந்தகுமாரி புல்லையா தம்பதியினர் ராகினி பிக்சர்ஸ் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி ஒரு சில தெலுங்கு படங்களை தயாரித்தனர். மேலும் சாந்தகுமாரி மற்றும் அவரது கணவரின் திரை உலக சேவையை பாராட்டி இருவருக்குமே பத்மஸ்ரீ விருது வழங்கிய கௌரவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை சாந்தகுமாரி கடந்த 2006 ஆம் ஆண்டு தனது 85 ஆவது வயதில் காலமானார். அவர் மறைந்தாலும் அவர் நடித்து உருவான திரைப்படங்கள் என்றும் உயிரோடு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews