சாட்டையை எடுத்து சென்னை சைபர் க்ரைம் காவல்துறை.. 2 நாகளில் 205 சைபர் குற்றவாளிகள் கைது.. திருட்டுக்கு உடந்தையாக இருந்த வங்கிக்கணக்குகளுக்கும் ஆப்பு.. உளவுத்துறை உதவியோடு சைபர் க்ரைம் குற்றவாளிகள் சிக்கினர்.. வங்கி கணக்குகளை மற்றவர்கள் பயன்படுத்த கொடுத்தால் கடும் நடவடிக்கை.. இனிமேல் ஆன்லைன்ல்ல திருடனும்ன்னா அது தமிழ்நாட்டுல நடக்காது… வேற எங்கேயாவது போயிடுங்க…
சைபர் குற்றங்கள் மற்றும் ஆன்லைன் மோசடிகள் மூலம் ஈட்டப்படும் சட்டவிரோதப் பணத்தை முடக்கி, அதனைப் பரிமாற்றம் செய்யப் பயன்படுத்தப்படும் போலி மற்றும் பினாமி வங்கி கணக்குகளுக்கு எதிராகத் தமிழகம் முழுவதும் காவல்துறை சார்பில் அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகரக் காவல் துறையினர் நடத்திய இந்தத் தீவிர சோதனையில், மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 205 சைபர் குற்றவாளிகள் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஆகஸ்ட் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் மேற்கொள்ளப்பட்ட இந்தச் சிறப்பு நடவடிக்கையானது, இணையவழித் திருட்டுகளுக்கு உடந்தையாக இருக்கும் வங்கி கணக்குகளின் வலையமைப்பைக் கண்டறிந்து முழுமையாக அழிப்பதை நோக்கமாகக் கொண்டு வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது.
தேசிய சைபர் குற்றப் புகாரளிப்பு தளத்தில் பதிவாகியுள்ள எண்ணற்ற புகார்களின் அடிப்படையில் பெறப்பட்ட துல்லியமான உளவுத்துறைத் தகவல்களின் அடிப்படையிலேயே இந்த மாபெரும் வேட்டை நடத்தப்பட்டுள்ளது. விசாரணையின் ஆரம்பக் கட்டத்தில், ஆன்லைன் மோசடி வழக்குகளுடன் தொடர்புடைய பல்வேறு வங்கி கணக்குகளை காவல்துறையினர் தீவிரமாகச் சோதனையிட்டனர். அப்போது, சென்னை நகரில் உள்ள வங்கிகளில் பராமரிக்கப்பட்டு வந்த சுமார் 310 பினாமி வங்கி கணக்குகள் மூலம் சட்டவிரோதப் பணப் பரிமாற்றங்கள் நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இந்தத் தகவல்களை வைத்துத் துப்பு துலக்கிய புலனாய்வுக் குழுவினர், குற்றவாளிகள் பதுங்கியிருக்கும் இடங்களை உறுதிசெய்து கைது நடவடிக்கைகளைத் தொடங்கினர்.
கைது செய்யப்பட்ட 205 சந்தேக நபர்களும் அரியலூர், கோயம்புத்தூர், தருமபுரி, திண்டுக்கல், ஈரோடு, கள்ளக்குறிச்சி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாகப்பட்டினம், நீலகிரி, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சேலம், தஞ்சாவூர், தேனி, திருப்பத்தூர், திருவள்ளூர், திருவாரூர், திருநெல்வேலி, திருச்சிராப்பள்ளி, விருதுநகர் மற்றும் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். சம்பந்தப்பட்ட அனைத்துச் சந்தேக நபர்களையும் காவல்துறையினர் உடனடியாகக் காவலில் எடுத்து, சென்னை மாநகரக் காவல் நிலையத்தில் வைத்துத் தீவிரமான விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். இந்த மோசடி வலையமைப்பின் பின்னணியில் உள்ள முக்கிய மூளையைக் கண்டறியும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இதுபோன்ற சைபர் குற்றக் கும்பல்கள் பொதுமக்களின் பெயரில் தொடங்கப்படும் பினாமி வங்கி கணக்குகளைப் பயன்படுத்தி, ஆன்லைன் முதலீட்டு மோசடிகள், டிஜிட்டல் கைது மற்றும் பல்வேறு வகையான இணையவழி ஏமாற்று வேலைகள் மூலம் பெறப்படும் பணத்தைப் பெற்றுப் பரிமாற்றம் செய்வதாகப் புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திருடப்பட்ட பணத்தின் இறுதிப் பாதையைக் கண்டுபிடிக்க முடியாதவாறு பணத்தைப் பல கணகுகளுக்கு மாற்றி மறைக்க இந்த முறையைப் பயன்படுத்துகின்றனர். இதனால் சாதாரண மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்படும் பணம் சுலபமாகப் பாதுகாப்பான வழிகளில் வெளிநாடுகளுக்கும் பிற கணக்குகளுக்கும் கடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
இந்த விவகாரம் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ள சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் ஏ. அமல்ராஜ், பொதுமக்கள் எக்காரணத்தைக் கொண்டும் தங்களின் பெயரில் தொடங்கப்பட்ட வங்கி கணக்குகளை வேறு எவரும் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என்று கேட்டுக்கொண்டுள்ளார். குறிப்பாக, கமிஷன் தொகையைப் பெற்றுக்கொண்டு தங்களது வங்கி கணக்குகளைச் சட்டவிரோதப் பணப் பரிமாற்றத்திற்காக விட்டுக் கொடுப்பவர்கள் மீதும் கடுமையான குற்றவியல் நடவடிக்கைகள் பாயும் என்று அவர் கடுமையாக எச்சரித்துள்ளார். பொதுமக்களின் அறியாமையைப் பயன்படுத்தி மோசடி கும்பல் நடத்தும் இதுபோன்ற செயல்களுக்குத் துணை போனால் கடுமையான சிறைத் தண்டனை கிடைக்கும் என்றும் காவல்துறை தரப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இணையவழி மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், காவல்துறை மேற்கொண்டுள்ள இந்த அதிரடி மாநில அளவிலான நடவடிக்கை சைபர் குற்றவாளிகளிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பினாமி கணக்குகள் மூலம் பல கோடிக்கணக்கில் கைமாறும் கறுப்புப் பணத்திற்குத் தடைபோட இந்தச் சோதனைகள் பெரிதும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொதுமக்கள் யாரும் தங்களது வங்கிக் கணக்கு விவரங்களை யாருடனும் பகிர்ந்துகொள்ள வேண்டாம் என்றும், அவசியமான விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் காவல்துறை மீண்டும் ஒருமுறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
