என்றும் மனதை விட்டு நீங்காத 90களின் குழந்தை பருவத்தை நினைவூட்டும் சீரியல் பாடல்கள் ஒரு பார்வை!

இசையை ரசிக்காதவர் யாரும் இருக்க மாட்டார்கள். ஒவ்வொரு காலகட்டத்திலும் பாடல்களுக்கான ரசனை மாறினாலும் இசைக்கான ரசிகர்கள் இசையை ரசிப்பதிலிருந்து மாறுவதில்லை. அதனால் தான் திரை உலகில் கதைக்காக வெற்றி பெற்ற திரைப்படங்களை விட பாடலுக்காக வெற்றி பெற்ற எத்தனையோ திரைப்படங்கள் உண்டு. திரைப்பட பாடல்கள் மட்டுமல்ல சின்னத்திரை தொடர்களின் பாடல்களும் இசையில் வெற்றி பெற்று பலரது நினைவில் என்றும் நீங்காத இடம் பெற்றுள்ளது.

90 களின் இறுதியில் தொலைக்காட்சி தொடர்கள் எதார்த்தமான கதை களம், திரையுலகில் பிரபலமான நடிகைகளின் மிகையற்ற நடிப்பு போன்ற பல காரணங்கள் ரசிகர்களை தொலைக்காட்சி பெட்டி முன்பு கட்டி போட்டு வைத்திருந்தது. அதிலும் அந்த தொடரின் பாடல்களை கேட்பதற்கென்றே தனி ரசிகர் பட்டாளம் இருந்தார்கள் என்றே சொல்லலாம். அப்படி பட்டித்தொட்டி எங்கும் பிரபலமடைந்து பலரது குழந்தை பருவத்தை அசை போடச் செய்யும் சில தொலைக்காட்சி தொடர்களின் பாடல்கள்‌ உங்களுக்காக

1. சித்தி – கண்ணின் மணி:

images 5 5

நடிகை ராதிகா அவர்கள் கதாநாயகி கதாபாத்திரம் ஏற்று பலரையும் விரும்பி பார்க்க வைத்த தொடர். சித்தி என்று அழைத்திடும் குழந்தையின் குரலும் இந்த கண்ணின் மணி பாடலும் மிகவும் பிரபலம். 2000 ஆண்டின் தொடக்கத்தில் பள்ளி, கல்லூரிகளின் ஆண்டு விழாவில் இந்தப் பாடலுக்கான நடனம் கட்டாயம் இருக்கும். இசையமைப்பாளர் தீனா இசையில் கவிஞர் வைரமுத்துவின் வரிகளுக்கு பாடகி நித்யஸ்ரீ மகாதேவன் அவர்கள் இந்த பாடலை பாடியிருப்பார்.

2. மெட்டிஒலி – அம்மி அம்மி அம்மி மிதித்து:

images 5 6

மெட்டி ஒலி தாயை இழந்து பாசமிகு தந்தையின் அரவணைப்பில் வளரும் ஐந்து சகோதரிகளின் வாழ்க்கையை கதையாக கொண்ட கதைக்களம் ஆகும். இதன் அம்மி அம்மி அம்மி மிதித்து என்ற பாடலும் நடனக் கலைஞர் சாந்தி அவர்களின் நடனமும் மிகவும் பிரபலமானது.  இந்தப் பாடலும் இசையமைப்பாளர் தீனா அவர்கள் இசையில் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் வரிகளில் பாடகி நித்யஸ்ரீ மகாதேவன் பாடியிருப்பார்.

3. கோலங்கள் – பெண்ணே எனது புது கோலம்:

images 5 8

நடிகை தேவயானி அவர்களின் நடிப்பில் வெளியான மிகவும் பிரபலமான தொலைக்காட்சி தொடராகும். இதில் பாடலோடு ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக தொடரின் தலைப்பில் வரும் புதிய கோலத்தைப் பார்ப்பதற்கு என்றே தனி ரசிகர்கள் இருந்தார்கள். இந்தப் பாடலை இசையமைப்பாளர் டி இமான் அவர்கள் இசையமைக்க பாடல் ஆசிரியர் பழனி பாரதி அவர்கள் வரிகள் எழுத பாடகி ஹரிணி பாடியிருப்பார்.

4. காதலிக்க நேரமில்லை – என்னை தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு:

Kaadhalikka neramillai logo

மிக வித்தியாசமான கதைக்களத்தை கொண்ட இந்த தொடர் இளைஞர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இந்தப் பாடலை ரசிக்காதவர்கள் இல்லை என்றே சொல்லலாம். பெரும்பாலானவரின் அலைபேசிகளில் ரிங்டோனாக இடம்பெற்றது இந்த பாடல். இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி அவர்களின் இசையில் தேன்மொழி தாஸ் அவர்களின் வரிகளுக்கு பாடகர்கள் சங்கீதா மற்றும் ராஜேஸ்வரன் பாடியிருப்பார்கள்.

5. கனா காணும் காலங்கள்:

images 5 9

புதுமுக நடிகர் நடிகைகளின் பட்டாளத்தை வைத்து உருவாக்கப்பட்ட பள்ளி வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட கதைக்களம். இன்று பலரது பள்ளி பருவத்தை திரும்பிப் பார்க்கையில் இந்த தொடரை பற்றிய நினைவுகளும் வந்து போவதை தடுக்க முடியாது. இந்தத் தொடரில் வரும் கனவுகள் காணும் வயசாச்சு என்ற பாடல் பலரால் முணுமுணுக்கப்படக்கூடிய ஒரு பாடல். இந்தப் பாடலும் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி அவர்களின் இசையில் பாடலாசிரியர் தேன்மொழி தாஸ் வரி எழுத பாடகர்கள் சி. சத்யா மற்றும் மாயா பாடலை பாடியிருப்பார்கள்.

6. சரவணன் மீனாட்சி:

images 5 10

ஆயிரம் எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பப்பட்ட இந்த தொடரில் கதைக்களம், நடிகர் என அனைத்தும் மாறினாலும் மாறாத இந்த ஏலேலோ என்ற பாடல் பலருக்கும் பிடித்தமான பாடல் ஆகும். மூன்று பாகங்களாக வெளியான இந்தத் தொடரின் ஏலேலோ என்ற இசையை இசையமைப்பாளர் இளையவன் அவர்கள் இசையமைக்க பாடகி பிரியா பிரகாஷ் பாடியிருப்பார்.

இந்த பாடல்களை கேட்கும் பொழுது சாதாரண பாடல்களாக மட்டும் இல்லாமல் பலரது குழந்தை பருவ நினைவுகளை மீட்டெடுத்து மீண்டும் அந்தப் பருவத்திற்கு அழைத்துச் செல்லும் பொக்கிஷங்களாக உள்ளன.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews