கொடி மரம் உருவான கதை…. தர்மருக்கு பாடம் கற்பித்த கிருஷ்ணர்..! 

ஆலயங்களுக்குச் செல்லும் போதெல்லாம் நாம் கடவுளை வணங்கும் முன் தவறாமல் கொடிமரத்தையும் தொட்டுக் கும்பிட்டுவிட்டுத் தான் செல்வோம். அது ஏன் கோவிலில் உள்ளது? அது எப்படி உருவானது என்பது குறித்து சிறு கதை சொல்லப்படுகிறது. என்னவென்று பார்ப்போமா…

மகாபாரத போருக்கு பிறகு தர்மர் நிறைய நன்கொடைகள் வழங்கினாராம். அதன் மூலம் தன்னை உலகிலேயே ஒரு சிறந்த நீதிமானாக நினைத்துக் கொண்டார். கிருஷ்ணர் இந்த விஷயத்தில் தர்மருக்கு ஒரு பாடம் கற்றுக் கொடுக்க எண்ணினார். அதன்படி அவரை அசுவமேத யாகம் செய்யச் சொன்னார்.

தர்மரும் யாகத்தை தொடங்கினார். அசுவமேத குதிரை, மற்ற பாண்டவர்களுடன் வலம் வர தொடங்கியது. பாண்டவர்களின் பராக்கிரமம் அறிந்த விஷயம் என்பதால் எல்லா மன்னர்களும் தர்மரின் அதிகாரத்தை ஏற்றுக் கொண்டனர்.

Krishnar, Dharmar
Krishnar, Dharmar

குதிரை மணிப்பூர் ராஜ்ஜியத்தை அடைகிறது. அந்த ராஜ்ஜியத்து அரசன் மயூரத்வஜன் சிறந்த கிருஷ்ண பக்தன். அவனுக்கு இந்த குதிரை கிருஷ்ணர் ஆதரிக்கும் பாண்டவர்களைச் சேர்ந்தது என்று தெரிய வருகிறது. இருந்தாலும் அதை விட்டு கொடுக்க மனம் இல்லை. குதிரையை தடுத்து நிறுத்துகிறான். அவனது மகன் தாம்ப்ராதவஜன் பாண்டவர்களுடன் போரிட்டு தோற்கடித்து அவர்களை சிறை பிடிக்கிறான்.

செய்தி கேட்டு தர்மர் கிருஷ்ணருடன் மணிப்பூருக்கு விரைந்து வருகிறார். கிருஷ்ணர், தருமரிடம் உன்னால் மயூரத்வஜனை தோற்கடிக்க முடியாது. அதனால் நாம் மாறு வேடத்தில் செல்வோம் என்று சொல்லி அந்தணர் வேஷத்தில் இருவரும் செல்கின்றனர். கிருஷ்ணர் அரசரிடம் வரும் வழியில் எனது மகனை ஒரு சிங்கம் பிடித்து வைத்துள்ளது. உனது உடலில் பாதியை தந்தால் என் மகனை மீட்க முடியும். ஆனால் உனது உடலை உனது மகனும் மனைவியும் தான் வெட்டவேண்டும் என்று சொல்கிறார்.

மயூரத்வஜனும் சம்மதிக்கிறான். அவன் கண்களில் கண்ணீர் வருவதை பார்த்த தர்மன் கண்ணீருடன் தரப்படும் தானம் தங்களுக்கு தேவை இல்லை என்று சொல்ல அவனோ தனது உடலில் ஒரு பகுதி மட்டும் தானே பயன்படப் போகிறது மற்றொரு பாதி யாருக்கும் பயன்பட போவதில்லையே என்பதை நினைத்து தான் கண்ணீர் விடுகிறேன் என்று சொல்கிறான்.

Kodimaram 2
Kodimaram 2

தர்மரின் கர்வம் அடங்கியது. கிருஷ்ணரும் அவனுக்கு விஸ்வரூப தரிசனம் தந்து, கடவுளை வணங்கும் இடங்களில் நீங்கள் த்வஜ ஸ்தம்பம் ஆகிவிடுவீர்கள்” என்று ஒரு வரத்தை வழங்கினார். எல்லோரும் உங்களை கடவுளுக்கு முன்பாக வணங்குவார்கள் என்று சொல்லிவிடை பெறுகிறார்.

கொடிமரம் ஜீவதாறு (உயிர் உள்ள மரம்) என்று ஒரு மரத்தில் செய்யப்படுகிறது. அது தாமிரம் மற்றும் தங்கத் தகடுகளால் மறைக்கப்பட்டு அதில் புராணங்களில் குறிப்பிட்டுள்ளபடி டிசைன்கள் செதுக்கப்படுகின்றன. மேலே மூன்று உலோக அடுக்குகள் அமைக்கபடுகின்றன. அதன் பெயர் மேகலா. அது மூன்று உலகங்களை அதாவது பூமி, அண்டம், சுவர்க்கம் ஆகியவற்றை குறிக்கும் அதில் பாலி என்ற சிறிய மணி இருக்கும்.

மேலே மயூரத்வஜனை நினைவு கூறும் வகையில் ஆகாச தீபம் என்ற சிறிய விளக்கும் உள்ளது. அதில் ஏற்றப்படும் கொடிக்கு த்வஜபடம் என்றும் அழைக்கபடுகிறது. அதில் நந்தி, கருடன் ஆகியோர் படங்களோ அல்லது திரிசூலம் போன்ற ஆயுதங்களின் படங்கள் பொறிக்கப்பட்டு இருக்கும்.

கொடி ஏற்றுவதை த்வஜ ஆரோகணா என்றும் இறக்குவதை த்வஜ அவனத என்றும் சொல்வர். கொடிமரத்தை சுற்றாது கோவில் பிரதட்சணம் நிறைவு பெறாது. கொடி மரத்தை உடலில் உள்ள முதுகெலும்புக்கு இணையாகவும் சொல்வர். முதுகெலும்பு 32 எலும்புகளால் ஆனது. அதே போல கொடி மரத்திலும் 32 வளையங்கள் அமைக்கப்படுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews