தியேட்டர்களின் பொற்காலம் அது ஒரு கனாக்காலம் – ப்ளாஷ்பேக்

அக்காலங்களில் விதி, கரகாட்டக்காரன், பாண்டி நாட்டுத்தங்கம், பாசப்பறவைகள், முந்தானை முடிச்சு, சின்னத்தம்பி, வருஷம் 16 என பெண்களுக்காகவே சில படங்கள் வெற்றிகரமாக ஓடின.

7aea54e751302cf7b375f7a6c0ffba74

பெண்கள் இல்லையேல் இப்படங்களின் வெற்றி சாத்தியமில்லை. இவைகளுக்காக பெண்கள் காலையிலேயே மதியசாப்பாடுகளையும் தயார் செய்து ஒரு டப்பாவில் அடைத்துக்கொண்டு விடுமுறை நாட்களில் குழந்தை குட்டிகளை கூட்டிக்கொண்டு படத்திற்க்கு செல்வார்கள்.

காலை ஷோ முடிந்ததும் ஒரு ஓரமாக உட்கார்ந்து, கொண்டு சென்ற புளியோதரைகளையும் லெமன் சாதங்களையும் சாப்பிட்டுவிட்டு அடுத்த படத்திற்க்கு [மேட்னி] சென்று விடுவர்.

அதையும் முடித்து மாலை முதல் காட்சிக்கு வேறு தியேட்டரில் வேறுபடம். [இதில் கரகாட்டக்காரன் படத்தில் பெண்கள் தியேட்டருக்கு தியேட்டர் சாமி வந்து ஆடியது அந்த நாளைய வரலாறு. ]

பெரும்பாலான வீடுகளில் சனி, ஞாயிறுகளில் இதுதான் அந்த நாட்களில் பொழுதுபோக்கு.

இது போக கிராமங்களில் டூரிங் டாக்கீஸில் மாலை மட்டும் படம் ஒளிபரப்பாகும் 1 , 2 ரூபாய்தான் டிக்கெட் இருக்கும்.

தரையில் உட்காருவதற்க்கு ஒரு டிக்கெட். 10 சேர் கிடக்கும், சேரில் உட்கார்ந்து பார்ப்பதற்க்கு தனி டிக்கெட் ஒரு ரூபாய் அதிகமாக இருக்கும். இதில் ஒரு கொடுமை என்னவென்றால் இப்படிப்பட்ட தியேட்டர்கள் ஊருக்கு ஒதுக்குப்புறமாக காடுகள் செடி, கொடிகள் உள்ள பகுதியில் இருக்கும். சில படங்களை பக்கத்து புதர்களில் தங்கியிருக்கும் பாம்புகள் பார்க்க வந்து தியேட்டர்கள் களேபரமானது கூட நடந்திருக்கிறது.

இடைவேளை மட்டுமல்லாமல் எந்த நேரமும் உள்ளே ஒருவர் முறுக்கு, சமோசா போன்ற அயிட்டங்களை விற்றுகொண்டிருப்பார். அதையும் விட்டுவைக்காமல் வாங்கி ஒரு கை பார்த்த மனிதர்களும் இருப்பார்கள்.

இது போக அந்த நாட்களில் கிராமப்பகுதிகளில் திடீரென ஒரு வேன் வந்து நிற்க்கும். நின்றவுடனே மனதில் உற்சாகம் தொற்றிகொள்ளும். வேனை நிறுத்தி வேனின் பின்புறம் சிறிய திரையை கட்டுவார்கள்.

ஆம் அது அரசு வேன். அரசால் எடுக்கப்பட்ட போலியோ சொட்டுமருந்து, இளம்பிள்ளை வாதம் பற்றிய விழிப்புணர்வு, சரியான வயது திருமணங்கள், குடும்பகட்டுப்பாடு இவைகளைப்பற்றிய சிறிய சிறிய குறும்படங்கள் ஒளிபரப்பாகும். இதில் நமக்கு பிடித்த ரஜினியோ, கமலோ வந்து நாலைந்து சிறுவர்களை வைத்துக்கொண்டு ஆலோசனை சொல்லிக்கொண்டிருப்பார்கள் ஆவென வாய் அகலாமல் பார்த்த நாட்களும் உண்டு.

சினிமா என்ற ஒரு விஷயம் அதிகமான ஈர்ப்பை ஏற்படுத்தியிருந்ததால் டிவி, சினிமாக்கள், நாடகங்கள் என எதையாவது பார்த்துகொண்டேயிருக்கத்தான் தோணும் அப்போது.

இப்போது பல வித சேட்டிலைட் சேனல்கள் பெருகிவிட்டதாலும் அரைத்த மாவையே அரைப்பதாலும் டிவியோ, சினிமாவோ பார்க்க பிடிக்கவில்லை.

மேலும் தியேட்டர்கள் மல்டிபிளெக்ஸ் தியேட்டர்கள் பெருகிவிட்டதாலும், செல்லும் வண்டியில் ஆரம்பித்து எல்லாவற்றிற்க்கும் அதிகமான கட்டணம், உள்ளே எந்த பொருளும் கொண்டு செல்ல அனுமதியில்லை, சாதாரண 10 ரூபாய் தண்ணீர் பாட்டில் 30 ரூபாய் விற்பது, எகிறும் இண்டர்வெல் ஸ்னாக்ஸ் செலவு, இஷ்டத்திற்க்கு விலை ஏற்றி விற்கப்படும் டிக்கெட்டுகள் போன்றவற்றை நினைத்தால் நடுத்தரவர்க்கங்கள் தியேட்டரெல்லாம் வேண்டாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews