எனக்கு ‘பரட்டை‘ உனக்கு ‘சித்தப்பு‘ நல்லா மாட்டிக்கிட்ட.. சரவணனைக் கலாய்த்த ரஜினி..

2000 ஆண்டுகளின் பிற்பகுதியில் தமிழ் சினிமாவின் தலையெழுத்தையே ஒரு படம் மாற்றியது. அந்தப் படம் தான் பருத்தி வீரன். ஒரு அறிமுக நடிகருக்கு ஒரே படத்தின் மூலம் இப்படி ஒரு புகழ் கிடைத்திருக்குமா என்றால் அது கார்த்திக்கு மட்டும் தான். கூடவே கார்த்தியுடன் சித்தப்புவாகக் கலக்கிய சரவணனுக்கும் இந்தப் படம் பெரிய திருப்பு முனையைக் கொடுத்தது.

தமிழ் சினிமாவில் முதன் முதலில் இளைய தளபதி என்ற பட்டத்துக்குச் சொந்தக்காரரான நடிகர் சரவணன் பார்ப்பதற்கு கேப்டன் விஜயகாந்தைப் போலவே இருப்பார். 90களில் இவர் நடித்த படங்கள் ஒன்றிரண்டைத் தவிர மற்றவை தோல்வியே கண்டன.

அதன்பின் சினிமாவில் தலைகாட்டாமல் இருந்த சரவணனை இயக்குநர் பாலா நந்தா படம் மூலம் மீண்டும் திரைக்குக் கொண்டு வந்தார். அதன்பின் அமீர் தனது பருத்தி வீரன் படத்தில் செவ்வாழையாக கார்த்தியின் சித்தப்புவாக நடிக்க வைத்தார். படம் ஓஹோவென ஹிட் ஆகியது. படத்தில் நடித்த அத்தனை கதாபாத்திரங்களும் வாழ்ந்தன. குறிப்பாக இவரின் சித்தப்பு கதாபாத்திரம் ரசிகர்களிடையே பெரிதும் சென்றடைந்தது.

இந்தப் படத்தினைப் பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினி சரவணனுக்குப் போன் செய்திருக்கிறார். அப்போது சரவணனிடம் அவர், “நீங்க நல்லா மாட்டிக்கிட்டீங்க என்றிருக்கிறார். என்னவென்று சரவணன் கேட்க, “நான் 16 வயதினிலே படத்தில் பரட்டை என்ற கேரக்டரில் நடிச்சேன். அந்தப் படம் பெரிய ஹிட்டானது. அதன்பிற்கு என்னை யார் எங்கு பார்த்தாலும் பரட்டை என்று தான் கூப்பிட ஆரம்பித்தார்கள். மேலும் அந்த இமேஜை மாற்ற எனக்கு நிறைய காலம் ஆனது.

‘அண்ணாமலை‘ படத்தைப் பார்த்து சுரேஷ் கிருஷ்ணாவை அறிவு இருக்கான்னு கேட்ட கே. பாலச்சந்தர்.. அதிர்ந்து போன இயக்குநர்

அதேபோல் இப்போது நீங்களும் இந்தப் படத்தில் சித்தப்பாவாக நடித்திருக்கிறீர்கள். இனி இந்தப் படத்தின் முலம் உங்களையும் பலர் சித்தப்பா என்றே அழைப்பார்கள் என்று கூறியிருக்கிறார். மேலும் சரவணனிடம் இந்தப் படத்தில் உங்களுக்கு எந்தெந்த காட்சிகளில் கைதட்டல் விழும் என்றும் கணித்துக் கூறியிருக்கிறார். ரஜினி சொன்னது போலவே சரவணனை இன்றும் ரசிகர்கள் சித்தப்பா என்றே அழைக்கிறார்கள். அந்த அளவிற்கு பருத்திவீரன் படம் அவரை ரசிகர்கள் மத்தியில் கொண்டு சேர்த்திருக்கிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews