ரஜினி, விஜயகாந்த் கூட சேர்ந்து நடிச்சும்.. கமலுடன் ஜோடி சேராத நடிகை நதியா.. அவரே சொன்ன காரணம்..

தமிழ் சினிமாவின் பிரபல நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை நதியா மொய்து. இவர் மலையாளத்தின் பிரபல இயக்குனர் பாசில் இயக்கத்தில் உருவான மலையாள திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். கேரளாவை சேர்ந்த நதியா, படித்தது, வளர்ந்தது எல்லாம் மும்பையில் தான். சினிமா பின்னணி இல்லாத குடும்பத்தில் இருந்து வந்த நதியா நாயகியாக காரணம், பாசில் தான்.

பாசிலின் நண்பரின் மகளான நதியாவை பார்த்ததும் அவரை திரைப்படத்தில் நடிக்க வைக்க வேண்டும் என அவர் முடிவெடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து, ஷரீனா என்ற பெயரை மாற்றி நதியா என ஆக்கியதுடன் திரைப்படத்தில் அவரை நாயகியாக்கினார் பாசில். இன்று வரை நதியா இளமையாகவே இருக்கும் சூழலில், அவரது முதல் படம் வெளியான சமயத்தில் கேரளா முழுக்க நதியா என்ற அலை தான் உருவாகி இருந்தது. தனது முதல் படத்திலேயே சிறந்த மலையாள நடிகைக்கான ஃபிலிம்பேர் விருதினையும் அவர் வாங்கி இருந்த நிலையில், தென் இந்தியாவே அவரை உற்று பார்த்தது.

அடுத்தடுத்து மலையாள படங்கள் நடித்து வந்த நதியா, பூவே பூச்சூடவா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இது அவர் அறிமுகமான ‘நோக்காத தூரத்து கண்ணும் நட்டு’ என்ற மலையாள படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். இதனையும் பாசில் தான் இயக்கி இருந்தார். இதன் பின்னர், மலையாளம், தமிழ், தெலுங்கு என ஒரு ரவுண்டு வந்த நதியா, 1994 ஆம் ஆண்டுக்கு பிறகு சுமார் 10 ஆண்டுகள் கழித்து எம். குமரன் S.O மகாலட்சுமி என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்தார்.
Actress Nadhiya

இதனைத் தொடர்ந்து, கடந்த 19 ஆண்டுகளாக தான் தேர்ந்தெடுத்து சிறந்த கதையம்சம் கொண்ட படங்களின் முக்கிய கதாபாத்திரங்களில் நதியா நடித்து வருகிறார். இத்தனை வயதான போதிலும் மிக மிக இளமையாக அவர் இருக்கும் ரகசியம், பலருக்கும் புரியாத புதிராகவே உள்ளது. ரஜினிகாந்த், சத்யராஜ், விஜயகாந்த், மம்மூட்டி, மோகன்லால் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த நதியா, உலக நாயகனான கமல்ஹாசனுடன் மட்டும் இதுவரை ஒரு திரைப்படத்தில் கூட இணைந்து நடித்ததே இல்லை.

இதற்கான காரணம் என்ன என்பதை பார்க்கலாம். கமல்ஹாசன் படத்தில் நாயகியாக நடிக்க ஒரு சில வாய்ப்புகள் நதியாவுக்கு வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. ஆனால், தான் ஏற்கனவே சில படங்களுக்கு நாட்கள் கொடுத்திருந்ததால் அந்த வாய்ப்புகளை தவற விட்டதாகவும், நிச்சயம் இனி வரும் காலங்களில் ஒரு முறையாவது கமலுடன் இணைந்து நடிப்பேன் என்றும் ஒரு பேட்டியில் நதியா தெரிவித்திருந்தார்.

முன்னதாக, பாபநாசம் படத்தில் கமலுடன் நடிக்க நதியாவுக்கு வாய்ப்பு வந்ததாகவும், ஆனால் அதனை நதியா மறுத்ததாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது. இதனை முற்றிலும் மறுத்த நதியா, பாபநாசம் படத்தில் நடிக்க தன்னை யாரும் அணுகவில்லை என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...