வாய்ப்புக் கொடுக்காத தயாரிப்பாளர்… எம்.ஜி.ஆர் கையாண்ட யுக்தியால் பிரபலமான முன்னணி இசையமைப்பாளர்கள்!

தமிழ் சினிமாவின் இசை மன்னர்களாக கே.வி.மகாதேவனும், எம்.எஸ். விஸ்வநாதனும் ஆண்டு கொண்டிருந்த காலகட்டம் அது. அப்போதுதான் அறிமுகமாகி சின்ன சின்ன படங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருந்தனர் சங்கர்-கணேஷ் என்ற இசையமைப்பளார்கள். ஒவ்வொரு கலைஞனுக்கும் புகழ்பெற்ற நடிகர்களுடன் பணிபுரிய வேண்டும் என்பது கனவு. அவ்வாறே சங்கர்-கணேஷ்-ம் மக்கள் திலகம் எம்.ஜி.ஆருடன் பணிபுரிய வாய்ப்புக் கிடைக்காதா என்று ஏங்கியிருந்த நேரம் அது.

1967-ம் ஆண்டு தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் வெளியான மகராசி என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார்கள். தொடர்ந்து அக்கா தங்கை, காலம் வெல்லும், மன்னவன் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்தனர். அந்த காலக்கட்டத்தில் எம்.ஜி.ஆர் படங்களுக்கு இசையமைக்க வேண்டும்என்பது இவர்களின் ஆசையாக இருந்தது.

இதன் காரணமாக எம்.ஜி.ஆர் படங்கள் பற்றி பேச்சுக்கள் வரும்போதெல்லாம் அவரை சந்தித்து இருவரும் வாய்ப்பு கேட்டுள்ளனர். அப்போது ஒருநாள், எம்.ஜி.ஆரின் நான் ஏன் பிறந்தேன் என்ற படம் குறித்து அறிவிப்பு வந்தபோது, சங்கர் – கணேஷ் இருவரும் எம்.ஜி.ஆரை சந்தித்து வாய்ப்பு கேட்டுள்ளனர். இதற்கு ஒப்புக் கொண்ட எம்.ஜி.ஆர், இது குறித்து தயாரிப்பாளர் ஜி.என்.வேலுமணியிடம் பேசியுள்ளார்.

16 வயதினிலே குருவம்மா.. தமிழ் சினிமாவின் செல்லமான ‘அக்கா‘ காந்திமதியின் திரைப்பயணம்

படத்தின் தயாரிப்பாளரான ஜி.என்.வேலுமணி சங்கர் கணேஷ் இசையமைக்க கடைசிவரை ஒப்புக் கொள்ளவே இல்லை. இதனால் என்ன செய்வது என்று யோசித்த எம்.ஜி.ஆர், ஒருநாள் தயாரிப்பாளர் ஜி.என்.வேலுமணியை தனது தோட்டத்திற்கு வரவழைத்து சில பாடல்களை போட்டு காட்டி பாடல் எப்படி இருக்கிறது என்று சொல்லுங்கள் என்று கூறியுள்ளார். பாடலை கேட்ட வேலுமணி பிரமாதமாக இருக்கிறது. எம்.எஸ்.வி இசை சொல்லவா வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதை கேட்ட எம்.ஜி.ஆர் நீங்கள் சொல்வது சரிதான். பாடல் பிரமாதமாக இருக்கிறது. ஆனால் இது எம்.எஸ்.வி இசையமைத்தது அல்ல, இவர்கள் தான் இசையமைத்தார்கள் என்று சொல்லி சங்கர் – கணேஷ் இருவரையும் அறிமுகப்படுத்தியுள்ளார். இப்போது சொல்லுங்கள் இவர்கள் இந்த படத்திற்கு இசையமைக்கலாமா என்று எம்.ஜி.ஆர் கேட்ட, ஜி.என்.வேலுமணி உடனடியாக ஒப்புக்கொண்டுள்ளார். 1972-ம் ஆண்டு வெளியான நான் ஏன் பிறந்தேன் படத்தின் பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

அதே ஆண்டு வெளியான எம்.ஜி.ஆரின் இதயவீணை படத்திற்கும் சங்கர் – கணேஷ் இசையமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு முன்பே கணேஷை தனது மாப்பிள்ளை என்று அழைக்கும் எம்.ஜி.ஆர் இதயவீனை படத்தின் பேச்சுக்கள் தொடரும்போதே மாப்பிள்ளை இசையமைக்கட்டும் என்று தயாரிப்பாளரிடம் கூறி வாய்ப்பு பெற்றுக் கொடுத்திருக்கிறார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews