ஆன்மீகம்

அறுபடை வீடு கொண்ட திருமுருகா…திருமுருகாற்றுப்படைதனிலே வரும் முருகா….!

முருகனின் அறுபடை வீடுகள் அற்புதங்கள் நிறைந்தது.  ஒவ்வொன்றிலும் ஒரு திருவிளையாடல். வேண்டிய மாம்பழத்தைக் கணபதிக்கு அந்த வெள்ளிப்பனித்தலையர் கொடுத்ததற்கு ஆண்டியின் கோலமுற்று மலைமீது நீ அமர்ந்த பழனி ஒரு படைவீடு என சீர்காழி கோவிந்தராஜன் அகஸ்தியராக உருவெடுத்து கந்தன் கருணை படத்தில் வெகு அழகாகப் பாடியிருப்பார். இந்தப்பாடலில் அகத்தியராக வரும் சீர்காழியின் வெண்கலக்குரல் நம்மை அறுபடைவீடுகளுக்கும் அழைத்துச் செல்வது பரவசம்.

பழனிமலை அத்தகைய சிறப்பு வாய்ந்தது. இன்று அங்கு மகாகும்பாபிஷேகம் வெகுவிமரிசையாக நடைபெறுகிறது. குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் குடியிருப்பான் என்பதற்கேற்ப முருகப்பெருமானின் அறுபடை வீடுகளையும் அதன் சிறப்புகளையும் பற்றிப் பார்ப்போம்.

திருப்பரங்குன்றம்

Tiruparankundram

இது முதல் படை வீடு. இங்கு சுப்பிரமணிய சுவாமி மணக்கோலத்தில் காட்சி தருகிறார். அசுரனை வென்ற அவர் இந்த தலத்தில் இந்திரனின் மகளான தெய்வானையை திருமணம் செய்துகொண்டார்.

முருகன் அமர்ந்த கோலத்திலுடன் இங்கு காண்பது சிறப்பு. இத்தலத்தில் மலை வடிவில் சிவபெருமான் அருள்புரிகிறார். சிவனின் பெயரால் இத்தலம் ‘திருப்பரங்குன்றம்’ எனப்படுகிறது. முருகனின் அருகில் நாரதர் தாடியுடன் இருப்பது குறிப்பிடத்தக்கது.

திருச்செந்தூர்

Tiruchendur

இரண்டாம் படை வீடு. இது கடலோரத்தில் அலைகள் வீச அமைந்துள்ளதால் அலைவாய் என்றும் பெயர் கொண்டது. முருகப் பெருமான், சூரர்களை வெல்வதற்கு முன்னும், பின்னும் தங்கிய இடம் இது. இவரது திருவடிகளை படகுக்கு இணையாகச் சொல்வார்கள்.

அதனால்தான், இந்த முருகனின் திருவடிகளை வணங்கினால் பிறவிப் பெருங்கடலை கடக்கலாம் என்ற நம்பிக்கையை பக்தர்கள் கொண்டுள்ளார்கள்.

பழநி

மூன்றாம் படை வீடு. மருந்தே மலையாக அமைந்த தலம் இது. பழநியில் கால் வைத்தாலே பாதி நோய் தீரும். மலை ஏறிவிட்டால் முழு நோயும் நீங்கும்.

12 ஆண்டுகளுக்கு தொடர்ந்து காலை நான்கு மணிக்கு எழுந்து நீராடி, கிரிவலம் வந்து, மலை மீது ஏறி, முருகன் திருவடி தரிசித்து, தியானத்தில் அமர்ந்தால் அனைத்தும் ஒன்றே என்ற அற்புத தத்துவ விளக்கம் பெறுவதுடன், வாழ்க்கையை உணரும் ஞானஒளியையும் பெற்றுவிடலாம்.

முருகனுக்கு அபிஷேகம் செய்யப்பட்ட பஞ்சாமிர்தம், பால், தீர்த்தம் போன்றவற்றை சாப்பிட்டால் நோய் தீரும் என்பது உண்மை. பழநி கோயிலுக்கு அபூர்வ சக்தி அளிப்பது இந்தச் சிலைதான். போகர் சித்தரால் நவபாஷாணத்தால் உருவாக்கப்பட்டது இந்த தண்டபாணி சிலை.

இச்சிலை முழுமையும் மூலிகை திடத்தால் ஆனது. கற்களே இல்லாமல் செய்யப்பட்டது. இந்த மூலிகைச் சிலையிலிருந்து அபிஷேகிக்கப்பட்ட நீரை அருந்துவதால், நம்மில் தெரியாதிருக்கும் நோய், நமக்குத் தெரியாமலே ஒழிந்துபோகிறது.

சுவாமிமலை

Swamimalai

நான்காம் படை வீடு. சிவபெருமானுக்கு பிரணவ மந்திரத்தை உபதேசித்து சுவாமிநாதனாக முருகப்பெருமான் வீற்றிருக்கின்றார். தன் பிள்ளையின் வாயால் பிரணவ மந்திரத்தின் பொருளை கேட்டு மகிழ்ந்தார் சிவன்.

அதுவும், தன் பிள்ளை குருவாக வீற்றிருக்க, தானே சீடனைப்போல் அமர்ந்து கேட்டார். அதனால் ‘சிவகுருநாதன்’ என்ற பெயரை முருகப்பெருமான் பெற்றார்.

திருத்தணி

Thiruthani

ஐந்தாம் படை வீடு. பொதுவாக, அழகே உருவாக பொலிவுடன் காட்சி தரும் முருகன், இங்கே மார்பில் காயம்பட்ட தடத்துடன் இருக்கிறார். சூரனுடன் போரிட்டபோது ஏற்பட்ட காயம் இது. திருச்செந்தூரில் சூரனை வதம் செய்த முருகன் இங்கு வந்து கோபம் தணிந்து சாந்தமாக அமர்ந்தார்.

கோபம் தணித்த இடம் என்பதால் ‘தணிகை’ என இவ்வூர் பெயர் பெற்றது. அபிஷேக சந்தனம் இத்தலத்தில் பிரசாதமாகத் தரப்படுகிறது. இதனை பக்தர்கள் நீரில் கரைத்து குடிக்கின்றனர். இதனால், நோய் நீங்கும் என்பது நம்பிக்கை.

சோலைமலை (பழமுதிர்ச்சோலை)

Palamuthirsolai

ஆறாவது படை வீடு. அவ்வைக் கிழவியிடம், ‘சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?’ என்று சாதுர்யத்துடன் உரையாடிய முருகன், இங்கு கோயில் கொண்டிருக்கிறார். உலக உயிர்கள் அனைத்தும் பழங்கள். அவற்றின் மீது பாசபந்தம் என்னும் மண் ஒட்டியிருக்கிறது.

அதனைப் போக்க கல்வியறிவு மட்டும் போதாது. இறையருள் என்னும் மெய்யறிவும் வேண்டும் என்பதை உணர்த்த சுட்டிப்பையனாக வந்து திருவிளையாடல் புரிந்தார் முருகன். தன்னை வழிபட்டவர்க்கு கல்வியறிவும், ஞானமும் தருபவராக அருள்கிறார்.

Published by
Sankar

Recent Posts