மொட்டை அடிச்சு காலை உடைச்சுட்டு நடந்தா நடிப்பா..? சீயான் விக்ரமை வம்புக்கு இழுத்த இயக்குநர்

சிவாஜி, கமலுக்குப் பிறகு தன்னையே வருத்திக் கொண்டு கதாபாத்திரத்திற்கு ஏற்றபடி ஏன் அதை விட ஒருபடி மேலேபோய் நடிப்பில் வெளுத்து வாங்குபவர்தான் சீயான் விக்ரம். விக்ரமின் சினிமா வாழ்க்கையை சேதுவுக்கு முன், சேதுவுக்குப் பின் என பிரிக்கலாம். ஆரம்பத்தில் செகண்ட் ஹீரோவாகவும், சரியாக வெற்றி அடையாத படங்களிலும் நடித்து வந்த விக்ரமை இயக்குநர் பாலா தனது முதல் படத்திலேயே விக்ரமை நடிப்பில் அசர வைத்திருப்பார். பின்னர் மீண்டும் பாலாவின் பிதாமகனுக்காக சிறந்த நடிப்பிற்கான தேசிய விருதினையும் பெற்றார் விக்ரம்.

அதன்பின் சீயானின் நடிப்புத் திறமைமை இந்திய சினிமாவே அறியும். இந்நிலையில் சீயான் விக்ரமின் நடிப்பை அவரை வைத்து விண்ணுக்கும் மண்ணுக்கும் படத்தினை இயக்கிய இயக்குநரும், நடிகை தேவயாணியின் கணவருமான ராஜகுமாரன் விமர்சனம் செய்துள்ளார்.

ஒரு பேட்டியில் சீயான் விக்ரமின் நடிப்பைப் பற்றிக் கூறும் போது, “விக்ரம் விண்ணுக்கும் மண்ணுக்கும் படம் நடித்தபோது எனக்கும் அவருக்கு எந்த ஒரு பிரச்னையும் இல்லை. ஆனால் படம் முடிந்த பிறகு இந்தப் படம் எனக்கு பிடிக்கவில்லை என்று அவர் சொல்லியிருக்கிறார். ஆனால் ஏன் அவர் அப்படி சொன்னார் என்று எனக்கு தெரியவில்லை.

கையை ஒடித்துக்கொண்டு, காலை ஒடித்துக் கொண்டு, கண்ணை ஒரு மாதிரி வைத்துக் கொண்டு நடிப்பது எல்லாம் நடிப்பு இல்லை. இருக்கும் க்ளோசப்பில் எதுவுமே இல்லாமல் கட் சொல்லும் வரை நடிக்க வேண்டும். விக்ரமால் அப்படி நடிக்கவே முடியாது. ஆனால் விக்ரமை ஒவ்வொரு வீட்டுக்கும் கொண்டு போய் சேர்த்ததே விண்ணுக்கும் மண்ணுக்கும் படம்தான்.

வழிந்த இரத்தத்திலும் ததும்பிய காதல் ரசம்.. கவியரசர்ன்னா சும்மாவா..!

மேலும் அவர் கூறியபோது, “விக்ரமை சிறந்த நடிகர் என்று நான் ஒத்துக் கொள்ள மாட்டேன். அவர் கமல் ஹாசன் மாதிரி நடிப்பார் இல்லை என்றால் ரஜினிகாந்த் மாதிரி நடிப்பார். இதைத் தாண்டி அவருக்கு ஒரு நடிப்பும் தெரியாது. இவர்களைத் தாண்டி விக்ரம் நடித்தார் என்று சொன்னால் அவர் மீசையை எடுத்துக் கொண்டு, மொட்டை அடித்துக்கொண்டு, காலை உடைத்துக் கொண்டு, கையை உடைத்துக்கொண்டு நடந்து போக சொன்னால் நடந்து போவார்.

ஆனால் மேக்கப்பே இல்லாமல் நின்ற இடத்தில் கட் சொல்லும் வரைக்கும் ஒரு நடிகராக என்ன ரியாக்‌ஷன் என்ன கொடுக்க வேண்டும் என்று விக்ரமுக்கு சுத்தமாக தெரியாது. விண்ணுக்கும் மண்ணுக்கும் படத்தில் அவருக்கு அப்படியொரு பிரச்னை இருந்தது” என்றார்.

இயக்குநர் ராஜகுமரானின் இந்தக் கருத்துக்கு சீயான் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அவருக்கு கடும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews