காமெடி நடிகர் போண்டா மணி திடீர் மரணம்.. சோகத்தில் திரையுலகம்.. எவ்ளோ போராடியும் காப்பாத்த முடியலயே

போண்டா மணி காலமானார்:

காமெடி நடிகர் போண்டா மணி நேற்று இரவு மயங்கி தனது வீட்டில் விழுந்த நிலையில், அவரது குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். வழியிலேயே அவரது உயிர் பிரிந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததும் அவரது குடும்பமே சோகத்தில் மூழ்கியது. கடந்த ஒரு வருட காலமாக தனது சிறுநீரகங்கள் செயலிழந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பெறும் அவதியை சந்தித்து வந்தவர் போண்ட மணி. 60 வயதான நிலையில், அவர் திடீரென உயிரிழந்தது சினிமா பிரபலங்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

இலங்கையை சேர்ந்த போண்டா மணி தமிழ் சினிமாவில் பாக்கியராஜ் இயக்கத்தில் வெளியான பவுனு பவுனு தான் படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் அறிமுகமானார். வைகைப்புயல் வடிவேலுவின் காமெடி டீமில் இணைந்துக் கொண்டு பல படங்களில் சூப்பர் ஹிட்டான நகைச்சுவை காட்சிகளில் நடித்தவர் போண்டா மணி.

பல படங்களில் நடித்து வந்தாலும் சிறிய ரோல் மட்டுமே என்பதால் பெரிய சம்பளம் எல்லாம் இவருக்கு கிடைக்கவில்லை. மேலும், அடிக்கடி ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவ செலவுக்கே இவர் கணக்கில் இருந்த பணமெல்லாம் ஒட்டுமொத்தமாக தீர்ந்து போயின.

சிறுநீரக பாதிப்பு:

ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த போண்டா மணியை மறைந்த காமெடி நடிகர் மயில்சாமி ஓடோடி வந்து பார்த்து ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து அவரது மருத்துவ செலவுக்கு உதவினார். மயில்சாமி மரண்ச் செய்தியை அறிந்த போண்டா மணி இனிமேல் தனக்கு இப்படி யார் உதவுவார் என அழுது புலம்பினார்.

தமிழ் சினிமாவில் தொடர்ந்து காமெடி நடிகர்கள் மரணித்து வரும் நிலையில், ரசிகர்களை பல ஆண்டுகளாக சிரிக்க வைத்து வந்த போண்டா மணியும் போய் சேர்ந்து விட்டார். அவரது மறைவு செய்தியை நள்ளிரவில் அறிந்த நண்பர்கள் அவரை காண அவரது வீட்டுக்கு ஓடிச் சென்றனர். இன்று மாலை அவரது இறுதிச்சடங்கு நடைபெறும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

போண்டா மணிக்கு வடிவேலு கடைசி வரை உதவவே இல்லை என்கிற குற்றச்சாட்டு இருந்தது. அவரது மறைவுக்காக வடிவேலு வருவாரா என்கிற கேள்வியை தற்போது ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

 

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews