7ஆம் வகுப்பு மட்டுமே படித்த பரோட்டா சூரி.. திரையில் ஜொலிப்பதற்கு முன் வாழ்ந்த வாழ்க்கை…

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடியனாக மட்டும் இன்றி ஹீரோவாகவும் நடிகர் சூரி கலக்கி வருகிறார். இவர் விஜய், அஜித், சிவகார்த்திகேயன் என பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் இணைந்து நடித்து தனது காமெடி திறனால் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளார்.

இவர் மதுரையிலிருந்து சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ராஜாக்கூர் என்ற கிராமத்தில் பிறந்துள்ளார். பரோட்டா என்றாலே பிடிக்காத இவருக்கு பரோட்டா சூரி என்ற பெயர் வந்தது விசித்திரமான ஒரு உண்மைதான். ஏழாம் வகுப்பு வரை படித்து முடித்த இவர் படிப்பில் பெரிதாக ஆர்வம் இல்லாததால் எட்டாம் வகுப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு தன் கிராமத்தில் கிடைக்கும் சிறுசிறு கூலி வேலைகளை செய்து வந்தார்.

சூரியின் தந்தை மிகவும் நகைச்சுவையாக பேசக்கூடியவர், அதே சமயம் சூரியின் தந்தைக்கு இருந்த குடிப்பழக்கத்தால் இவரின் குடும்பமே வறுமையில் வாட ஆரம்பித்தது. வறுமை காரணமாகவும் நடிப்பதிலும், நடனம் ஆடுவதிலும் இயற்கையாகவே ஆர்வம் இருந்த காரணமாக திரைப்படத்தில் நடிக்க ஆசைப்பட்டு மதுரையிலிருந்து சென்னைக்கு கிளம்பினார் சூரி.

சென்னைக்குச் சென்றால் எப்படியாவது நடித்து சம்பாதித்து விடலாம் என்று சினிமா துறையை சுலபமாக நினைத்த சூரிக்கு அவர் நினைத்தபடி வாய்ப்புகள் எதுவும் கிடைக்காமல் சென்னை முழுவதும் சுற்றி திரிந்தார்.வயிற்று பசிக்காக சினிமாவில் தான் நடிக்க வேண்டும் என்ற தனது எண்ணத்தை மாற்றிக் கொண்ட இவர் கிடைத்த வேலையெல்லாம் செய்ய ஆரம்பித்தார்.

சென்னை உஸ்மான் ரோட்டில் உடைந்த வீடுகளில் உள்ள மணல்களை அல்லும் டிப்பர் லாரி ஒன்றில் கிளீனராக வேலை செய்தார். சினிமாவிற்காக போடப்படும் செட்டிற்கு பெயிண்ட் அடிக்க பெயிண்ட் வாலியை எடுத்துக் கொடுத்து உதவி செய்யும் உதவியாளர் வேலையையும் செய்துள்ளார். சென்னை முழுவதும் உள்ள பல இடங்களில் பிரபலமான பல ஆர்ட் டைரக்டர்களிடம் இவர் வேலை செய்துள்ளார்.

மந்திரவாசல் என்கிற நாடகத்தின் மின்சார வேலைகளை செய்ய எலக்ட்ரீசியனாக சென்ற இவர் அந்த நாடகத்தில் சிறிய வேடம் ஒன்றில் திருடனாக தோன்றி நடித்தார். அதை தொடர்ந்து படத்தில் நடிகர் கவுண்டமணி நடந்து வருவது போன்ற ஒரு காட்சியில் அவரின் காலில் விழுந்து ஐயா தெய்வமே என சூரி கூறுகிறார். அதற்கு நடிகர் கவுண்டமணியும் சூரியை தூக்கி எழுப்பி பணம் கொடுக்கிறார். இதெல்லாம் வேண்டாம் நீங்க வந்ததே போதும் என சொல்லிவிட்டு அங்கிருந்து செல்கிறார் நடிகர் சூரி. இந்த வசனமே நடிகர் சூரி தமிழ் சினிமாவில் முதன் முதலில் பேசிய நடித்த வசனம் ஆகும்.

அதன் பிறகு பல படங்களில் சிறு சிறு வேடங்களில் மட்டுமே நடித்து வந்த இவர் திரு சுசீந்திரன் இயக்கிய வெண்ணிலா கபடி குழு என்ற படத்தில் வரும் பரோட்டா காமெடி மூலம் உலகம் முழுவதும் பிரபலமானதோடு அன்றிலிருந்து பரோட்டா சூரி என்று அனைவராலும் அழைக்கப்படுகிறார்.

அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்க சிவகார்த்திகேயன் நடித்த சீமராஜா என்கிற படத்திற்காக உடலை வருத்தி சிக்ஸ் பேக் வைத்து ஹீரோக்களுக்கு போட்டியாக மாறினார். மேலும் மகாலட்சுமி என்பவரை திருமணம் செய்து கொண்ட நடிகர் சூரிக்கு வெண்ணிலா, சர்வான் என்கிற இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

நேருக்கு நேராக மோதிக்கொண்ட ரஜினி, கமல் படங்கள்! வெற்றி யாரு பக்கம்!

இன்றுவரை ஐந்து சகோதரர்களுடன் என்றும் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வரும் சூரி தனது சகோதரர்களின் பிள்ளைகளுக்கான கல்வி உதவிகளையும் செய்து வருகிறார். சினிமாவில் என்னதான் பிசியாக இருந்தாலும் ஆண்டுதோறும் தனது சொந்த ஊரான மதுரை ராஜா கோவில் நடக்கும் காளியம்மன் கோவில் திருவிழாவில் பங்கேற்று ஒயிலாட்டம் ஆடி வருகிறார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...