பிரளய காலம் உருவானது ஏன்? அம்பிகைக்கே உரிய இரவு சிவனின் வசமானது எப்படி?

உலகம் முழுவதும் மகாசிவராத்திரி (18.02.2023) அன்று கொண்டாடப்படுகிறது. அன்று இரவு முழுவதும் கண் விழித்து பரமனான ஈசனை வழிபடுவதன் மூலம் இறைவனின் அனுக்கிரகத்தைப் பெறலாம்.

இந்த நாளின் சிறப்புகள் குறித்து திருவிளையாடற்புராணம், கருட புராணம், கந்த புராணம், பத்ம புராணம், அக்னி புராணம் உள்ளிட்ட பல்வேறு நூல்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிவராத்திரி உருவான வரலாறு

கைலாய மலையில் வீற்றிருக்கும் அன்னையான பார்வதிதேவி விளையாட்டாக சிவபெருமானின் இரண்டு கண்களையும் தன் கைகளால் மூடினாள். உலகுக்கு ஒளி வழங்கும் சூரிய சந்திரர்களான அவருடைய கண்கள் மூடப்பட்டு எங்கும் காரிருள் சூழ்ந்தது. உலகம் முழுவதும் இருள் சூழ்ந்து அச்சமூட்டியது. அப்போது தனது நெற்றிக்கண்ணான மூன்றாம் கண்ணைத் திறந்தார் ருத்ரன்.

Siva third eye
Siva third eye

அதன் வெப்பம் தாங்க முடியாமல் இந்த உலகம் ஸ்தம்பித்துப ;போனது. இதுவே பிரளயகாலம் என்றும் அழைக்கப்படுகிறது. அந்த நேரத்தில் பிரம்மனும், அவரால் படைக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளும் அழிந்து விட்ட நிலையில், இரவுப் பொழுதில் அம்பிகை உமாதேவி, சிவனை நினைத்து பூஜை செய்தாள். 4 ஜாமங்களிலும் இரவு முழுவதும் ஆகம விதிப்படி அர்ச்சனை செய்தாள்.

பூஜையின் முடிவில் அம்பிகை ஈஸ்வரனை வணங்கி, அடியேன் தங்களைப் பூஜித்த இந்த இரவை, தேவர்களும் மனிதர்களும் தங்கள் திருநாமத்தாலேயே அதாவது சிவராத்திரி என்றே கொண்டாட வேண்டும் என்று வேண்டினாள்.

சிவராத்திரி அன்று, சூரியன் மறைந்தது முதல் மறுநாள் காலை சூரியன் உதயமாகும் வரை,  தங்களை (சிவனை) பூஜை செய்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு எல்லாவிதமான பாக்கியங்களையும் தந்து முடிவில் மோட்சத்தையும் அளிக்க வேண்டும்.

அருள் புரியுங்கள் என்று அம்பிகை வேண்டிக் கொண்டாள். சிவபெருமானும், அப்படியே ஆகட்டும் என்று கூறி அருள் புரிந்தார். அந்த இரவே சிவராத்திரி என வழங்கப்பட்டு, அனைவராலும் கொண்டாடப்படுகிறது.

Shiva 2
Shiva

பகல் பொழுது பரமேஸ்வரனுக்கும், இரவுப் பொழுது அம்பிகையான உமாதேவிக்கும் உரியது. ஆனால் சிவராத்திரி என்பது அம்பாளின் வேண்டுதலின் படி கொண்டாடப்படுவதால் அது சிவனுக்கு உரிய விழாவானது.

வழிபடும் முறை

Sivan 1
Sivan

சிவராத்திரிக்கு முதல் நாள் ஒரு வேளை மட்டுமே உணவு உண்ண வேண்டும். சிவராத்திரி அன்று அதிகாலையிலேயே எழுந்து குளித்து விட்டு, சூரிய உதயத்தின் போது காலையில் வீட்டில் செய்ய வேண்டிய பூஜையை முடிக்க வேண்டும்.

அதன்பின் சிவன் கோவிலுக்குப் போய் முறைப்படி தரிசனம் செய்ய வேண்டும். பூஜை செய்யும் இடத்தை மலர்களால் அலங்கரித்து நண்பகலில் குளித்து மாலையில் சிவார்ச்சனைக்கு உரிய பொருட்களோடு சிவன் கோவிலில் வழிபாடு நடத்தலாம்.

மாலையில், மீண்டும் குளித்து வீட்டில் சிவபூஜை செய்ய வேண்டும். வீட்டிலேயே இரவின் 4 ஜாமங்களிலும் முறைப்படிப் பூஜை செய்யலாம். சிவனுக்குப் பிடித்த வில்வ இலைகளைக் கொண்டு பூஜிப்பது கூடுதல் சிறப்பு.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews