மீண்டும் சிவகார்த்திகேயனுக்கு செக் வைத்தாரா ரஜினிகாந்த்?.. அயலான் உடன் மோதும் லால் சலாம்!

இந்த ஆண்டு சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படம் ஆகஸ்ட் 11ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அதன் பின்னர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10ம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவித்தனர். அதன் காரணமாக சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படம் ரஜினி படத்துடன் மோத வேண்டாம் என்பதற்காக அதிரடியாக ஜூலை மாதமே மாவீரன் படத்தை முன் கூட்டியே ரிலீஸ் செய்திருந்தார்.

திட்டமிட்ட தேதியை விட்டு விட்டு ஒரு மாதத்திற்கு முன்னதாகவே வெளியான நிலையில், மாவீரன் திரைப்படம் 100 கோடி வசூல் செய்யாமல் 89 கோடி வசூலுடன் நின்று விட்டது. இந்நிலையில், இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்ட சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படம் பெரிய படங்களுடன் மோத வேண்டாம் என அதிரடியாக பொங்கலுக்கு தள்ளிப் போன நிலையில், ஒன்றுக்கு 4 படங்கள் பொங்கல் ரிலீஸை குறி வைத்துள்ளன.

மேலும், தற்போது நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள லால் சலாம் படத்தையும் அடுத்த ஆண்டு பொங்கலுக்கே வெளியிடப் போவதாக இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான நிலையில், சிவகார்த்திகேயனின் அயலான் படத்துக்கு மீண்டும் ரஜினிகாந்த் செக் வைத்துள்ளாரா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

ஏற்கனவே அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு அரண்மனை 4, பாலாவின் வணங்கான் உள்ளிட்ட படங்கள் வெளியாக உள்ள நிலையில், அயலான் மற்றும் லால் சலாம் உள்ளிட்ட படங்களும் போட்டி ரிலீஸாக உள்ள நிலையில், அடுத்த ஆண்டு பொங்கலுக்கு பயங்கர கிளாஷ் இருக்கும் என தெரிகிறது.

ஆனால், மீண்டும் ரஜினிகாந்த் உடன் மோத விரும்பாமல் அயலான் படத்தின் ரிலீஸை நடிகர் சிவகார்த்திகேயன் மாற்றுவாரா? நாளை என்ன அப்டேட் வெளியாக போகிறது? என்பதை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

அயலான் திரைப்படம் உருவாகி பல ஆண்டுகள் ஆகி உள்ள நிலையில், இத்தனை போட்டிகளுக்கு மத்தியில் வெளியானால் என்ன ஆகும்? என்கிற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews