தீபாவளிப் பண்டிகையை முதன் முதலாகக் கொண்டாடியவர் யாருன்னு தெரியுமா?

வரும் 24.10.2022 அன்று திங்கட்கிழமை தீபாவளி திருநாள். அன்றைய பொழுது சிறுவர்களுக்கு எப்பொழுது விடியும் என்று இருக்கும்? அவ்வளவு சந்தோஷம் அவர்கள் முகத்தில் தாண்டவமாடும். அதிகாலையிலேயே எழுந்து எண்ணைத் தேய்த்துக் குளித்து புத்தாடைக்கு மஞ்சள் தடவி அதை உடுத்தும்போது இருக்கும் சந்தோஷம் எல்லை இல்லாமல் கரை புரண்டு ஓடும்.

அடுத்து இனிப்பு பலகாரங்களுடன் காலை டிபனை முடித்ததும் அவர்கள் பட்டாசுளை வெடிக்கச் செய்து தங்களை மட்டுமல்லாமல் தங்களைச் சுற்றியுள்ள பெரியொர்களையும் குதூகலப்படுத்துவர். பலகாரங்களும், பட்டாசுகளின் சத்தமும் அதிலிருந்து வரும் புகையும் அன்று முழுவதும் ஒரு தித்திப்பான தீபாவளியை நமக்கு உணரச் செய்துவிடும்.

பெரும்பாலான அரசு ஊழியர்களுக்கும், தொழிற்சாலைகளிலும், கடைகளிலும் வேலை செய்வோருக்கும் தீபாவளி போனஸ் கிடைத்து விடுவதால் அவர்களுக்கு இந்த தருணம் இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தந்து விடுகிறது.

Narakasooran1
Narakasooran1

குடும்பத்துடன் தீபாவளியை குதூகலமாகக் கொண்டாடி மகிழ்கின்றனர். பட்டாசு வெடித்ததும் தங்களுக்கு பிடித்த அபிமான நடிகர்களின் படங்களைத் திரையரங்கில் போய் பார்க்கச் சென்று விடுகின்றனர்.

இது ஒரு புறமிருக்க இன்னும் சிலர் இந்த நாளில் சின்ன பிக்னிக் போய் என்ஜாய் பண்ணுகின்றனர். அதெல்லாம் சரி…இந்த தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாட காரணகர்த்தாவாக இருந்தவர் யார்? எதற்காக நாம் தீபாவளியைக் கொண்டாடுகிறோம் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். அதைப் பற்றி சுருக்கமாகப் பார்ப்போம்.

கிருஷ்ணருக்கும் பூமாதேவிக்கும் மகனாகப் பிறந்தவன் தான் நரகாசூரன். இவனது உண்மையான பெயர் பௌமன். கடுமையான தவம் இருந்து வரங்கள் பெற்றவன். தாயைத் தவிர யாராலும் தன்னைக் கொல்ல முடியாது என வரம் பெற்றவன். பின்னாளில் அசுர குணங்கள் வாய்க்கப் பெற்று மனிதர்களையும் தேவர்களையும் துன்புறுத்தினான். அனைவரும் கிடுகிடுவென பயந்து நடுங்கும்படியாக அட்டூழியங்கள் செய்தான். இதனால் இவன் நரகாசூரன் என்று அழைக்கப்பட்டான்.

Sathyapama
Sathyapama

அவனை அழிக்க கிருஷ்ணர் சென்ற ரதத்தை பூமாதேவியின் சக்தியான சத்யபாமா ஓட்டிச் சென்றாள். தாயால் தான் மரணம் ஏற்படும் என நரகாசூரன் பெற்றிருந்த வரம் நினைவுக்கு வர ரதத்தில் மயங்கி விழுவது போல் விழுந்து சத்யபாமாவைக் கொண்டு அவனை வதம் செய்தார் கிருஷ்ணர்.

அரக்கன் நரகாசூரனும், அவனது தாய் பூமாதேவியும் ஏற்றுக் கொண்டதற்கு இணங்க அவனது இறந்தநாளை புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்துக் கொண்டாடி மகிழ்கின்றனர். அதுமட்டுமல்லாமல் இந்த நாளில் இனிப்பு வழங்கி சந்தோஷமாகக் கொண்டாடுகின்றனர். இதுவே தீபாவளிப் பண்டிகையானது. நரகாசூரன் இறந்த நாளை முதன் முதலாகக் கொண்டாடியவர் அவரது மகன் பகத்தத்தன் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews