அடேங்கப்பா…. ஆடிக் கிருத்திகை விரதம் இருந்தா இவ்வளவு பலன்களா…?!!!

இன்று (23.07.2022) சனிக்கிழமை ஆடிக்கிருத்திகை. இந்த நன்னாளில் விரதம் இருப்பது எப்படி, அதனால் என்னென்ன பலன்கள் கிடைக்கப்போகிறது என்பதைத் தெரிந்து கொள்ளலாம். இந்த விரதத்தைக் கடைபிடித்து வந்தால் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் என்ன நினைத்தீர்களோ அதை கண்டிப்பாக அடையலாம். அது உங்கள் வைராக்கியத்தையும், பக்தியையும் பொருத்தது. எப்படி என்று பார்க்கலாமா…!

மாதந்தோறும் வரும் கிருத்திகையே விசேஷமானது. அதிலும் இந்த ஆடிக்கிருத்திகை ரொம்பவே விசேஷம். இந்த கிருத்திகை நட்சத்திரத்தில் முருகப்பெருமானை வழிபடுவதால் சிறந்த பலனகள்; கிடைக்கிறது. முருகனை வளர்த்தது கார்த்திகை பெண்கள் தான். அதனால் அவர்களுக்கு சிவபெருமான் ஒரு வரம் கொடுக்கிறார். நீங்கள் நட்சத்திரங்காகக் கடவது.

Aadi kiruthigai
Aadi kiruthigai

அதாவது உங்கள் நட்சத்திரத்தில் யார் ஒருவர் முருகனை வழிபடுகிறார்களோ அவர்கள் நினைத்த காரியம் நிறைவேறும் என அவர்களுக்கு சிவபெருமானே வரம் கொடுத்து விடுகிறார். அதிலும் இந்த ஆடிக்கிருத்திகை எல்லா முருகன் கோவில்களிலும் அதிவிசேஷம் வாய்ந்த நாளாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் விரதம் இருந்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

முதல் விஷயம் கல்யாணம் ஆகாதவங்களுக்கு சீக்கிரமாக கல்யாணம் நடக்கும். நிறைய நோய் உள்ளவங்களுக்கு அந்த நோய் நீங்கக்கூடிய தன்மை உண்டாகும். செவ்வாய் தோஷம் என்று அவதிப்படுபவர்களுக்கு இது நீங்கி நல்ல ஒரு வரன் கிடைக்கும் வாய்ப்பு கிட்டும்.

அது மட்டுமல்ல. பூமி சம்பந்தப்பட்ட விஷயங்களும் சரியாகும். மிக முக்கியமாக குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பேறு கிடைக்கும். கடன் சுமை இருக்கிறவர்களுக்கு அதைக் குறைக்கக்கூடிய நல்ல நாளும் இது தான்.

எப்படி விரதத்தை அனுசரிப்பது?

எந்த நோக்கத்திற்காக விரதம் இருக்கிறோமோ அதில் உறுதியாக இருங்கள். முடிந்தால் சாப்பிடாமல் இருங்க. இல்லேன்னா சாப்பிடுங்க. உங்களுக்கு அந்த விஷயம் எவ்வளவு முக்கியமோ அதற்கு ஏற்ப தான் வைராக்கியம் வளரும். அதனால் தான் விரதம் இருக்கச் சொல்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். காலையில் எழுந்து குளித்து அருகில் உள்ள கோவில் சென்று வழிபடுங்கள்.

வீட்டில் முருகரின் திருவுருவப்படத்தை வைத்து செவ்வரளி அல்லது ஒரு செம்பருத்தி பூ வைத்து வழிபடலாம். அறுங்கோண கோலம் அல்லது படத்தில் காட்டியபடி கோலம் போட்டு அதில் முருகனின் மந்திரமான சரவணபவ என எழுத வேண்டும்.

om kolam
om kolam

 

இதை ஒரு பலகை மேலும் போடலாம். அல்லது பூஜை அறையில் தண்ணீர் தெளித்து நல்ல கோலம் போட்டு அதன் நடுவில் ஓம் என எழுத வேண்டும். அதன் அருகில் 6 நெய் தீபம் ஏற்றி விட வேண்டும். அந்த சரவணபவ என்ற ஆறு எழுத்துகளிலும் ஒவ்வொன்றாக வைத்து விடுங்கள்.

ஓம் என்ற மந்திரத்திற்கு விளக்கு வைக்கத் தேவையில்லை. 108 முறை முருகனின் சரவணபவ என்ற மந்திரத்தை மனதிற்குள் சொல்லுங்கள். பொறுமையாக நிதானமாக செய்ய வேண்டிய வேலை இது. அவசரப்பட்டு தவறாக பண்ணி விடாதீர்கள். நாட்டுச்சக்கரை போட்டு நல்லா காய்ச்சிய பால், 2 வாழைப்பழம், வெற்றிலைப்பாக்கு சாமிக்கு நைவேத்தியமாக வைத்து வழிபடுங்கள்.

விளக்கு ஏற்றிய பிறகு தான் மந்திர ஜெபம் பண்ண வேண்டும். அது முடிந்ததும் சரண கமாலயத்தை என்று தொடங்கும் திருப்புகழைப் பாராயணம் செய்யுங்கள். இது அருணகிரி சுவாமிகள் அருளியது. குழந்தை வேணும் என்று நினைப்பவர்கள் செகமாயை யுற்றே என்ற திருப்புகழைப் பாராயணம் செய்யுங்கள். மற்ற வேண்டுகோளுக்கு சரண கமாலயம் மட்டும் போதும்.

எனது வேலையில் நல்ல உயர்பதவி, நான் வாழ்க்கையில் நல்ல உயர்ந்த நிலைக்கு வரணும், தொழில்ல எனக்கு முன்னேற்றம் வரணும் என எது உங்கள் நோக்கமோ அதை முருகனின் திருவடியில் வைத்து இதை நீயே பார்த்துக்கோ அப்படின்னு கற்பூர ஆரத்தி காட்டி வழிபாடு செய்யுங்கள்.

Aadi kruthiga
Aadi kruthiga

காலை 6 மணி முதல் 7 மணிக்குள் இந்த பூஜையை நிறைவு செய்து விடுங்கள். அந்த பூஜை முடிந்ததும் உபவாசம் செய்யத் தொடங்கலாம். குழந்தை வேணும் என்பவர்கள் பட்டினி கிடந்து விரதம் இருப்பது உடனடியான பலனைத் தரும். மெடிசின் எடுப்பவர்கள் எளிமையான உணவை எடுத்துக் கொள்ளலாம்.

விரதம் இருப்பவர்கள் உணவு எடுத்துத் தான் ஆக வேண்டும் என்றால் எடுக்கின்ற உணவை உப்பில்லாமல் எடுத்துக் கொள்ளுங்கள். மாலை 6 மணிக்கு விரதத்தை முடித்து விடலாம். காலை செய்தது போல மாலையும் பூஜை செய்து விரதத்தை முடிக்கலாம்.

சர்க்கரைப் பொங்கல் வைத்தும் வழிபடலாம். பழத்தை சாப்பிட்டு விட்டு விரதத்தை விடலாம். 6 மணிக்கு மேல் எளிய உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். முடிந்தால் 2 பேருக்கு அன்னதானம் செய்தால் ரொம்பவே விசேஷம். அதேபோல வீட்டில் செய்த நைவேத்தியத்தை அருகில் உள்ள கோவிலுக்கு எடுத்துட்டு போய் அங்கு உள்ள ஒரு பத்து பேருக்காவது கொடுத்தால் இன்னும் சிறப்பு.

இன்று (23.07.2022) ஆடிக்கிருத்திகை. விரதத்தைக் கடைபிடித்து உயர்ந்த நிலையை அடைய வாழ்த்துகிறோம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews