ஆபிஸ் பாய் டூ மக்கள் நாயகனான ராமராஜன்… ரஜினி, கமலுக்கே டஃப் கொடுத்த ஹீரோ

இன்றும் பொதுவெளிகளில் யாராவது கலர் கலராக ஜொலிக்கும் நிறங்களில் சட்டை அணிந்து சென்றாலோ அல்லது நம்மில் யாராவது அடிக்கிற கலர்களில் சட்டை அணிந்தாலோ என்ன ராமராஜன் கலர்ல சட்டை போட்டிருக்க என்ற கிண்டலடிப்பது வழக்கம்.

இவ்வாறு தமிழ் சினிமாவில் கிராமத்து வேடமா கூப்பிடுறா ராமராஜனை என்று சொல்லும் அளவிற்கு 1985 – 1995 களில் தமிழ் சினிமாவில் கொடிகட்டிப்பறந்தவர் ராமராஜன். அவரது படங்களில் அவரது கதாபாத்திரங்களைக் காட்டிலும் அவரது உடைகளே கவனம் ஈர்க்கும் அளவிற்கு கலர் கலராக உடைகள் அணிந்து ஜொலிப்பார்.

இயக்குநர் to ஹீரோவான ராமராஜன்

மதுரை மேலூரைச் சேர்ந்த ராமராஜன் சினிமா ஆசையில் சென்னை வந்து தொடக்கத்தில் சினிமா கம்பனியில் ஆபிஸ் பாயாக வேலையில் சேர்ந்தார். பின் அதே அலுவலகத்தில் வரவுசெலவு நிர்வாகியாக வேலை பார்த்தார். மேலும் அதே நிறுவனம் எடுத்த ஒரு திரைப்படத்தில் உதவி இயக்குநராக வேலை வாய்ப்பு கிடைக்க சினிமா துறையில் அடியெடுத்து வைத்தார்.

பின் தனி இயக்குநராக மண்ணுக்கேத்த பொண்ணு எனும் படத்தில் பாண்டியனை கதாநாயகனாக நடிக்க வைத்து இயக்குநராக அறிமுகனார். இவரது இயக்கத்தில் வந்த படங்கள் தொடர்ந்து தோல்வியைத் தழுவிய நிலையில், நம்ம ஊரு நல்ல ஊரு என்ற படத்தில் கதாநாயகனாக கேமராவின் முன்னால் அறிமுகமாக  அந்த படம் 100 நாள் வெற்றி கண்டது.

தொடர்ந்து நாயகனாகவே நடிக்க  கரகாட்டக்காரன் படம் உச்சத்தில் ஏற்றி வைத்தது,. கிட்டத்தட்ட ஒரு வருடங்கள் ஓடிய கரகாட்டக்காரன் அப்போது வெளிவந்த ரஜினி, கமல் படங்களை பின்னுக்கு தள்ளி இவரை தனி அடையாளமாக்கியது. இன்றும் இளையராஜா, கங்கை அமரன், ராமராஜன் காம்போ பாடல்கள் எங்காவது ஓரிடத்தில் கிராமங்கள் தோறும் ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது.

karakatakaran

தொடர்ந்து கிராமத்து பாணியில் வெற்றிப் படங்களைக் கொடுக்க அதன்பின் அரசியலில் நுழைந்தார். எம்.ஜி.ஆரின் தீவிர இரசிகராக இருந்ததால் அதிமுகவில் இணைந்து தலைமைக் கழக பேச்சாளராக உருவெடுத்தார்.

ஜெயலலிதா இவருக்கு திருச்செந்தூர் நாடாளுமன்றத் தொகுதியில் 1998 தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்க தேர்தலில் வென்று எம்.பி ஆனார். பின்னர் அரசியலில் பம்பரமாகச் சுழல நடிப்பிற்கு விடை கொடுத்தார். நடிகை நளினியை திருமணம் முடித்த ராமராஜன் பின்னாளில் கருத்துவேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர்.

விபத்து ஒன்றில் ராமராஜன் சிக்க அதன் பிறகு வாழ்க்கைப் பாதையே மாறியது. விபத்தில் ஓட்டுநர் உயிரிழக்க இவர் பலத்த காயங்களுடன் உயிர் பிழைத்தார். அதிலிருந்து மீண்டு வந்த அவர் 2012-ல் மீண்டும் மேதை படத்தை இயக்கி நடித்தார். ஆனால் இப்படம் தோல்வியைத் தழுவியது. தற்போது மீண்டும் சாமானியன் என்ற திரைப்படத்தில் நடிக்க படம் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews