பராக்திக்கு உண்டான ஏக்கம் – ஆடிப்பூரம்

ஐப்பசியில் இருந்து ஒன்பதாவது மாதம் ஆடிமாதமாகும். திருமணமானதும் கருத்தரித்த பெண்களுக்கு ஒன்பதாவது மாதமான ஆடியில் வளைகாப்பு நடப்பது வழக்கம். ஐப்பசியில் சிவ-பார்வதிதேவிக்கு திருமணம் நடக்கும். அதன்படி ஆடியில் அம்மனுக்கு வளைகாப்பு நடக்கவேண்டிய மாதம்.


ஈரேழு உலகத்திலிருக்கும் ஜீவராசிகளின் கவலைகளை போக்கும் அன்னை பராசக்திக்கு ஏக்கத்துடன் ஒருநாள் கயிலையில் அமர்ந்திருந்தாள். அதைக்கண்ட சிவபெருமான், சக்தியை நோக்கி என்ன கவலை என வினவினார். வினாயகர், முருகன் என இரு மகன்கள் எனக்கு இருந்தும், அவர்கள் என் கருப்பையில் உருவாகாததால் எனக்கு வளைப்பூட்டு நடக்கவில்லை. கைநிறைய வளையல்களும், ருசியான சித்ரான்னங்களையும் சாப்பிடவேண்டும் என எனக்கு ஆவல் என சக்தி தேவி கூறினாள்.


இரு மகன்களுக்கு தாயானாலும் சக்திதேவி நித்யக்கன்னிதான். அதனால், ஈரேழு லோகமும்,  மூவுலகையும் காக்கும் அம்பிகைக்கு இப்படி உண்டான கவலையை கண்ட தேவாதி தேவர்கள், ரிஷிகள், ரிஷிபத்தினிகள், முனிவர்கள், மும்மூர்த்திகள், லட்சுமி, சரஸ்வதி அனைவரும் சேர்ந்து வளைகாப்புக்கு ஏற்பாடு செய்தனர். வளைக்காப்பு செய்ய கரு  உருவாக வேண்டுமே என்ன செய்ய?! தட்டைப் பயிறு, சிறுபயிறு, பாசிப்பயறு, மொச்சைப்பயிறு, சோளம், கம்பு, பருத்தி விதைகளை முளைப்பாறியாக்கி, அம்பிகையின் வயிற்றில் வைத்து கட்டி கருக்கோலம் கொண்டிருப்பதாக எண்ணி வளைகாப்பு நடத்தினர்.  விதை முளைத்து வரும் வேளையில் பார்த்தால் ஆண் உயிரணு போல தோணும். அந்த விதையை, பெண் அம்சமான பூமியில் விதைத்தால் ஒரு உயிர் வளரும்.  ஆண், பெண் சேர்க்கையால் வரும் உயிரைப்போலவே பயிரும் கொண்டாடப்படனும்ன்னுதான் இந்த ஏற்பாடு. இப்படிதான் முளைப்பாறி உண்டானது..


அம்மனுக்கு வளைகாப்பு செய்து வாய்க்கு ருசியாய் சமைத்து உணவு கொடுத்து அவளை சமாதானப்படுத்தினர்.  அந்நாளை நினைவுக்கூறும் விதமாய் இன்றும் பல அம்மன் கோவில்களில் அம்மனுக்கு வளைகாப்பு நடத்தப்படும். இதற்காகவே அவரவர் இல்லங்களை சுத்தப்படுத்தி நவதானியங்களை பதப்படுத்தப்பட்ட மண்ணில் விதைத்து  கோமியம், சாணம், பால், தயிர், நெய் கலந்து உருவாக்கப்பட்ட பஞ்சக்கவ்வியம் தெளித்து பாதுகாத்து வளர்த்து வருவர். அந்த ‘மூணு’ நாட்களில் உள்ள பெண்கள் இந்த வேலையிலிருந்து ஒதுங்கியிருந்து முளைப்பாரி தயார் செய்து ஆடிப்பூரத்தன்று அம்மன் சன்னிதியில் சேர்ப்பர். முளைப்பாரியின் வளர்ச்சியினை கண்டு வீடும் நாடும் எந்தளவுக்கு செழிப்பா இருக்கும்ன்னு கணிப்பர்.  முளைப்பாரி பழக்கம் உண்டாக இன்னொரு காரணமும் உண்டு.

திருநெல்வேலி காந்திமதியம்மனுக்கு, ஆடிப்பூர விழாவின் நான்காம் நாளன்று, ஊஞ்சல் மண்டபத்தில் வளைகாப்பு விழா நடைபெறும். இந்த வளைகாப்பு விழாவில் பக்தர்களுக்கு வளையல் பிரசாதமாகத் தரப்படும். இந்த வளையலை வாங்கி அணிந்து கொள்ளும் பெண்களுக்கு விரைவில் வளைகாப்பு வைபவம் நடப்பது உறுதி என்பது நம்பிக்கை.  திருமணம் கைக்கூடும். குழந்தை பாக்கியம் கிட்டும். அதனால், நாளைய தினம் அம்மனுக்கு அணிவித்த வளையல்களை வாங்கி அணிய மறக்காதீர்கள்.

Published by
Staff

Recent Posts