விநாயக சதுர்த்தி ஸ்பெஷல் கொழுக்கட்டை! வாயில் வைத்தவுடன் கரையும் சுவை!

முழு முதற்கடவுளான விநாயகருக்கு விசேஷமான நாள் விநாயக சதுர்த்தி. அன்றய தினம் நாம் நம் வீட்டு விநாயகருக்கு பிடித்தமான இனிப்புகளை சமைத்து சாமி வழிபாடு செய்வது வழக்கம். அந்த வகையில் சதுர்த்தி என்றாலே நமக்கு மோதகம் தன் நினைவுக்கு வருகிறது. இந்த மோதகம் கடவுள் விநாயகருக்கும் பிடித்தமான உணவு. இந்த மோதகத்தை எப்படி எளிமையாக வீட்டில் செய்யாலாம் எனா பார்க்கலாம் வாங்க..

தேவையான பொருட்கள்:

அரிசி மாவு / இடியாப்பம் மாவு – 1 ½ கப்

எண்ணெய் – ½ முதல் 1 தேக்கரண்டி

உப்பு – சிறிதளவு

பூரணம் தயார் செய்ய :

வெல்லம் – 100 கிராம்

தேங்காய் துருவல் – ½ கப்

முந்திரி – 8 முதல் 10

பாதாம் – 10 முதல் 12

வேர்க்கடலை – 2 முதல் 3 டீஸ்பூன்

ஏலக்காய் போடி – ½ தேக்கரண்டி

நெய் – 1 டீஸ்பூன்

செய்முறை:

முதலில் ஒரு கனமான பாத்திரத்தில் தண்ணீரை சூடாக்க வேண்டும், தண்ணீர் நன்கு சூடானதும் அதில் சிறிதளவு உப்பு, ஒரு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து அடுப்பை அணைக்க வேண்டும். அதன் பின் அதில் நாம் வைத்திருக்கும் இடியாப்ப மாவு அல்லது அரிசி மாவை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

மாவை மொத்தமாக சூடான தண்ணீரில் சேர்க்கக்கூடாது, மெதுவாக சேர்க்க வேண்டும் இல்லை என்றால் மாவு கட்டி கட்டியாக மாறிவிடும். அப்படி மெதுவாக கலந்த மாவை மேலே ஒரு ஈரத்துணி வைத்து மூடி ஒரு ஓரமாக வைத்து விட வேண்டும்.

இப்பொழுது கொழுக்கட்டைக்கு தேவையான வெளிப்புறம் கிடைத்துவிட்டது. அதை சிறிய உருண்டைகளாக பிடித்து கொள்ள வேண்டும். நாம் இனி உள்ளே வைக்கும் பூரணம் தயார் செய்ய வேண்டும்.

இப்பொழுது பூரணம் தயார் செய்ய மேலே கொடுக்கப்பட்ட பொருட்களை ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்துக் கொண்ட பூரணத்தை ஒரு பாத்திரத்தில் மாற்றி அதில் சிறிது நெய் சேர்த்து சிறிய சிறிய உருண்டைகளாக பிடித்துக் கொள்ள வேண்டும்.

அதன் பின் நாம் கொழுக்கட்டை தயார் செய்ய முதலில் ஒரு வாழை இலையை எடுத்துக் கொள்ள வேண்டும். அதை சுத்தம் செய்து அதன் மேல் சிறிதளவு எண்ணெய் தடவிக் கொள்ள வேண்டும். இப்பொழுது நாம் முதலில் தயார் செய்து வைத்திருக்கும் அரிசி மாவு உருண்டையை இதில் வைத்து வட்டமாக தட்ட வேண்டும்.

அதன் மையத்தில் நாம் தயாரித்து வைத்திருக்கும் பூரண உருண்டையை வைத்து மெதுவாக அனைத்து பக்கங்களையும் சேர்த்து மூட வேண்டும். இப்பொழுது நன்கு பந்து மாதிரி உருண்டை நமக்கு கிடைக்கும். அதன் பின் இந்த உருண்டையை இட்லி வேக வைக்கும் பாத்திரத்தில் பத்து முதல் 15 நிமிடம் நன்கு வேக வைக்க வேண்டும்.

வாழை இலையில் எண்ணெய் தடவினால் மட்டுமே கொழுக்கட்டை ஒட்டாமல் கையில் வரும்,அதேபோல் இட்லி பாத்திரத்திலும் சிறிதளவு எண்ணெய் அல்லது நெய் தடவினால் கொழுக்கட்டை மிருதுவாகவும் சுவையாகவும் இருக்கும்.

15 நிமிடங்கள் கழித்து கொழுக்கட்டை நன்கு வெந்ததும், நாம் ஒரு பாத்திரத்திற்கு மாற்றி விநாயகருக்கு வைத்து கும்பிடலாம். குறிப்பாக கொழுக்கட்டை தயார் செய்ய சூடான தண்ணீரை மட்டுமே பயன் படுத்த வேண்டும். இப்போது சூடாக தயாரான இனிப்பு கொழுக்கட்டையை அனைவரும் ருசிக்கலாம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews