காலம் காலமாக இருந்து வரும் கன்னிவழிபாடு எதற்காக என்று தெரியுமா? இவ்ளோ விஷயங்கள் இருக்கா?

தற்போது எல்லாம் குடும்பத்தில் ஒற்றுமை இல்லாமல் மகனுக்கு திருமணம் செய்து வைத்த உடனேயே தனிக்குடித்தனம் சென்று விடுகிறான். அண்ணன், தம்பிகளுக்குள் சொத்து சண்டை வந்து விடுகிறது. கணவனுக்கும், மனைவிக்கும் கருத்து வேறுபாடு வந்து திருமணமாகி சில மாதங்களிலேயே பிரிந்து விடுகிறார்கள். வளர வளர தந்தைக்கும் மகனுக்கும் ஒரு பிடிப்பு இல்லாமல் போய் விடுகிறது. தாய்க்கும், மகளுக்கும் பிடிக்கவில்லை. இப்படியே பிரிவினை வாதத்தைச் சொல்லிக் கொண்டே போகலாம். இந்தப் பிரிவுக்கு என்ன காரணம்?

குடும்ப ஒற்றுமைக்கு என்ன தான் வழி? இப்படி எல்லாம் சிந்தித்துப் பார்த்தாமோனால் நாம் பணம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு ஓடிக் கொண்டு இருப்பது தான். தினமும் உழைப்பு உழைப்பு என்று ஓடி ஓடி பொருளை சேர்க்கிறோம். என் வீடு என் மக்கள் என்று தான் ஒவ்வொரு மனிதனும் வாழ்க்கையில் போராடிக் கொண்டு இருக்கிறான். அவனுக்கு வாழ்க்கை முழுவதும் பரபரப்பாகவே சென்று கொண்டு இருக்கிறது.

அவர்களின் மனக்குறையைப் போக்கவும், குடும்ப ஒற்றுமைக்கு என்று ஒரு சிறப்பான வழிபாடாகவும், நம் முன்னோர்கள் தொன்று தொட்டு கடைபிடித்து வருவதுமான ஒரு வழிபாடு தான் கன்னி தெய்வ வழிபாடு. இதைப் பற்றிப் பார்ப்போமா…

ஒரு பெண் திருமணம் செய்து கொள்ளாமல் கன்னியாக மறைந்தால் அவளை வழிபடும் பண்பாடு தொடர்ந்து வருகிறது. பெண்களை தெய்வமாக வழிபடும் வழக்கம் நம் நாட்டில் பழங்காலத்தில் இருந்தே தொன்று தொட்டு நடந்து வருகிறது.

இதையும் படிங்க… கணவன் மனைவிக்குள் ஒற்றுமை வேண்டுமா? அப்படின்னா கட்டாயம் இந்த விரதத்தை இருங்க…

சக்தி வழிபாடு என்பது தாய்வழி வழிபாடுதான். ரிக் வேதத்திலும் மார்க்கண்டேய புராணத்திலும், காளிதாசரின் குமார சம்பவத்திலும், விஷ்ணு தர்மோத்தர புராணத்திலும், தேவி பாகவதத்திலும் கன்னிமார்களின் வரலாறு போற்றப்படுகிறது.

கன்னி தெய்வங்கள் போற்றப்படுவதற்கு பல காரணங்கள் உண்டு. இன்பத்தைக் கருவாக்கினாள் பெண். உயிருக்குள் உயிர் சுமந்து மனித குலத்தை விருத்தி அடையச் செய்தவளும் பெண்தான். இதுபோன்ற பல காரணங்களால் தான் அன்றே பெண்ணை மகாசக்தியாகப் பார்த்தான் ஆதிமனிதன்.

தன்னைவிட பலம் குன்றிய பெண்ணைப் பார்த்து பயந்திருக்கிறான். அவளைக் கையெடுத்துக் கும்பிட்டிருக்கிறான். அந்தப் பழங்கால மரபுக்கும் வரலாறுக்கும் இன்றும் நிலவும் சான்று தான் தமிழர்களின் கன்னி வழிபாடு.

இந்தக் கன்னிகள் பெரும்பாலும் தங்களின் சராசரி வாழ்வைத் தவற விட்டவர்கள். அல்லது துச்சமாகத் தங்கள் வாழ்வைத் தூக்கியெறிந்தவர்கள். கன்னித்தன்மையைக் கொடுத்து தாய்மையைப் பரிசாகப் பெறாமலேயே இறந்தவர்கள். இதனாலேயே சராசரி பெண்கள் ரட்சிக்கும் தெய்வ நிலைக்கு உயர்ந்து விடுகிறார்கள். சுமங்கலிகள் கன்னி தெய்வங்களை வழிபட்டால் மாங்கல்ய பலம் அதிகரிக்கும்.

கன்னிப்பெண்களுக்கு விரைவில் திருமணம் யோகம் கைகூடும் என்று பொதுவான நம்பிக்கை இருப்பதாலே கன்னியை வணங்கும் வழக்கம் இன்று வரை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த தெய்வங்களுக்கு ஆடி மற்றும் தை மாதங்களில் சிறப்பான பூஜைகள் செய்வது வழக்கம். பெரும்பாலும் செவ்வாய்க்கிழமை தான் கன்னிக்கு ஏற்ற நாள்.

Kanni poojai
Kanni poojai

எனவே அந்த நாளில் வணங்குவதை பலர் கடைபிடித்து வருகின்றனர். மேற்கண்ட மாதங்களில் வணங்க முடியாதவர்கள் தை மாதம் 2ம் நாளில் கன்னிக்கு பூஜை வைத்து வணங்குவார்கள். தங்கள் குலதெய்வத்தினை பங்குனி உத்திரத்தில் வணங்கும் போது கூடவே மறவாமல் வீட்டில் உள்ள கன்னிகளையும் வணங்க வேண்டும்.

வாஸ்து சாஸ்திரங்களை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் கன்னி மூலை என்று வீட்டில் ஒரு மூலையைச் சொல்வார்கள். வீட்டின் திசைகளைத் தான் கன்னி மூலை, அக்னி மூலை, ஈசான மூலை என்று பிரிக்கிறார்கள். இவற்றில் வடகிழக்கு மூலை என்றால் அது கடவுளுக்கு உரியது.

கன்னி மூலை என்று தனியாக ஒரு மூலையைச் சொல்கிறார்கள். இதுவே கன்னி வழிபாடு என்பது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை நமக்கு உணர்த்தி விடுகிறது. பொதுவாகக் கடவுள் வழிபாட்டுக்குச் சமமாகக் கருதப்படுவது இந்த கன்னி வழிபாடு தான்.  குடும்பங்களில் நோயாலோ, விபத்தாலோ ஒருவர் இறந்துவிட்டால், கன்னியரை தெய்வமாகக் கருதி வணங்குகின்றனர். குடும்ப ஒற்றுமைக்கு கன்னிதெய்வ வழிபாடு முக்கிய பங்கு வகிக்கிறது.

குடும்பத்தில் பலருக்கு மனஸ்தாபம் இருந்தாலும் கூட கன்னியை வணங்க அனைவரும் கூடிவிட வேண்டும். அதுவே கன்னிக்கும் பிடிக்கும்.
அப்போது தான் கன்னியின் அருள் நமக்குக் கிடைக்கும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews