ஆடல் அரசனின் ஆருத்ரா தரிசனம்



முருகனுக்கு வைகாசி நட்சத்திரம், கிருஷ்ணனுக்கு ரோகிணி, வினாயகருக்கு சதுர்த்தி , பைரவருக்கு அஷ்டமி… அந்தந்த தெய்வங்கள் அவதரித்த நாளை கணக்கில் வைத்து அவதார திருநாளை கொண்டாடுகிறோம். ஆனா, சிவனுக்கு அப்படி கொண்டாடுவதில்லை. காரணம் ஆதிஅந்தம், பிறப்பு இறப்பு இல்லாதவன். அம்மையப்பன் இல்லாமல் சுயம்புவாய் உருவானவர். ஆனாலும், திருவாதிரை நட்சத்திரத்தை சிவனுக்குரியதாய் சொல்கிறார்கள். திருவாதிரை நட்சத்திரம் எப்படி சிவனுக்குரியதாய் ஆனதுன்னு பார்க்கலாம்..


பிறவா யாக்கைப் பெற்றோன்  பெரியோன்.. என்று சங்க இலக்கியமான சிலப்பதிகாரம் சிவபெருமானைக் குறிக்கிறது.
சிவபெருமான் நெருப்பு உருவமாக தன்னை வெளிப்படுத்திக் காட்டியது சிவராத்திரி நன்னாள். சுவாமி தான் இப்பூமியை தோற்றுவித்த நாள் ஆருத்ரா நன்னாள். சிவராத்திரியன்று அவரை வழிபட்டால் பலன். ஆருத்ராவன்று தரிசித்தாலே பலன் கிடைக்கும்.

“கர்மாவே பெரிது, கடவுள் இல்லை” என்று கூறிய முனிவர்களின் அறியாமையை நீக்கிட வந்த ஈசன் தனக்கு எதிராக ஏவப்பட்ட யானையை தன் ஆடையாக்கி, உடுக்கு, தீ, பாம்பு முதலியவற்றை ஆபரணமாகக் கொண்டு நடராஜராக ஆருத்ரா தரிசன காட்சி தந்த நாள்தான் மார்கழித் திருவாதிரை. அன்றுதான் தில்லையில் நடராஜர் பதஞ்சலி முனிவருக்கு நடன தரிசனம் தந்தார்.


ஆருத்ரா என்பது, திருவாதிரை நட்சத்திரத்தின் வடமொழி சொல்லாகும். “ஆ…ருத்ரா’ என்று, மூக்கில் விரலை வைக்கச்சொல்லும் அழகுக்கோலத்தில் காட்சி தரும் அவரை தரிசிப்பதால் சகல சௌபாக்கியங்களையும் அடையலாம். 16வயதில் ஆயுள் முடிந்துவிடுமென்ற நிலையில் இருந்தார் மார்க்கண்டேயர். இவர் சிறந்ததொரு சிவபக்தர். இதனால், அவரது தந்தை, மிகுந்த வருத்தத்தில் இருந்தார். குறிப்பிட்ட நாளில், எமன் மார்க்கண்டேயனை நெருங்க, தன் பிரிவால், தாய்,தந்தை துக்கப்படக்கூடாதே என்பதற்காக, சிவலிங்கத்தை கட்டி அணைத்துக்கொண்டார். லிங்கத்திலிருந்து வெளிப்பட்ட சிவனின் இடது கால், எமனை எட்டி உதைத்தது. மார்க்கண்டேயன் தப்பித்தார். மார்க்கண்டேயனுக்கு ஆயுள் நீட்டிப்பு நடந்தது இந்த நாளில்…


திருவாதிரை களி…
திருவாதிரை நட்சத்திரத்துக்கு ஆர்த்ரா என பெயர். அதுவே ஆருத்ரான்னு மாறிட்டுது. அறுபத்து நான்கு நாயன்மார்களில் ஒருவரான சேந்தனார் என்பவர் அரசபதவியிலிருந்து சிவனின் திருவிளையாடலால் ஏழையாகினாலும் தன்னுடைய சிவத்தொண்டான அடியவருக்கு உணவளிக்காமல், தான் உண்பதில்லை என்ற கொள்கையிலிருந்து மாறாமல் இருந்தார். கடும் வறுமையில் வாழ்ந்து வந்தபோது,   ஒரு மழைநாளில் சமைக்க ஏதுமில்லாதபோதும், கோலமிட வச்சிருந்த பச்சரிசிமாவில் , சிறிதளவு வெல்லம் சேர்த்து களியாய் கிளறி அடியவருக்காக காத்திருந்தனர். இரவுப்பொழுது ஆகியும் யாரும் வராததால் பசியோடு உறங்க சென்றனர். இதனால், சிவனே அடியவர் வேடம் கேட்டு சேந்தனார் வாயிலில் நின்று பிட்சை கேட்டார்.  அவருக்கு களி பரிமாறி பசியாத்தினர் சேந்தனார் தம்பதியினர். களி மிக ருசியாயுள்ளது எனச்சொல்லி நாளைக்கும் வேண்டுமென கூறி மிச்சம் மீதி களியையும் பெற்று சென்றார்.  மறுநாள் கோவிலில் சென்று இறைவனை காணும்போது, கருவறையில், முதல்நாள் அடியவருக்கு கொடுத்தனுப்பிய களி அங்கு சிதறி இருந்தது.  அப்படி சேந்தனார், களியமுது படைத்திட்ட நாள் மார்கழி திருவாதிரை நட்சத்திரம் நாளாகும். அன்றிலிருந்து , ஆருத்ரா தரிசனம் நாளன்று களி சமைத்து படைப்பது வழக்கமாகிவிட்டது.


களின்ற வார்த்தைக்கு உணவு பண்டம்ன்னு மட்டும் பொருள் இல்லை. களின்னா ஆனந்தம்ன்னும் பொருள் தரும். அஞ்ஞானம் அகன்று மெய்ஞானம் தோன்றிய நிலையில் ஆன்மா ஆனந்த நிலையில் இருக்கும். சத், சித் ஆனந்தம் கிட்டும் என்ற தத்துவத்தை அடிப்படையா வைத்துதான் திருவாதிரைக்களி நிவேதனம் செய்விக்கப்படுகிறது.  இந்த ஆருத்ரா தரிசன நாளில்தான், மாணிக்கவாசகர் திருவெம்பாவை பாடல்களை எழுதி முடித்தார். கேரளத்தில் இந்நாளை ஈசன் காமனை எரித்த நாளாக கொண்டாடுகின்றனர். பார்வதிதேவியின் தவத்துக்கு மெச்சி அவளை மணப்பதாக வாக்கு கொடுத்தது இந்நாளில்தான். அதனால்தான், இந்நாளில் விரதமிருந்து ஈசனை வழிப்பட்டால் சிறந்த கணவன் கிடைக்கும், தாலிபலம் கூடும். பிரிஞ்சிருக்கும் கணவன் மனைவி ஒன்று சேர்வர். 


மற்றொரு கதை..

முன்னொரு காலத்தில் திரேதாயுகான்ற பெண் இருந்தாள். சிறந்த பார்வதிதேவியின் பக்தை. திருமண வயது வந்ததும் திருமணம் நடந்தேறியது. திருமணமான நாலாவது நாளில்தான் சாந்திமுகூர்த்தம் நடத்துவது அன்றைய நாளின் வழக்கம். ஆனால், திருமணமான மூன்றாவது நாளே அவள் கணவன்  இறந்துவிட்டான். அழுது அலறி துடித்த திரேதாயுகா  பார்வதிதேவியிடம் முறையிட்டாள். கைலாயத்திலிருந்த பார்வதி காதில் அவள் முறையீடு கேட்க, அவள் கணவனுக்கு உயிர்பிட்சை கொடுப்பேன் என சபதம் செய்ய, அதைக்கேட்ட சிவன், எமலோகத்தில் இருக்கும் எமனை பார்க்க, எமனும் திரேதயுகா கணவனின் உயிரை திருப்பி அளித்தான். பார்வதியும், சிவனும் தம்பதி முன் தோன்றி ஆசி அளித்த நாள் இந்த ஆருத்ரா தரிசன நாளாகும்.

பதஞ்சலி முனிவருக்கு காட்சியளித்த நாள்..

பாற்கடலில் பள்ளிக்கொண்டிருந்த விஷ்ணு, சிவனின் தாருகாவனத்து சிவத்தாண்டவத்தை நினைத்து ஒருநாள் மகிழ்ந்திருந்தார்.  விஷ்ணுவின் மகிழ்ச்சியை கவனித்த ஆதிசேஷன் என்னவென்று விசாரிக்க, அந்த அற்புதத்தை விஷ்ணு விவரிக்க, அதைக்கேட்ட, ஆதிசேஷனுக்கும் அந்த நடனத்தைகாண ஆவல் ஏற்பட்டு, இடுப்புக்கு மேலான உடல் மனிதனாகவும், இடுப்புக்கு கீழான உடல் பாம்பாகவும் மாறி, பதஞ்சலி என்ற பெயர்கொண்டு பூலோகம் வந்து கடும்தவம் செய்தார். தவத்தை மெச்சிய சிவன்,  பதஞ்சலி உன்னைப் போன்றே வியாக்ரபாதனும் என் ஆடலைக் காண ஆவல் கொண்டுள்ளான். நீங்கள் இருவரும் தில்லைவனம் என்ற சிதம்பரத்திற்கு வாருங்கள் அங்கே உங்கள் ஆவல் நிறைவேறும் என்றுக்கூறி மறைந்தார். மார்கழிமாதம் திருவாதிரை நட்சத்திரத்தன்று வானில் முழு நிலவு பிரகாசிக்கும் நான்னாளில் மீண்டும் அந்த ஆனந்த நடனத்தை சிவபெருமான் தில்லையில் ஆடிக்காட்டினார். அந்த ஆனந்த நடனத்தினை உலக மக்கள் அனைவரும் கண்டு களிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் அத்திருவுருவை பதஞ்சலி முனிவரும், வியாக்ரபாதனும் சிலையாக வடித்தனர்.


