தோனியிடம் கற்றுக் கொண்ட ட்ரிக்கை அவரிடமே செயல்படுத்தி ஜெயிச்ச சாம் கரண்.. சுட்டி குழந்தை வேற லெவல் தான்..

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் மோதி இருந்த போட்டியின் முடிவு, சென்னை அணிக்கு மிகப்பெரிய பாதகமாக அமைந்துள்ளது. இந்த சீசனில் பெங்களூர் மற்றும் மும்பை அணிகளைத் தவிர மற்ற எட்டு அணிகளுக்குமே வாய்ப்பு அதிகமாக தான் உள்ளது.

இதனால் எந்த அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் என்பதே ஏறக்குறைய லீக் சுற்றின் முடிவில் தான் தெரியும் என்ற ஒரு நிலையில் தான் சிஎஸ்கே அணி அடைந்துள்ள இந்த தோல்வி அவர்களின் அடுத்த சுற்றுக்கான வாய்ப்பையும் கொஞ்சம் நெருக்கடிக்கு மத்தியில் மாற்றி உள்ளது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணியில் கேப்டன் ருத்துராஜ் தவிர மற்ற எந்த வீரர்களுமே சிறப்பாக ரன் சேர்க்க முடியாமல் கடும் அவதிக்குள்ளாகி இருந்தனர். மேலும் ஷிவம் துபே முதல் முறையாக இந்த ஐபிஎல் சீசனில் கோல்டன் டக் அவுட்டாகி இருந்தது அந்த அணிக்கு பெரிய தலைவலியாகவும் மாறி உள்ளது.

எந்த வீரரும் பேட்டிங்கில் நல்ல பங்களிப்பை அளிக்காததால் அவர்கள் 162 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தனர். கடைசி இரண்டு ஓவர்கள் தோனி பேட்டிங் செய்தும் அவர் 11 பந்துகளில் 14 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். இதற்கு முக்கிய காரணமாக சுழற்பந்து வீச்சாளர் ராகுல் சாஹர் வீசிய 19 வது ஓவர் அமைந்தது. சேப்பாக்கம் மைதானத்தில் தோனி களத்தில் இருந்தும் 19 வது ஓவரை சிறப்பாக வீசி 3 ரன்கள் மட்டுமே அவர் விட்டுக் கொடுத்திருந்தார்.

ஒருவேளை அவர் சிறப்பாக பந்து வீசாமல் போயிருந்தால் சென்னை அணி இன்னும் இருபது ரன்கள் வரை அதிகம் அடித்து பஞ்சாப் அணிக்கு நெருக்கடியை கொடுத்திருக்கலாம். ஆனால் அந்த தவறை செய்யாமல் மிகப்பெரிய ஒரு ரிஸ்க் எடுத்து தோனியை கட்டுப்படுத்த ராகுல் சாஹரை தற்போது பலரும் பாராட்டி வருகின்றனர்.

இதனிடையே தோனிக்கு வீசிய 19 வது ஓவர் பற்றி பேசி இருந்த ராகுல் சாஹர், “நான் பந்து வீசிய வேகத்தின் அடிப்படையில் அதனை பேட்ஸ்மேன்கள் ரன் அடிப்பதற்கு கடினமாக உணர வேண்டும் என்று நினைத்திருந்தேன். நான் சிறந்த பந்தை வீசுவதாக இருந்தால் நிச்சயம் யாராலும் அடிக்க முடியாது என்பது எனக்கு தெரியும்.

தோனிக்கு எதிராக பந்து வீசியபோது புல்லர் பந்துகளை மட்டும் அவருக்கு வீச வேண்டாம் என்று நினைத்திருந்தேன். அப்படி செய்தால் நிச்சயமாக பந்தை அடித்து வெளியே தள்ளி விடுவார்” என கூறினார். முன்னதாக, சிஎஸ்கே அணியில் ஆடி தற்போது பஞ்சாப் கேப்டனாக இருக்கும் சாம் கரண், தோனி திட்டங்களை வகுப்பது போல தான் இந்த 19 வது ஓவரில் ஒரு சுழற்பந்து வீச்சாளரை பயன்படுத்தி இருந்தார்.

தோனி எப்போதும் லெக் ஸ்பின்னர் ஓவரில் ரன் அடிப்பதில் தடுமாற்றம் காணுவார் என்பதை அறிந்து அதற்கேற்ப இக்கட்டான சூழலிலும் சாம் கரன் ரிஸ்க் எடுத்து வெற்றி கண்டதை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Published by
Ajith V

Recent Posts