திலக் வர்மா 50 அடிச்ச ஆறு மேட்சிலும் நடந்த ட்விஸ்ட்.. பையன் உண்மையாவே பாவம் தான்யா..

எப்போதும் பலம் வாய்ந்து விளங்கும் மும்பை இந்தியன்ஸ் அணி இந்த சீசனில் வெற்றிகள் குவிப்பதற்கு கடுமையாக தடுமாறி வருகிறது. ஹர்திக் பாண்டியா தலைமையில் முதல் முறையாக மும்பை இந்தியன்ஸ் அணி ஆடி வரும் சீசனில் இதுவரை 9 போட்டிகள் ஆடி முடித்து விட்டார்கள். ஆனாலும் அதில் மூன்று போட்டிகள் மட்டுமே வென்று புள்ளி பட்டியலிலும் ஒன்பதாவது இடத்தில் அவர்கள் இருக்கும் நிலையில், மீதமுள்ள 5 போட்டிகளிலும் நல்லதோர் ரன் ரேட்டில் வெற்றி பெற்றால் மட்டும் தான் அவர்களால் பிளே ஆப் சுற்று வாய்ப்பை எட்டிப் பார்க்க முடியும்.

நல்ல பவுலர்கள் மற்றும் பேட்ஸ்மேன்கள் என நிறைந்திருக்கும் மும்பை அணியால் ஏதோ ஒரு குழப்பத்தின் காரணமாக தொடர்ச்சியாக நல்லதொரு ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை. மீண்டும் மீண்டும் பந்து வீச்சில் கோட்டை விட்டு வரும் மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங்கில் ஒரு சிலரை தான் அதிகமாக நம்பி உள்ளது. அதில் குறிப்பிடத்தக்க ஒருவராக மாறி உள்ளார் இளம் வீரர் திலக் வர்மா.

சூர்யகுமார் யாதவ், ரோஹித் ஷர்மா, இஷான் கிஷான என டாப் பேட்டிங் வரிசை வீரர்கள் ஏதாவது ஒரு சில போட்டிகளில் சிறப்பாக ஆடும் நிலையில் திலக் வர்மா தான் அனைத்து போட்டிகளிலுமே தொடர்ந்து நல்லதொரு ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

கடந்த 13 ஐபிஎல் இன்னிங்ஸ்களில் ஒரே ஒரு முறை தான் ஒற்றை இலக்க ரன்னில் அவர் அவுட் ஆகி உள்ள சூழலில், இந்த சீசனில் ஓரளவுக்கு மும்பை ரன் ரேட் உயரவும் முக்கிய காரணமாக இருந்துள்ளார். டெல்லி அணிக்கு எதிரான போட்டியிலும் 258 ரன்கள் இலக்கை நோக்கி மும்பை ஆடிய போது 60 ரன்கள் குவித்திருத்த திலக் வர்மாவின் அதிரடி, கடைசியில் வெற்றியாக மாறாமல் போனது. யாராவது ஒரு வீரர் அடித்திருந்தால் நிச்சயமாக மும்பை வெற்றி பெற்று திலக் வர்மாவிற்கு பெருமை சேர்ந்திருக்கும்.

ஆனால் மற்ற வீரர்கள் சொதப்பியதால் மும்பை அணியால் தோல்வி அடைய நேரிட்டிருந்தது. இந்த நிலையில் திலக் வர்மாவிற்கு இப்படி ஒரு சோகமா என கேட்கும் அளவிற்கு ஒரு சிக்கலையும் இந்த ஒரு புள்ளி விவரம் ஏங்க வைத்துள்ளது.

அதாவது ஐபிஎல் தொடரில் இதுவரை ஆறு முறை 50 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார் திலக் வர்மா. ஆனால் இந்த ஆறு போட்டியிலுமே மும்பை அணி ஒரு முறை கூட வெற்றி பெறவில்லை. ஒரு இளம் வீரர் தனது உயிரை கொடுத்து ஆடி வரும்போது அதன் முடிவுகள் இப்படி பாதகமாக இருப்பது அனைவரையுமே கலங்க வைத்துள்ளது.

Published by
Ajith V

Recent Posts