கைவிட்ட கூட்டணி கட்சிகள்.. ஈரோடு இடைத்தேர்தலில் ஓபிஎஸ் எடுத்த அதிரடி முடிவு!

ஈரோடு இடைத்தேர்தல் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் அதிமுக இரண்டு பிரிவாக போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதிமுகவின் இரண்டு பிரிவுகளையும் ஒன்றிணைத்து ஒரே அதிமுக வேட்பாளராக போட்டியிட வைக்க கூட்டணி கட்சிகள் முயற்சி செய்த நிலையில் அந்த முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை.

தனித்தனியாக கூட்டணி கட்சி தலைவர்களை எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர் செல்வம் சந்தித்த நிலையில் கூட்டணி கட்சியின் பெரும்பாலானோர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவுக்கு ஆதரவு கொடுத்துள்ளனர்.

ஆனால் ஓபிஎஸ் கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்த நிலையில் மரியாதை நிமித்த சந்திப்பு மட்டுமே என கூட்டணி கட்சி தலைவர்கள் ஓபிஎஸ் தலைமையிலான அதிமுகவை கைவிட்டு விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த தேர்தலில் ஓபிஎஸ் தரப்பில் இருந்து வேட்பாளர் நிறுத்தப்படவில்லை என்றால் அதிமுகவின் இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு வேட்பாளருக்கு கிடைக்கும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் ஓபிஎஸ் தரப்பு நிச்சயமாக வேட்பாளரை நிறுத்த போவதாக அறிவித்துள்ளது.

opsஏற்கனவே மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்திய ஓ பன்னீர் செல்வம் வேட்பாளரை நிறுத்துவது குறித்து முடிவு செய்திருப்பதாகவும் யார் வேட்பாளர் என்பதை இன்னும் ஒரு சில நாளில் அவர் தெரிவிப்பார் என்றும் கூறப்படுகிறது.

ஜனவரி 31ஆம் தேதி வேட்பமான தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் ஆளும் கட்சி வேட்பாளர் அறிவித்துவிட்டு பிரச்சாரத்தையும் தொடங்கிவிட்ட நிலையில் எதிர்க்கட்சியான அதிமுக இன்னும் வேட்பாளரையே அறிவிக்காமல் இருப்பது பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

அதிமுகவின் இரு அணிகள் தனித்தனியாக போட்டியிட்டால் தோல்வி உறுதி என்ற நிலையில் அதிமுகவுக்கு பதிலாக பாஜக போட்டியிட்டு இரு அணிகளும் பாஜக வேட்பாளருக்கு ஆதரவு கொடுக்கலாம் என்ற ஆலோசனையும் கொடுக்கப்பட்டு வருவதாக தெரிகிறது. அதிலும் அண்ணாமலை போன்ற வலுவான வேட்பாளர் போட்டியிட்டால் நிச்சயம் ஆளும் கட்சி வேட்பாளரான ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு பெரும் சவால் கொடுக்கலாம் என்ற எண்ணமும் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி தலைவர்களிடம் இருப்பதாக கூறப்படுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews