போகிப்பண்டிகையின் நோக்கமே இதுதாங்க… வீட்டிற்கே குலதெய்வத்தை வரவழைப்பது எப்படின்னு தெரியுமா?

பொங்கலை ஒட்டி ஆண்டுதோறும் தைப்பொங்கலுக்கு முந்தைய தினத்தைப் போகியாகக் கொண்டாடுவர். வரும் ஞாயிற்றுக்கிழமை (14.1.2024) போகிப்பண்டிகை.

பழையன கழிதலும், புதியன புகுதலும் உண்டான நாள் தான் போகி. எரிக்க வேண்டுமே என்று தேவையில்லாதவற்றை எல்லாம் எரித்து காற்றை மாசுபடுத்தக்கூடாது. நம் முன்னோர்கள் பயன்படுத்தியவை எல்லாம் மக்கும் பொருள்கள் தான். அவை மண்பானை, தென்னை மற்றும் பனை ஓலைப் பொருள்கள் தான்.

இவை பழையனவாக இருந்தால் அவற்றை உரக்குழியில் போட்டு விடுவார்கள். எரிக்கும் பொருள்களாக இருந்தால் அவற்றை எரித்து விடுவார்கள். அதனால் காற்றும் மாசுபடாது. ஆனால் நாமும் எரிக்க வேண்டுமே என்று பிளாஸ்டிக் பொருள்களை எல்லாம் போட்டு எரித்து விடுகிறோம். இதனால் காற்று மாசுபடுவதோடு, நம் உடல் நலத்திற்கும் தீங்காகி விடுகிறது.

நமது மனதில் தேவையில்லாத குப்பைகளான கோபம், ஆசை, பகை, பொறாமை, வஞ்சனை என நிறைய உள்ளன. இவற்றை எல்லாம் நீக்கி விட்டு நல்ல எண்ணங்களை மனதில் கொண்டு வர வேண்டும். அதற்கேற்ப நம் மனதைப் பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டிய நாளாகவும் இந்தப் போகித்திருநாளை நாம் எடுத்துக் கொள்ளலாம்.

இனி வரக்கூடிய சந்ததியினருக்கும் இந்த நோக்கத்தில் தான் நாம் அந்த நாளைக் கொண்டாட வேண்டும். நாம் எப்போதும் நம்மிடம் உள்ள பழைய பொருள்கள் பயன்படுத்தும் அளவில் இருந்தால் அதை வேறு யாருக்காவது கொடுக்கலாம். அவர்களாவது அதைப் பயன்படுத்தட்டும்.

நம் வீட்டை சுத்தம் செய்து பூஜை அறையை நல்லா துடைத்துவிட்டு எல்லா சாமிப்படங்களையும் எடுத்து சுத்தம் செய்து விட வேண்டும். அதன்பிறகு மஞ்சள், குங்குமம் வைக்க வேண்டும். வீட்டு வாசலில் கூரைப்பூவை தோரணமாக வைக்கலாம்.

Koorai poo
Koorai poo

அன்றைய தினம் இவை எல்லாவற்றையும் செய்து முடித்ததும், நம் வீடும் மனமும் சுத்தமாகி விடும். நாம் வணங்கும் குல தெய்வமும், இஷ்ட தெய்வமும் தான் நம் வீட்டுத் தெய்வம். இந்த வழிபாட்டை அன்றைய தினம் வழிபட வேண்டும். நாம் எல்லாவற்றையும் சுத்தம் செய்து விட்டு தெய்வத்தை வழிபடும்போது மீண்டும் நம் வீட்டுக்குள் தெய்வத்தை வர வைக்க வேண்டும் அல்லவா.

அன்றைய நாளில் எங்களுக்கு எப்போதும் போல அனுக்கிரகம் செய்ய வேண்டி வீட்டுத் தெய்வத்தை வணங்க வேண்டும். சின்னக்கலசம் எடுத்து நிறைய தண்ணீரும், கொஞ்சமாக மஞ்சளும் போட்டுக் கொள்ளுங்கள். வேப்பிலையும், அதன் மேல் சிறிது பூவும் வைத்துக்கொள்ளுங்கள்.

மாரியம்மனைக் கும்பிடும்போது நாம் இதே கலசம் தான் வைப்போம். எல்லா வீட்டுக்கும் கண்டிப்பாக பெண் தெய்வம் இருக்கும். படையலாக துள்ளு மாவு தான். பச்சரிசியை மிக்சியில் போட்டு திரித்து மாவாக்கி அதனுடன் கொஞ்சம் நாட்டுச்சர்க்கரை போட்டால் அதுதான் துள்ளுமாவு. அதில் 2 வேப்பிலை போட்டால் போதும். அதே போல சாதம் வைத்து நடுவில் குழிபறித்து தயிர் ஊற்றி வாழைப்பழம், அச்சுவெல்லம் வைத்தால் போதும்.

2 வாழைப்பழம், வெத்தலைப்பாக்கு வைத்து வீடு முழுக்க மணக்க மணக்க சாம்பிராணி போட வேண்டும். குலதெய்வத்தின் பெயரை மந்திரமாகச் சொல்ல வேண்டும். குலதெய்வம் பேர் தெரியாதவர்கள் அன்னை காமாட்சியின் பெயரைச் சொல்லி வணங்க வேண்டும்.

Lord Murugan
Lord Murugan

ஆண்தெய்வம் விருப்பம் என்றால் முருகப்பெருமானைக் குலதெய்வமாக எடுத்துக் கொள்ளலாம். பெருமாளை வணங்குபவர்கள் ஏழுமலையானையே குலதெய்வமாக எடுத்துக் கொள்ளலாம்.

 

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews