யார் இந்த ஓமக்குச்சி நரசிம்மன்… இப்படித்தான் இந்தப் பெயர் இவருக்கு வந்துச்சா..?

சினிமாவில் ஒரு நடிகரை அறிமுகப்படுத்தும் அவர் பெயரைச் சொல்லுவதை விட அவரது புனைப்பெயர்களைச் சொல்லும் போது சட்டென்று நினைவுக்கு வருவார்கள். அந்த வகையில் காக்கா ராதாகிருஷ்ணன், மேஜர் சுந்தரராஜன், இடிச்சபுளி செல்வராஜ், மேனேஜர் சீனு, ஒருவிரல் கிருஷ்ணாராவ் என எத்தனையோ நடிகர்களைச் சொல்லலாம். அதில் குறிப்பிடத்தகுந்தவர் ஓமக்குச்சி நரசிம்மன். வெறும் நடிகர் நரசிம்மன் என்றால் யாருக்கும் தெரியாது. ஒமக்குச்சி நரசிம்மன் என்று கூறும் போது இன்றைய 2k கிட்ஸ்-க்கு கூட ஞாபகத்தில் வரும் காமெடி நடிகர் அவர்.

ஔவையார் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நரசிம்மன். அதன்பிறகு எல்.ஐ.சியில் தனது பணியைத் தொடர்ந்திருக்கிறார். இருப்பினும் நடிப்பு மீது கொண்ட தீராத் தாகம் அவரை மீண்டும் சினிமாவிற்கு இழுத்தது. அதைத் தொடர்ந்து திருக்கல்யாணம் என்ற படத்தில் நடித்தார். அதன்பிறகு தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் என அத்தனை மொழிகளிலும் நடித்துப் புகழ் பெற்றார்.

திரையில் இவரது பாடிலாங்குவேஜ் கண்டாலே சிரிப்பு வரும் அளவிற்கு காமெடிக் காட்சிகளில் அசத்தியிருப்பார். தனியாக இவருக்கு காமெடிகள் இல்லையென்றாலும் பிறருடன் நடிக்கும் போது இவர் மட்டுமே முன்னிலையாகத் தெரிவார்.

லேட்டாக வந்த எஸ்.பி.பி. கிடைத்த கேப்பில் வாய்ப்பைப் பெற்ற பாடகர் மனோ..

இவருக்கு ஓமக்குச்சி என்ற பெயரைப் பெற்றுக் கொடுத்தது ஒரு நாடகம் தான். பிரபல நாடக இயக்குனர் தில்லைராஜனின், “நாரதரும் நான்கு திருடர்களும்” என்ற நாடகத்தில் நரசிம்மன், கராத்தே பயில்வான் வேடத்தில் நடித்தார். நகைச்சுவையாக இக்காட்சி அமைய வேண்டும் என்பதற்காக ஜப்பானைச் சேர்ந்த பிரபல கராத்தே வீரர் யாமக்குச்சியின் பெயரை நாடகத்தில் கதாபாத்திரத்தின் பெயராக வைக்க இயக்குனர் முடிவு செய்தபோது, தமிழில் அப்பெயரை ஓமக்குச்சி என்று வைத்தால் நகைச்சுவையாக இருக்கும் என்று நினைத்து, அப்பெயரையே வைத்தார். இந்த நாடகத்திற்கு மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைக்கவே நரசிம்மன் அன்றுமுதல் “ஓமக்குச்சி நரசிம்மன்” ஆனார்.

கவுண்டமணியுடன் பல படங்களில் இவர் ஏற்று நடித்த காட்சிகள் திரையையே  வெடிச் சிரிப்பலையில் ஆழ்த்தும். குறிப்பாக சூரியன் படத்தில் இடம்பெற்ற காமெடிக் காட்சிகளும், அந்த பின்னணி இசையும் ஓமக்குச்சி நரசிம்மனுக்காகவே இசைக்கப்பட்டது போல இருக்கும். சூரியன் படத்தில் இவர் நடித்த காமெடிக் காட்சிகள் இன்னும் எத்தனை ஆண்டுகளானாலும் மறையாத சூரியனாய் எவர்கிரீனாக நிலைத்திருக்கும். இவர் கடைசியாக நடித்த படம் தலைநகரம் என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews