செய்திகள்

நெல்லையில் கலர் ஜெராக்ஸ் மிஷினை வாங்கிவிட்டு கோடீஸ்வரனாகும் ஆசை.. காய்கறி கடையில் நடந்த அசிங்கம்

நெல்லை: நெல்லை மாவட்டம் பாபநாசம் அருகே 6 மாதங்களாக வீட்டில் ஜெராக்ஸ் எந்திரத்தில் கள்ளநோட்டு அச்சடித்து ஜாலியாக செலவு செய்து வந்தவர் காய்கறி கடையில் மாற்ற முயன்றபோது வசமாக சிக்கினார்.

தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள ஆழ்வான்துலுக்கப்பட்டி அண்ணாநகரைச் சேர்ந்த 59 வயதாகும் ஆசைதம்பி என்பவர் தனது வீட்டில் கலர் ஜெராக்ஸ் எந்திரம் வைத்து உள்ளார். அதில் 100 ரூபாய் நோட்டுகளை அச்சடித்து வந்துள்ளாராம்.

ஆசைதம்பி நேற்று முன்தினம் நெல்லை மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள விக்கிரமசிங்கபுரத்திற்கு சென்றுள்ளார். அங்குள்ள காய்கறி கடை ஒன்றில் பொருட்கள் வாங்கினார். அதற்கு கலர் ஜெராக்ஸ் எடுத்து வைத்திருந்த ரூ.100 கள்ளநோட்டை கடைக்காரரிடம் கொடுத்து மாற்ற முயன்றுள்ளார். அதை வாங்கி பார்த்த கடைக்காரர் முகமது சபீர் சந்தேகம் அடைந்தார். இதுகுறித்து கேட்ட போது ஆசைதம்பி முன்னுக்கு பின் முரணமாக பதில் அளித்தாராம். அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவரை பிடித்து வைத்து விக்கிரமசிங்கபுரம் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரிடம் இருந்த பணத்தை வாங்கி பார்த்தனா். அவர் வைத்திருந்த சுமார் 25 எண்ணம் கொண்ட 100 ரூபாய் அனைத்தும் கலர் ஜெராக்சில் அச்சடித்த கள்ளநோட்டு என்பது தெரியவந்தது. மொத்தம் ரூ.2,500 மதிப்புக்கு அச்சடித்த கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. ஆசைதம்பி கள்ள ரூபாய் நோட்டுகளை பல்வேறு கடைகளில் கொடுத்து கடந்த 6 மாதங்களாக பொருட்கள் வாங்கி வந்ததும் அப்போது தான் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து, ஆசைதம்பியை அதிரடியாக கைது செய்தனர். அவரது வீட்டில் இருந்த கலர் ஜெராக்ஸ் எந்திரமும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Avatar photo
Keerthana

நான் கீர்த்தனா, கடந்த 8 வருடங்களாக ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். தமிழ் மினிட்ஸ் இணையதளத்தில் சப் எடிட்டராக இருக்கிறேன். தமிழகம், அரசியல், கிரைம், ட்ராவல்/பயணம், வேலைவாய்ப்பு, பொழுதுபோக்கு, வணிகம் செய்திகள் எழுதுவதில் மிகுந்த ஆர்வம் உள்ளவள்.