கைலாயத்தில் இருப்பதாலும், கங்கை, சந்திரனை சடாமுடியில் சூடி இருப்பதால் சிவப்பெருமான் குளிர்ச்சி பிரியர். அதனாலதான் அவரை குளிர்விக்க 32 பொருட்களால் அபிசேகம் செய்விப்பர்.  அடர்பனிக்காலமான மார்கழியில் வரும் திருவாதிரை நட்சத்திரத்தில் மேலும் அவரை குளிர்விக்கும் பொருட்டு அதிகாலையிலேயே எல்லா சிவன்கோவில்களிலும்  சிறப்பு அபிஷேக ஆராதனை நடக்கும்.  சிவன் ஆடிய நடனங்கள் மொத்தமும் 108 . இதில் அவர் தனியாய் நடனம் புரிந்தது மொத்தமும் 48. ஆடல்வல்லானாகிய நடராஜப்பெருமானுக்கு ஒரு ஆண்டில் ஆறுமுறை அபிஷேகம் செய்ய வேண்டும் என்று ஆகமவிதிகள் கூறுகின்றன. மூன்று முறை திதியிலும், மூன்று முறை நட்சத்திர நாளிலும் அபிஷேகங்கள் நடக்கின்றன. இதில் மிகச்சிறப்பானது மார்கழி திருவாதிரை. மற்றவை சித்திரை திருவோணம் மற்றும் ஆனி உத்திர நட்சத்திர நாட்களாகும். ஆவணி, புரட்டாசி மாசி மாத வளர்பிறை சதுர்த்தசி திதிகளிலும் அவருக்கு அபிஷேகம் செய்யப்படும். இதில் முக்கியமானதுதான் திருவாதிரை நட்சத்திரத்தன்று ஆடிய, ஆனந்த தாண்டவ நடனம். இந்த ஆனந்த தாண்டவ தரிசனத்தை காண்பது பெரும் பேறாகும்.  சிதம்பரத்தில் இவர் ஆடும் ஆனந்த தாண்டவத்தை தரிசிப்பவர்கள் முக்திநிலையை அடைவர். அதனாலதான், சிதம்பரத்தை தரிசித்தா முக்தின்னு சொல்றாங்க. அதுக்காக, கோவிலுக்கு போய் சும்மா நின்னு கும்பிட்டு வரக்கூடாது, உள்ளன்போடு, கிட்டத்தட்ட, நம்மோட ஆன்மாவை பார்வதிதேவியாக்கி இறைவனை வழிப்படனும். அப்பொழுதுதான் முக்தி கிடைக்கும். 


இந்நாளில், அதிகாலை நான்கு மணிக்கே எழுந்து நீராடி, சிவநாமம் ஜெபித்து திருநீறு பூசி. சிவாலயம் சென்று நடராஜரையும், சிவகாமி அம்மனையும் தரிசிக்கனும். காலையில் நடக்கும் தாண்டவ தீபாராதனையை பார்க்கனும். சுவாமிக்கு திருவாதிரை  களியோடு, ஏழு வகை கறிகாய்களை சமைத்து நிவேதானம் செய்து குழந்தைகளுக்கு கொடுக்கனும். ஆருத்ரா தரிசன நாளன்று பகலில் சாப்பிடக்கூடாது. சிவபுராணம், தேவாரம், திருவாசகத்தை பக்தியுடன் படிக்க வேண்டும். இரவில் எளிய உணவு சாப்பிட்டு விரதம் முடிக்கலாம். இந்த விரதத்தை ஒவ்வொரு மாதமும் திருவாதிரை நட்சத்திரத்தன்று  செய்யலாம். இப்படி ஒரு வருடம் திருவாதிரை விரதமிருந்தால், வாழ்வுக்குப் பின் கயிலாயத்தில் வாழும் பேறு பெறலாம் என்கிறது பெரிய புராணம். 

ஓம் நமச்சிவாய்!

Published by
Staff