கோவில் கொடிமரம் பற்றிய சிறப்புகள்

கோவில் கொடிமரத்தின் முக்கியத்துவம்.

ஆலயம் தொழுவது சாலவும் நன்று. ஆலயத்தின் ஒவ்வொரு பகுதியும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றாலும், கொடிமரத்திற்கு என்று ஒரு முக்கியத்துவம் உண்டு.

கோவில்களில் பலிபீடத்திற்கு அருகே அமைக்கப்பெறுகின்ற கொடியேற்றுகின்ற மரம் கொடிமரம் ஆகும். இதற்கு துவஜஸ்தம்பம் என்ற பெயரும் உண்டு.

அடிப்பகுதியில் சதுரம், அதற்கு மேல் எண்கோணவேதி அமைப்பு மற்றும் தடித்த உருளை பாகம் என இந்துக் கோவில் கொடிமரம் மூன்று பாகங்களைக் கொண்டது. இதில் சதுரப்பகுதிக்கு பிரம்மா அதிபதி, எண்கோணவேதி அமைப்புக்கு உரியவர் பெருமாள், உருளையமைப்பு சிவன் என முத்தேவர்களையும் குறிக்கிறது.

ஆலய கொடி மரம் மிகப்பெரிய தத்துவத்தின் அடிப்படையில் அமைக்கப்படுகிறது.

நம் உடம்பில் உள்ள முதுகெலும்பு போன்றது கோவிலுக்கு கொடிமரம் என்று நம் ஆகமங்கள் சொல்கின்றன. நம் முதுகுத் தண்டுவடத்தில் உள்ள 32 எலும்பு வளையங்களைப் போல கோவில் கொடி மரம் 32 வளையங்களுடன் அமைக்கப்படுகிறது.

நம் முதுகுத் தண்டில் மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணி பூரகம், அனாகதம், விசுக்தி, ஆக்ஞை எனப்படும் ஆறு ஆதாரங்களும், இடை, பிங்கலை, சுழிமுனை என்ற மூன்று நாடிகளும் அமைந்துள்ளன. பொதுவாக இடை,பிங்கலை வழியாக செல்லும் பிராண வாயுவை, சுழிமுனை எனும் நடு நாடியில் நிறுத்தி இறைவனை தியானிக்க, மனம் ஒரு நிலைப்படும். இந்த அடிப்படையில் தான் கொடி மரம் அமைக்கப்படுகிறது.

கொடி மரம் ராஜகோபுரத்தை விட அதிக உயரமாக இருக்காது. கருவறையில் இருந்தும், ராஜகோபுரத்தில் இருந்தும் எவ்வளவு தூரத்தில், எவ்வளவு உயரத்தில் கொடி மரம் அமைக்க வேண்டும் என்பதற்கு விதிகள் உள்ளன. கோவிலில் கொடிமரத்தை தொட்டு வணங்கினால் மட்டும் போதாது. சுற்றி வந்தும் வணங்குதல் வேண்டும்.

நாம் கால் நீட்டி விழுந்து வழிபடும்போது, பின்புறம் எந்த தெய்வ சன்னதியும் இருக்கக் கூடாது. ஆலயத்தின் உள்ளே பல சன்னதிகள் இருக்கும் என்பதால்தான் விழுந்து வணங்கக் கூடாது. கொடி மரம் இருக்கும் பகுதியில் எந்த சன்னதியும் இருக்காது என்பதால்தான் கொடி மரம் அருகே விழுந்து வணங்க வேண்டும் என்கிறார்கள்.

ஆண்கள் எப்போதும் 2 கால்கள், 2 கைகள், 2 காதுகள், நெற்றி, மார்பு ஆகிய 8 உறுப்புகளும் தரையில் படும் வகையில் அஷ்டாங்க நமஸ்காரம் செய்தல் வேண்டும்.

பெண்கள் தலை, 2 முழங்கால், 2 உள்ளங்கைகள் ஆகிய 5 உறுப்புகள் தரையில்பட பஞ்சாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும். கொடி மரத்தை வழிபடும்போது நேராக நின்று வணங்கக் கூடாது

பொதுவாக கோவிலில் யாக வேள்விகள் நடத்தும்போது அவற்றை கொடி மரம் அருகில்தான் நடத்துவார்கள். இதனால் அந்த இடம் மந்திர சக்தி மிகுந்த இடமாக மாறும். எனவே கொடிமரத்தின் அருகில் வழிபடும் விதத்தை தெரிந்துக் கொண்டு வழிபட்டு தெய்வ அருள் பெற்று வளமோடு வாழலாம்

Published by
Staff

Recent Posts