சிறப்பு கட்டுரைகள்

தற்கொலைகளுக்கு காரணமாகும் “மன அழுத்தம்”…. தீர்வுதான் என்ன…..?

மனஅழுத்தம்

இன்றைய காலகட்டத்தில் மன அழுத்தம் இல்லாதவர்களை பார்ப்பது மிகவும் அரிது தான். பெரியவர்கள் மட்டுமல்லாது சிறியவர்களும் மன அழுத்தத்தினால் பாதிக்கப்படுவதுண்டு. ஒவ்வொருவரது மனநிலையும் வெவ்வேறு மாதிரி தான் இருக்கும். ஒருவருக்கு மன அழுத்தத்தை கொடுக்கும் செயல் அல்லது சம்பவங்கள் வேறு ஒருவருக்கு சாதாரணமாக தெரியும்.

மன அழுத்தத்திற்கான காரணம்

அதிக மதிப்பெண்கள் எடுக்க வேண்டும், வீட்டு பாடங்களை சரியாக முடிக்க வேண்டும், அதிக பாடங்களை படிக்க வேண்டும், பெற்றோர் கவனிக்கவில்லை, சகோதர சகோதரிகளிடையே கருத்து வேறுபாடு போன்ற காரணங்களால் குழந்தைகளும் நிதி நெருக்கடி, குடும்ப சூழ்நிலை, உறவுகளுக்கு இடையே பிரச்சனை, பணி சுமை, பாதுகாப்பற்ற வேலை, இடமாற்றம், நெருக்கமானவர்களின் பிரிவு அல்லது இழப்பு போன்ற காரணங்களால் பெரியவர்களும் மன அழுத்தத்திற்கு ஆளாகலாம்.ஆனால் இதில் ஒருவரை பாதிக்கும் காரணம் மற்றொருவரையும் பாதிக்கும் என கூற முடியாது அது ஒவ்வொருவரின் மனதை பொறுத்தது.

சிகிச்சை அவசியமா?

அன்றாட வாழ்வில் நடக்கும் சம்பவங்களால் மன அழுத்தத்தில் இருக்கும் அனைவரும் சிகிச்சை எடுக்க நினைப்பதில்லை. மன அழுத்தத்திற்கு சிகிச்சை தேவையா என்று கேட்டால் ஆரம்ப கட்டத்தில் தேவைப்படாது. ஆனால் எப்போது அன்றாட வேலைகள் பாதிக்கப்படுகிறதோ அதாவது தூக்கமின்மை, பசியின்மை, எந்த செயலிலும் ஈடுபாடு இன்மை, அதிகப்படியான தற்கொலை எண்ணங்கள், எதிர்மறையான யோசனைகள், பலவீனமாக உணர்தல் போன்று இருந்தால் சிகிச்சை அவசியம்.

மன அழுத்தத்தில் இருந்து விடுபட

  • உடற்பயிற்சி மேற்கொள்ளுதல்
  • போதிய அளவு உறங்குதல்
  • புகைப் பழக்கத்தை கைவிடுதல்
  • மது அருந்துவதை தவிர்த்தல்
  • குடும்பத்தினருடன் சுற்றுலா செல்லுதல்
  • யோகா
  • தியானம்

மேற்கூறியவற்றை முயற்சி செய்தும் மன அழுத்தத்தில் எந்த மாற்றமும் இல்லை என்றால் மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்.

எதற்காக சிகிச்சை அவசியம்?

காய்ச்சல், தலைவலி, ஜலதோஷம், உடல் வலி போன்ற உடல் நலக் கோளாறுகளுக்கு மருத்துவரை அணுகுவது போன்று மனதில் ஏற்படும் பிரச்சனையான மன அழுத்தத்திற்கும் மருத்துவரை அணுக வேண்டும். இது மனது சார்ந்த பிரச்சனையாக மட்டும் நின்றுவிடாமல் தூக்கத்தை கெடுத்து உடல் நலப் பிரச்சனையும் ஏற்படுத்தக் கூடும்.

தற்கொலை எண்ணங்கள்

மன அழுத்தத்திற்கு நீண்ட காலமாக சிகிச்சை எடுக்காமல் இருக்கும் பட்சத்தில் அது எதிர்மறை எண்ணங்களை எழச் செய்யும். அதாவது தற்கொலை எண்ணத்தை தூண்டும். இது பெரியவர்களுக்கு மட்டும் தானா என்று கேட்டால் குழந்தைகளுக்கும் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் மேலோங்கும். இது நாம் அன்றாட செய்திகளின் மூலம் தெரிந்து கொள்ள முடியும். படிக்க பிடிக்கவில்லை என்றும் குறிப்பிட்ட பள்ளிக்கு தான் செல்வேன் என்றும் தாய் திட்டி விட்டார்கள் என்றும் சிறிய சிறிய காரணங்களுக்காக கூட குழந்தைகள் தற்கொலை செய்து கொள்ளும் நிலை உருவாகியுள்ளது. இதற்கு மன அழுத்தமே முக்கிய காரணமாக இருக்கும்.

அதேபோன்று தைரியமானவர்கள் தற்கொலை செய்து கொள்ள மாட்டார்களா என்று கேட்டால் உறுதியாக கூற முடியாது எவ்வளவு தைரியமானவர்களாக இருந்தாலும் அவர்களின் உடலில் ஏற்படும் ரசாயன மாற்றம் அவர்களை தற்கொலை செய்ய தூண்டும். அதனால் இதுபோன்ற தற்கொலை எண்ணங்கள் தோன்றும் சமயத்தில் மருத்துவரை அணுகுவது நல்லது.

Published by
Aadhi Devan

Recent Posts