மிளகு, சீரகம் இல்லாமல் பெரிய நெல்லிக்காய் வைத்து ஒரு சுவையான ரசம் ரெசிபி!

தென்னிந்திய உணவுகளில் ரசம் என்பது அன்றாடம் சாப்பிடக்கூடிய குழம்பு வகைகளில் ஒன்று. ரசம் பொதுவாக உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்த அருமருந்தாக அமைகிறது. உடல் சோர்வு, பசியின்மை, சளி, உடம்பு வலி, அஜீரணக் கோளாறு என அனைத்திற்கும் ரசம் சிறந்த உணவாக அமைகிறது. இதன் மருத்துவ குணத்தின் காரணமாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த ரசத்தை விரும்பி சாப்பிடுவதும் வழக்கம். பொதுவாக ரசத்தில் மிளகு, சீரகம் சேர்க்கும் பொழுது அதன் சுவை அதிகமாகும், மருத்துவ குணங்கள் நிறைந்ததாகவும் இருக்கும். இந்த முறை புதிதாக பெரிய நெல்லிக்காய் வைத்து ரசம் செய்து சுவைக்கலாம் வாங்க.

செய்ய தேவையான பொருட்கள்

வேக வைத்த பாசிப்பருப்பு – ஒரு கப்

பெரிய நெல்லிக்காய் – 5 – 10

பச்சை மிளகாய் – 3

தக்காளி – 3

கருவேப்பிலை மல்லி இலை – கையளவு

புளி – சிறிய எலுமிச்சை பழ அளவு

பெருங்காயம்- இரண்டு சிட்டிகை

நெய் – இரண்டு தேக்கரண்டி

கடுகு – ஒரு தேக்கரண்டி

செய்முறை

முதலில் பெரிய நெல்லிக்காய், பச்சை மிளகாய், தக்காளி இவற்றை நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். அடுத்ததாக அடி கனமான பாத்திரத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் மூன்று தக்காளியை நறுக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும்.

அதனுடன் பச்சை மிளகாய் இரண்டாக நறுக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும். புளியை நன்கு கரைத்து அதன் சாற்றை அதனுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதன் பின் நமக்கு தேவையான பெரிய நெல்லிக்காயை அதை பாத்திரத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இதில் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்துக் கொள்ளலாம். இப்பொழுது மூன்று கப் தண்ணீர் சேர்த்து அதனை கொதிக்க விட வேண்டும்.

இந்த ரசத்தை 10 முதல் 15 நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும். நெல்லிக்காய் வெந்ததும் அதனுடன் நாம் வேகவைத்து வைத்திருக்கும் பாசிப்பருப்பை அதனுடன் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.

இந்த இரண்டும் ஒன்று சேர்ந்து ஒரு ஐந்து நிமிடங்கள் கொதிக்க வேண்டும் அதன் பின் நாம் ரசத்திற்கு தேவையான உப்பு சேர்த்துக் கொள்ளலாம். அடுப்பை அமைத்து விட வேண்டும்.

இந்த கலவையில் தேவையான மல்லி இலைகளை சிறியதாக நறுக்கி சேர்த்துக் கொள்ளலாம்.

புரட்டாசி மாதத்தில் சுறா புட்டு சாப்பிட வேண்டுமா அப்போ இந்த சுவையான மீல்மேக்கர் புட்டு ட்ரை பண்ணுங்க…

மற்றொரு அடுப்பில் ஒரு கடாயில் நெய் சேர்த்து கடுகு சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.

இறுதியாக தாளித்து வைத்ததை ரசத்துடன் சேர்த்து இறக்கி விடலாம். இப்பொழுது மண மணக்கும் வாசத்தில் பெரிய நெல்லிக்காய் ரசம் தயார்.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews