இன்னும் ரிலீஸ் ஆகாத கமல் படத்தில் அறிமுகம்.. அனைத்து சூப்பர்ஸ்டார்களுடன் இணைந்து நடித்து முன்னணி நடிகரான பசுபதி..

திரையுலகில் நடிக்க வருபவர்கள் கூத்துப்பட்டறை மற்றும் சினிமா இன்ஸ்டியூட்டில் படித்து வருபவர்களுக்கு நீண்ட தூரம் திரைப்பயணம் இருக்கும் என்பதும் திரை உலகில் பலர் அவ்வாறு வந்தவர்கள் ஜெயித்திருக்கிறார்கள் என்பதும் நிதர்சனமான உண்மை. அந்த வகையில் கூத்துப்பட்டறையில் பயிற்சி பெற்று திரைக்கு வந்து இன்று சிறந்த நடிகராகவும் உயர்ந்திருப்பவர் பசுபதி.

தன்னுடைய வேலை திரையுலகம் தான் என்பதை முடிவு செய்த பின்னர் அவருக்கு நாசரின் நட்பு கிடைத்தது. அவருடைய அறிவுரையின்படி கூத்துப்பட்டறையில் பயிற்சி பெற்ற பசுபதி முதல் முதலாக கமல்ஹாசனின் அறிமுகம் கிடைத்ததால் மருதநாயகம் திரைப்படத்தில் வில்லனாக நடித்தார். ஆனால் அந்த படம் இன்று வரை ரிலீசாகவில்லை. இதன் பின்னர் கமலின் பல படங்களில் இணைந்து நடித்துள்ள பசுபதி, ரஜினிகாந்துடன் இணைந்து குசேலன் என்ற படத்திலும் நடித்திருந்தார்.

pasupathi 2

பார்த்திபன் இயக்கத்தில் உருவான ஹவுஸ்புல் என்ற திரைப்படத்தில் ஒரே ஒரு காட்சியில் மட்டும் தோன்றி நடித்தார். ஆனால் அந்த படம் அவருக்கு எந்த வகையிலும் கை கொடுக்கவில்லை. அதனை அடுத்து அவர் கன்னத்தில் முத்தமிட்டால், மாயன் ஆகிய படங்களை நடித்த நிலையில் பசுபதிக்கு திருப்புமுனையாக அமைந்த படம் தூள். அந்த படத்தில் அவர் ஆதி என்ற கொடூரமான வில்லனாக நடித்திருப்பார்.

இதனையடுத்து இயற்கை என்ற திரைப்படத்தில் கிறிஸ்தவ பாதிரியாராக நடித்திருப்பார். அதன்பின்னர் அனைத்து படங்களும் அவருடைய நடிப்பு திறமைக்கு தீனி போடும் வகையில் தான் இருந்தது. குறிப்பாக அருள், விருமாண்டி,  மதுர, திருப்பாச்சி, மும்பை எக்ஸ்பிரஸ், மஜா, வெயில் போன்ற பல படங்களில் நடித்தார். அதிலும் வெயில் படத்தில் அவர் குணச்சித்திர வேடத்தில் கலக்கியதுடன் படம் பார்த்த அனைவரையும் தனது கதாபாத்திரத்தின் மூலம் கண் கலங்கவும் வைத்திருந்தார். தொடர்ந்து மணிகண்டா, ராமன் தேடிய சீதை ஆகிய படங்களில் நடித்தவர், ரஜினிகாந்த் நடித்த குசேலன் திரைப்படத்தில் ஹீரோவாகவே நடித்தார். இந்த படத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் மட்டும் தான் நடித்தார்.

இந்த படத்தில் அவர் ரஜினியின் நண்பராக தனது முழு நடிப்பு திறமையை வெளிப்படுத்தி இருப்பார். பசுபதி நடிப்பில் பின்னர் வெளியான அரவான், அனாமிகா, இந்தியா பாகிஸ்தான், 10 எண்றதுக்குள்ள,  கருப்பன், வெண்ணிலா கபடி குழு 2, அசுரன் போன்ற படங்களும் அவருக்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்திருந்தது. வில்லன், குணசித்திர நடிகர் என்பதை தாண்டி காமெடி கலந்த கதாபாத்திரங்கள் மூலமும் பலரை கவர்ந்தவர் பசுபதி.

pasupathi 1

இதனை அடுத்து அவருக்கு மீண்டும் ஒரு திருப்புமுனை ஏற்படுத்திய படம் என்றால் அது ரஞ்சித் இயக்கத்தில் உருவான சார்பட்டா பரம்பரை தான். இந்த படத்தில் அவர் ரங்கன் வாத்தியார் என்ற வேடத்தில் நடித்திருந்ததை அடுத்து அவருக்கு சிறந்த துணை நடிகர் என்ற பிலிம்பேர் விருதும் கிடைத்தது.

கடந்த ஆண்டு அவரது நடிப்பில் தண்டட்டி என்ற திரைப்படம் வெளியான நிலையில் தற்போது அவர் தங்கலான் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கமல்ஹாசன், பிரபாஸ் நடிக்கும் கல்கி படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் பசுபதி நடித்து வருகிறார். ஐம்பது வயதைக் கடந்துள்ள பசுபதி, தொடர்ந்து முக்கியமான கதாபத்திரங்களில் நடித்து வரும் நிலையில், இன்னும் பல ஆண்டுகளுக்கு தமிழ் சினிமாவில் நிலைத்து நிற்பார் என்றே கருதப்படுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...