வாழ்வை விசேஷமாக்கும் 9ல் இத்தனை ஆன்மிக விஷயங்களா…? அப்படின்னா கண்டிப்பாக தெரிஞ்சுக்கோங்க…!

எண்களில் விசேஷமான எண்ணாகக் கருதப்படுவது 9. அந்த எண்ணில் நீண்ட வாழ்வு தரும் அர்த்தம் பொதிந்துள்ளது. ஆன்மிக தத்துவங்கள் ஏராளமாகக் கொட்டிக் கிடக்கின்றன. இதை மட்டும் தெரிந்து கொண்டால் ஆன்மிக விஷயங்கள் அனைத்தும் உங்களுக்கு அத்துப்படி. அது என்னன்னு கொஞ்சம் பார்க்கலாமா…

சீனர்களின் சொர்க்க கோபுரம், 9 வளையங்களால் சூழப்பட்டுள்ளது. எகிப்து ஐரோப்பா, கிரீக் நாடுகளில் 9ம் எண் விசேஷமாகப் பயன்படுத்திப் போற்றி வருகின்றனர். புத்த மதத்தில் மிக முக்கியமான சடங்குகள் எல்லாமே 9 துறவிகளைக் கொண்டே நடைபெறும்.

தங்கம், வெள்ளி மற்றும் பிளாட்டினத்தின் சுத்தத்தை 999 என்று மதிப்பிடுவர். பெண்களின் கர்ப்பம், முழுமையடைவது 9ம் மாதம் நிறைவடையும் போது தான். 9 என்ற எண் இன்னும் பல்வேறு மகத்துவங்கள் கொண்டது.

9 என்ற எண்ணை வடமொழியில் நவம் என்று சொல்வர். நவ என்ற சொல்லுக்கு புதிய, புதுமை என்று அர்த்தம்.

9
9

நவதிருப்பதி

தமிழகத்தில் தென்னக மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடியில் புனிதமான நவதிருப்பதி தலங்கள் புகழ்பெற்றவை.

ஸ்ரீவைகுண்டம் சூரிய தலமாகவும், வரகுணமங்கை (நத்தம்) சந்திரன் தலமாகவும், திருக்கோளூர் செவ்வாய் தலமாகவும், திருப்புளியங்குடி புதன் தலமாகவும் ஆழ்வார்திருநகரி குரு தலமாகவும், தென்திருப்பேரை சுக்ரன் தலமாகவும், பெருங்குளம் சனி தலமாகவும், இரட்டைத்திருப்பதி (தேவர் பிரான்) ராகு தலமாகவும், இரட்டைத் திருப்பதி (அரவிந்த லோசனர்) கேது தலமாகவும் விளங்குகின்றன.

நவகைலாயங்கள்

தமிழகத்தின் தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடியில் நவகைலாயங்கள் புகழ்பெற்றவை. அவை பாபநாசம், சேரன்மகாதேவி, கோடகநல்லூர், குன்னத்தூர், முறப்பநாடு, திருவைகுண்டம், தென்திருப்பேரை, ராஜபதி, சேர்ந்தபூமங்கலம்.

அதே போல நவசக்திகளாக வாமை, ஜேஷ்டை, ரவுத்ரி, காளி, கலவிகரணி, பலவிகரணி, பலப்பிரமதனி, சர்வபூததமனி, மனோன்மணி ஆகியவை உள்ளன. நவதீர்த்தங்களாக கங்கை, யமுனை, சரஸ்வதி, கோதாவரி, சரயு, நர்மதை, காவிரி, பாலாறு, குமரி ஆகியவை உள்ளன.

நவ வீரர்களாக வீரவாகுதேவர், வீரகேசரி, வீரமகேந்திரன், வீரபுரந்திரன், வீரராட்சசன், வீரமார்த்தாண்டன், வீரராந்தகன், வீரதீரன் ஆகியோர் உள்ளனர். மஞ்சள், பஞ்சாமிர்தம், பால், நெய், தேன், தயிர், சர்க்கரை, சந்தனம், விபூதி ஆகியவை நவஅபிஷேகங்கள்.

நவக்கிரகங்கள்

இன்பம், நகை, கருணை, கோபம், வீரம், பயம், அருவருப்பு, அற்புதம், சாந்தம் ஆகியவை நவரசங்கள். சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது ஆகியவை நவக்கிரகங்கள்.

கோமேதகம், நீலம், வைரம், பவளம், புஷ்பராகம், மரகதம், மாணிக்கம், முத்து, வைடூரியம் நவமணிகளாகவும், நவரத்தினங்களாகவும் சொல்லப்படுகின்றன.

பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம், காலம், திக்கு, ஆன்மா, மனம் ஆகியவை நவ திரவியங்கள்.

பொன், வெள்ளி, செம்பு, பித்தளை, ஈயம், வெண்கலம், இருப்பு, தரா, துத்தநாகம் ஆகியவை நவலோகம் அதாவது தாது என்று அழைக்கப்படுகிறது.

நெல், கோதுமை, பாசிப்பயறு, துவரை, மொச்சை, எள், கொள்ளு, உளுந்து, வேர்க்கடலை நவதானியங்களாக உள்ளன.

சோமவார விரதம், திருவாதிரை விரதம், உமாகேஸ்வர விரதம், சிவராத்திரி விரதம், பிரதோஷ விரதம், கேதார விரதம், ரிஷப விரதம், கல்யாண சுந்தர விரதம், சூல விரதம் ஆகியவை நவ சிவவிரதங்கள்.

அரிதாளம், அருமதாளம், சமதாளம், சயதாளம், சித்திர தாளம், துருவதாளம், நிவர்த்தி தாளம், படிமதாளம், விட தாளம் நவசந்தி தாளங்கள் என பெயர் பெறுகின்றன.

அந்த வகையில் அடியார்களின் பண்புநலன்களைக் குறிப்பிட்டால் அவையும் 9 ஆகத் தான் உள்ளன. எதிர்கொளல், பணிதல், ஆசனம் அதாவது இருக்கை தருதல், கால் கழுவுதல், அர்ச்சித்தல், தூபம் இடல், தீபம் சாத்தல், புகழ்தல், அமுது அளித்தல்.

விக்ரமார்க்கனின் சபையில் இருந்த 9 புலவர்கள் நவரத்னங்கள் என்று அழைக்கப்பட்டனர்.

நவரத்னங்களில் (முனிவர்கள்) முதலாவதாக தன்வந்திரி உள்ளார். ஷணபகர், அமரசிம்ஹர், சங்கு, வேதாலபட்டர், கடகர்ப்பரர், காளிதாசர், வராகமிஹிரர், வரருசி ஆகியோரும் நவரத்னங்களில் அடங்குவர்.

அடியார்களுக்கும் நவகுணங்கள் உண்டு. அவை அன்பு, இனிமை, உண்மை, நன்மை, மென்மை, சிந்தனை, காலம், சபை, மவுனம்.

நவநிதிகளைப் பார்த்தாலும் 9 தான். சங்கம், பதுமம், மகாபதுமம், மகரம், கச்சபம், முகுந்தம், குந்தம், நீலம், வரம்.

நவகுண்டங்களாக உள்ளவற்றை நாம் யாகசாலையில் பார்த்திருப்போம். அவை சதுரம், யோனி, அர்த்த சந்திரன், திரிகோணம், விருத்தம், வட்டம், அறுகோணம், பத்மம், எண் கோணம், என 9 விதமான அமைப்புகளில் இருக்கும்.

பிரதான விருத்தங்கள் 9. அவை, நவவித பக்தி, சிரவணம், கீர்த்தனம், ஸ்மரணம், பாத சேவனம் அர்ச்சனம், வந்தனம், தாஸ்யம், சக்கியம், ஆத்ம நிவேதனம்.

Navakailash
Navakailash

நவ பிரமாக்களை எடுத்துக் கொண்டால் அவர்களும் 9 பேர் தான். குமார பிரம்மன், அர்க்க பிரம்மன், வீர பிரம்மன், பால பிரம்மன், சுவர்க்க பிரம்மன், கருட பிரம்மன், விஸ்வ பிரம்மன், பத்ம பிரம்மன், தராக பிரம்மன்.

நவக்கிரக தலங்களாக சூரியனார் கோயில், திங்களூர், வைத்தீஸ்வரன் கோவில், திருவெண்காடு, ஆலங்குடி, கஞ்சனூர், திருநள்ளாறு, திருநாகேஸ்வரம், கீழ்ப்பெரும்பள்ளம் உள்ளன.

நவபாஷாணங்களாக வீரம், பூரம், ரசம், ஜாதிலிங்கம், கண்டகம், கவுரி பாஷாணம், வெள்ளை பாஷாணம், ம்ருதர்சிங், சிலாஷத் ஆகியவை உள்ளன.

நவதுர்க்கா, நவராத்திரி

நவதுர்க்காவைப் பற்றிக் கேள்விப்பட்டு இருப்போம். அவர்கள் யார் என்று தெரியாது. அவர்கள் தான் இவர்கள். ஸித்திதத்ரி, கஷ்முந்தா, பிரம்மாச்சாரினி, ஷைலபுத்ரி, மகிஷாசுரமர்த்தினி, காளராத்ரி, மகா கவுரி, சந்திரகாந்தா, ஸ்கந்தமாதா.

அம்பாள் மகிசாசுரனை வதம் செய்வதற்காக 9 நாள்கள் விரதம் இருந்த காலம் நவராத்திரி.

நவசக்கரங்களாக த்ரைலோக்ய மோகனம், சர்வசாபுரகம், சர்வ சம்மோகனம், சர்வ சவுபாக்கியம், சர்வார்த்த சாதகம், சர்வ ரஷக்கரம், சர்வ ரோக ஹரம், சர்வ சித்தி ப்ரதம், சர்வனந்த மையம்.

நவநாதர்களாக ஆதி நாதர், உதய நாதர், சத்ய நாதர், சந்தோஷ நாதர், ஆச்சாள் அசாம்பயநாதர், கஜ்வேலி கஜ்கண்ட நாதர், சித்த சொவ்றங்கி, மச்சேந்திர நாதர், குரு கோரக்க நாதர் ஆகியோர் உள்ளனர்.

உடலின் துவாரங்களும் 9 தான். 2 கண்கள், 2 காதுகள், 2 மூக்குத் துவாரங்கள், ஒரு வாய், 2 மலஜல துவாரங்கள். மனித உடலில் இருப்பது 9 சக்கரங்கள். தோல், ரத்தம், மாமிசம், மேதஸ், எலும்பு, மஜ்ஜை, சுக்கிலம், தேஜஸ், ரோமம்.

மனித உடல் உறுப்புகளை 9 மண்டலங்களாகப் பிரிக்கலாம். அவை, உடல், மூச்சு, ரத்தம், சீரணம், எலும்பு, நரம்பு, தசை, கழிவு, நாளமில்லா சுரப்பி.

ஜோதிட சாஸ்திரப்படி, நவகோள்களாக சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, ராகு, கேது உள்ளன. சூரியனைச் சுற்றி 9 கோள்கள் சுற்றி வருகின்றன. அவை… புதன், வீனஸ், பூமி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன், புளூட்டோ.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews