இட்லி, தோசைக்கேற்ற பருப்பில்லாத சாம்பார் – பேச்சிலர்ஸ் சமையல்

தென்னிந்திய சமையலில் சாம்பாருக்கென தனி இடமுண்டு. சாம்பார் என்றாலே பருப்புதான் முக்கிய மூலப்பொருள். திடீரென விருந்தாளிகள் வந்தாலோ அல்லது விசேசங்களில் சாம்பார், சட்னி போதவில்லை என்றால் சட்டென இந்த சாம்பாரை வைத்து சமாளிப்பார்கள். புதுசாய் சமையல் பழகும் பெண்களும் தனித்திருக்கும் ஆண்கள் சுலபமாய் இந்த சாம்பாரை வைத்துவிடலாம்.

தேவையான பொருட்கள்

எண்ணெய் – இரண்டு டீஸ்பூன்
கடுகு – கால் டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – கால் டீஸ்பூன்
கடலை பருப்பு – ஒரு டீஸ்பூன்
வெந்தயம் – அரை டீஸ்பூன்
பெரிய வெங்காயம் – ஒன்று (நறுக்கியது)
பச்சை மிளகாய் – ஐந்து (நறுக்கியது)
கறிவேப்பிலை – சிறிதளவு
தக்காளி – நான்கு (நறுக்கியது)
மஞ்சள் தூள் – சிறிதளவு
உப்பு – தேவைகேற்ப
தண்ணீர் – தேவையான அளவு
கடலை மாவு – இரண்டு டீஸ்பூன்

ed0f46d80bf3cb62cc2bce2fd202bd6d

செய்முறை

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்து பருப்பு, கடலை பருப்பு, வெந்தயம் போட்டு தாளிக்கவும். பின்னர் இதில் நறுக்கிய வெங்காயம், இரண்டாக கீறிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை, நறுக்கிய தக்காளி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். வதங்கிய கலவையில் தண்ணீர் தேவையான அளவு ஊற்றி கொதிக்கவிடவும் . நன்கு கொதித்ததும் உப்பு, காரம் பார்த்து தேவையெனில் சேர்க்கவும். பிறகு கடலை மாவில் கால் டம்ளர் தண்ணீர் ஊற்றி கட்டியில்லாமல் கலக்கி கொதிக்கும் குழம்பில் ஊற்றி இரண்டு நிமிடம் கழித்து இறக்கவும். பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.

இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ள ஏற்றது இது. விருப்பப்பட்டால் பூண்டு பற்கள் சேர்க்கலாம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews