பெண்களே கொஞ்சம் கவனிங்க… உங்கள் வீட்டிற்கு மகாலெட்சுமி வர வேண்டுமா? இப்படி விளக்கேற்றுங்க…!

இன்று (20.10.2023) நவராத்திரியின் 6ம் நாள். இன்று தேவியின் ரூபம் என்ன? எப்படி வழிபடுவது? அதற்குரிய பலன் என்ன என்று பார்ப்போம்.

நவராத்திரியின் இந்த ஆறாவது நாளில் நாம் மகாலெட்சுமியை வழிபட வேண்டிய நிறைவு நாள். இந்த நாளில் மகாலெட்சுமி சண்டிகா தேவி என்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறாள்.

சண்டிகா என்றால் கொஞ்சம் உக்கிரமான பெயர். ஹோமங்களிலேயே மிக உயர்ந்த பலன் தரக்கூடியது சண்டி ஹோமம். இதை எல்லோராலும் செய்து விட முடியாது. இதற்கு நாயகி தான் சண்டிகாதேவி. இவளுக்கு போர் குணம் உண்டு. பக்தர்களை அழிப்பதற்கு உதவுகிற நாயகியாக அந்த தேவி காட்சி தருகிறாள்.

Sandiga devi
Sandiga devi

இந்த நவராத்திரியின் 9 நாள்களும் ஒவ்வொரு அசுரர்களாக அழித்துக் கொண்டே இருக்கிறாள். அதனால் ஒவ்வொருவருக்கும் போர் குணம் உண்டு. அவர்களில் ஒருவர் தான் சண்டிகாதேவி. பக்தர்கள் மேல் வாஞ்சையான தெய்வம். அவர்களுக்கு ஏதாவது ஆபத்து என்றால் ஓடோடி வந்து காப்பாற்றுவாள்.

பகைவர்களுக்கு கோபமான தெய்வம். அதனால தான் சண்டி ஹோமம் பண்ணும்போது ஹோமத்திற்கு உண்டான திரவியங்களே அதிகமாக இருக்கும். எல்லாவற்றையும் அந்த தேவிக்கு ஆகுதி பண்ணி தேவிக்கான மந்திரங்களைச் சொல்லி சொல்லி ஹோமத்தை நடத்தும்போது கண்டிப்பாக அதில் அந்த தேவியை நாம் பார்க்க முடியும். இந்த தேவியை நாம் வழிபாடு நடத்தும்போது நமக்கு ஜென்ம சாபங்கள் விலகும்.

13 வகையான சாபங்கள் நமக்கு உண்டு. அவற்றில் ஒன்று தான் ஜென்ம ஜென்மங்களாக வரும் சாபம். அவை அனைத்தையும் அழிவதற்கு இந்தத் தேவியைத் தான் நாம் வழிபட வேண்டும். நமக்குப் பிரச்சனைக்கு மேல் பிரச்சனை வந்தால் அதற்குக் காரணம் யார் என்று கண்டுபிடிக்கவே முடியாது.

ஜாதகத்தில் போய் பார்த்து வந்தோமானால் ஜென்ம சாபம்னு சொல்றாங்க. யாரோ செஞ்சதுக்கோ நாம தண்டனையை அனுபவிக்கிறோம். அதான் இப்படி வருதாம் என்று கவலைப்படுவாங்க. இனி கவலைப்பட வேண்டாம். இதுபோன்ற பிரச்சனைகளில் இருந்து நம்மைக் காப்பாற்றுகிறாள் சண்டிகாதேவி.

Navarathiri 6 A
Navarathiri 6 A

எல்லாவற்றிலும் ஏற்படக்கூடிய பய உணர்வையும், தலைமுறை தலைமுறையாக வரும் தரித்திரத்தையும் இவள் போக்குகிறாள். சிலர் பரம்பரை பரம்பரையாகவே ஏழையாகவே இருப்பாங்க. அப்படி இருந்தால் கூட இந்த சண்டிகாதேவியின் வழிபாடு அதை நீக்கும் வல்லமை படைத்தது.

இன்று அம்பிகையின் ரூபம் சண்டிகா தேவி. இன்று செம்பருத்தி மலர், சந்தன இலை கொண்டு அர்ச்சிக்கலாம். தேங்காய் சாதம் கொண்டு நைவேத்தியம் செய்யலாம். நார்த்தம், ஆரஞ்சு பழம் கொண்டு படையல் வைக்கலாம். கடலை வகைகளில் பச்சைப் பயிறு சுண்டல் உகந்தது. நீலாம்பரி ராகத்தில் அமைந்த பாடல்களைப் பாடலாம்.

இன்று கவலைகள் நீங்கி வாழ்க்கையில் பொருள்கள் வந்து சேரும். வெற்றி நமது வாழ்வில் வந்து கொண்டே இருக்கும்.

பொதுவாகவே பெண்கள் எதையும் எதிர்கொள்ளக்கூடிய மன தைரியத்துடன் வாழ வேண்டும். பொதுவாகவே பெண்கள் அழுதாலே நல்லது கிடையாது. தேவையில்லாமல் அழக்கூடாது. சின்ன விஷயத்திற்கு எல்லாம் அழக்கூடாது. அழுது புரண்டு காரியத்தை சாதித்துக் கொள்ளலாம் என்று அழக்கூடாது. எப்பவும் சிரித்துக் கொண்டே இருக்கும் பெண்கள் தான் அழகாக இருப்பார்கள். அழுவதனால் எதுவும் மாறப்போவதில்லை.

அதனால் அழுது பிறருக்குத் தேவையில்லாமல் மனக்கசப்பை ஏற்படுத்தக்கூடாது. அதிலும் முக்கியமாக விளக்கு வைச்சதும் அழக்கூடாது. மாலை நேரமானதும் பெண்கள் மங்களகரமாக வந்து தீபம் ஏற்றினால் அங்கு மகாலெட்சுமி வருவாள். அழுது கொண்டே விளக்கு ஏற்றினால் அது மகாலெட்சுமி வருவதற்கு தடையாக இருக்கும்.

எப்போதுமே சந்தோஷமாக ஒரு பிரச்சனையைக் கையாள அறிவுப்பூர்வமாக சிந்தித்து செயல்பட வேண்டும். பிறருக்கு ஒரு ரோல் மாடலாக இருக்க வேண்டும்.

 

 

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews