4 வயசுலயே பெரியார் பேச்சை கேட்டேன்.. காமெடியில் தூள் கிளப்பும் லொள்ளு சபா மாறனின் தெரியாத இன்னொரு பக்கம்..

லொள்ளு சபா மூலம் பிரபலமானவர்கள் பலர் திரையுலகிலும் தங்களது நடிப்பு முத்திரையை பதித்து வருகின்றனர். அதில் மிக முக்கியமான ஒருவர் தான் லொள்ளு சபா மாறன். சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த இவர் இளம் பருவத்திலேயே தொலைக்காட்சியில் நடிக்க தொடங்கிவிட்டார். முதல் முதலாக அவர் ஜெயா டிவியில் காமெடி பஜார் என்ற நிகழ்ச்சியில் நடித்தார். அதன் பிறகு அவருக்கு சினிமா வாய்ப்பு கிடைத்தது.

சிபி சக்கரவர்த்தி நடித்த ’ஸ்டூடண்ட் நம்பர் ஒன்’ என்ற திரைப்படத்தில் தான் அவர் சிபியின் வகுப்பு தோழராக அறிமுகமானார். அதனை அடுத்து மிலிட்டரி, நீயே நிஜம், வஞ்சகன் போன்ற படங்களில் நடித்தார். ’தீபாவளி’ திரைப்படத்தில் ஜெயம் ரவியின் நண்பராக நடித்திருந்தார். தொடர்ந்து வீராப்பு, இனிமேல் நாங்க தான், மாதவி, போன்ற படங்களில் நடித்த நிலையில் தில்லுக்கு துட்டு திரைப்படத்தில் சந்தானத்துடன் இணைந்து நடித்தார். அந்த படத்தில் அவர் ஆசிரியர் கேரக்டரில் நடித்தார்.

lollu sabha manohar3

சக்க போடு போடு ராஜா, தில்லுக்கு துட்டு 2, ஏ1 என தொடர்ச்சியாக அவருக்கு சந்தானம் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. குறிப்பாக சபாபதி திரைப்படத்தில் அவர் திருடனாக நடித்து தூள் கிளப்பி இருப்பார். அதன் பிறகு சதீஷ் நாயகனாக நடித்த ’நாய் சேகர்’ என்ற திரைப்படத்திலும் ’காத்து வாக்குல ரெண்டு காதல்’ என்ற திரைப்படத்திலும் முக்கிய கேரக்டரில் மாறன் நடித்தார். மாறனை இன்னும் அதிகமாக மீம்வாசிகள் மத்தியில் பிரபலபடுத்திய படம் என்றால் அது டிக்கிலோனா தான். சந்தானம் நடித்த இந்த படத்தில், “இன்னும் என்னை நீ பைத்தியக்கரானாவே நினைச்சிட்டு இருக்கேல்ல” என மாறன் பேசிய வசனம், சிறந்த மீம் மெட்டீரியல்.

கடந்த ஆண்டு வெளியான கன்னித்தீவு, டிடி ரிட்டர்ன்ஸ் ஆகிய இரண்டு படங்களில் நடித்தவர் தற்போது சில படங்களில் நடித்து வருகிறார். நடிகர் லொள்ளு சபா மாறனின் அப்பா திமுகவை சேர்ந்தவர், ஆனால் மாறன் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர் என்று பலமுறை பேட்டிகளில் கூறியுள்ளார்.

தான் நான்கு வயதிலேயே பெரியாரின் பேச்சை கேட்டதாகவும் அப்போதே தன்னை பெரியார் பேச்சு கவர்ந்தது என்றும் கூறினார். மாறனின் அப்பா திமுகவின் பேச்சாளராக இருந்ததால் அவரது வீட்டில் அண்ணா, கலைஞர், பெரியார் புகைப்படங்கள் இருக்கும் என்றும் பெரியார் எங்கள் தெருவில் அடிக்கடி பேசுவதை பார்த்து ரசித்திருக்கிறேன் என்றும் கூறியுள்ளார்.

இயக்குனர் செல்வராகவன் உதவியாளர் லதா என்பவரது இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படத்தில் யோகிபாபு உடன் தற்போது லொள்ளுசபா மாறன் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். இது ஒரு பக்கா காமெடி கதை என்றும் லதா அவர்கள் கதை சொல்லும் விதத்தை கேட்டு பெருமைப்படுகிறேன் என்றும் சமீபத்தில் அளித்த பேட்டியில் லொள்ளு சபா மாறன் தெரிவித்துள்ளார். இயக்குனராக வேண்டும் என்ற கனவோடு இருக்கும் மாறன், அதற்கான பணிகளிலும் இன்னொரு பக்கம் ஈடுபட்டு வருகிறார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews