சபரிமலை ஐயப்பனுக்கு தாலாட்டு பாடிய கிறிஸ்தவர்.. ஹரிவராசனம் பாடல் உருவான வரலாறு

உலகப் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் தினமும் நடை சாத்தப்படுவதற்கு முன்னதாக ஐயப்ப சுவாமிக்கு தாலாட்டுப் பாடலான ஹரிவராசனம் பாடல் ஒலிக்க விட்டு நடை சாத்தப்படுவது வழக்கம். மனதை உருக வைக்கும் இறைவனையே தூங்க வைக்கும் இந்தப் பாடலை இயற்றியவர் கம்பங்குடி ஸ்ரீ குளத்து ஐயர். கடந்த 104 ஆண்டுகளுக்கு முன்பாக இவர் இந்தப் பாடலை இயற்றினார்.

கம்பங்குடி சுந்தரம் குளத்து ஐயர் பிரசுரித்த சாஸ்தா ஸ்துதி கதம்பம் என்ற புத்தகத்தில் உள்ளது தான் இந்த ஹரிவராசனம் கீர்த்தனம். இந்தக் கீர்த்தனையை சபரிமலை ஐயப்பனை தரிசிக்கும்போது பாடியுள்ளார். இதில் இடம்பெற்றிருக்கும் ஒவ்வொரு வரிகளும் ஐயப்பசாமியே அருளியது போல் இருந்ததாக அவர் எண்ணியுள்ளார்.

இந்தப் பாடல் வழக்கத்திற்கு வருவதற்கு முன்பாக சபரிமலையில் மேல் சாந்தியாக இருந்த செங்கன்னூர் கிட்டுமணி திருமேணி நம்பூதிரி புல்லாங்குழல் வாசித்து நடை சார்த்துவது வழக்கத்தில் இருந்தது.

1950 -ல் சபரிமலையில் தீவிபத்து நடந்து பின் 1951-ல் புனரமைக்கப்பட்டது. அப்போது கோவில் மேல்சாந்தியாக இருந்த ஈஸ்வரன் நம்பூதிரி ஹரிவராசனம் கீர்த்தனம் இரவு அர்த்த சாம பூஜையில் ஐயப்பசாமி முன் நின்று ஸ்லோகம் போன்று சொல்வதை மாற்றினார்.

விஜய், அஜீத்துக்கு மிஸ் ஆன மருதமலை.. காமெடியில் பங்கம் பண்ணிய இயக்குநர் சுராஜ்

அப்போதிலிருந்து இந்தப் பாடல் பாடப்பட்டு வந்தாலும், பிரபல கர்நாடக இசை பாடகரும், பின்னனிப் பாடகருமான கே.ஜே.யேசுதாஸ் 1975-ஆம் ஆண்டு தமிழ், மலையாளம் மொழிகளில் வெளியான சுவாமி ஐயப்பன் படத்தில் முதன்முறையாக இந்தப் பாடலைப் பாடினார். யேசுதாஸின் இந்த இனிய குரல் வளம் ஐயப்பனையே கண்ணுறங்க வைப்பதாக இருந்ததால் இந்த இசைத்தட்டை இசைப்பதையே பின் வழக்கமாக மாற்றி இன்றுவரை அது பின்பற்றப்பட்டு வருகிறது.

இப்பாடலுக்கு தேவராஜன் இசையமைத்திருந்தார். எண்ணற்ற பாடல்களை  யேசுதாஸ் பாடியிருந்தாலும் சபரிமலை ஐயப்பன் மேல் பக்தி கொண்டு ஏற்றப்பட்ட இந்த பாடல் அவருக்கு புகழ் சேர்த்தது. யேசுதாஸ் பிறப்பால் கிறிஸ்தவர் ஆனாலும், இசைக்கு சாதி, மத பேதம் கிடையாது என்பதை எடுத்துரைக்கும் விதமாக சுவாமி ஐயப்பனுக்காக இவர் பாடிய பாடல் என்றென்றும் நிலைத்திருக்கும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews