விஜயகாந்த் மறைந்த நாளில் வடிவேலு பட்ட வேதனை.. இறுதி அஞ்சலி செலுத்தாமல் இருந்த காரணமும் இதானாம்..

சினிமா மற்றும் அரசியல் என இரண்டிலும் சிறந்த ஆளுமையாக திகழ்ந்த விஜயகாந்த், கடந்த டிசம்பர் 28 ஆம் தேதி இந்த உலகை விட்டு மறைந்தார். கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நிலையில் முன்னேற்றம் இல்லாமல் தவித்து வந்த விஜயகாந்த், தொண்டர்கள் மற்றும் ரசிகர்களையும் கூட அதிகம் சந்திக்காமல் இருந்தார். அப்படி இருக்கையில், சமீபத்தில் மருத்துவமனையில் சேர்க்கப்பட, சிகிச்சை பலனளிக்காமல் உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்தார்.

சினிமாவில் பல நடிகர்கள் முன்னுக்கு வர காரணமாக இருந்த விஜயகாந்த், தன்னைத் தேடி வருபவர்களுக்கும் வயிறார சாப்பாடு போட்டு அனுப்பும் பழக்கத்தை கொண்டவர். சினிமாவில் தான் பட்ட கஷ்டங்களை பிறர் படவே கூடாது என நினைத்து தன்னை சுற்றி இருந்தவர்களையும் சிறந்த முறையில் பார்த்து.கொண்டார். இதன் பின்னர், அரசியலுக்கு நுழைந்த பின்னரும் தன்னாலான நலத்திட்ட உதவிகளை செய்திருந்தார். நல்ல மனிதனாக திகழ்ந்த விஜயகாந்த் மறைந்த போது லட்சக்கணக்கான மக்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி இருந்தனர்.

ஆனால், அப்படி ஒருவராக விஜயகாந்த் இருந்த போதிலும் அவருக்கும் வடிவேலுவுக்கும் இடையே இருந்த கருத்து வேறுபாடு மிக பெரிதாக இருந்தது. விஜயகாந்த் அரசியலில் நுழைந்து வளர்ந்து வந்த சமயத்தில் அவருக்கு எதிராக பல விமர்சனங்களை முன் வைத்திருந்தார் வடிவேலு. அவர் சினிமாவில் நடிக்க ஆரம்பித்த சமயத்தில் பல திரைப்படங்கள் கிடைக்க பெரிதும் உதவி செய்திருந்தவர் விஜயகாந்த்.

அப்படி இருந்தும் விஜயகாந்தை விமர்சனம் செய்ய எப்படி மனசு வந்தது என பலரும் வடிவேலுவுக்கு எதிராக கருத்துக்களை குறிப்பிட்டிருந்தனர். ஆனால் தன்னை வடிவேலு விமர்சித்த போதிலும் அவரை பற்றி பிறரிடம் நலம் விசாரிப்பாராம் விஜயகாந்த். இருந்தும் இரண்டு பேரும் பேசாமல் இருந்து வந்த சூழலில் விஜயகாந்தின் மறைவிற்கு கூட வடிவேலு வரவில்லை. இதுவும் அவர் மீது அதிக விமர்சனங்களை உருவாக்க வைத்திருந்தது.

பலரும் பல விதமான கண்டனங்களையும் வடிவேலு மீது வைத்திருந்தனர். இந்த நிலையில், சில காரணங்களால் தான் விஜயகாந்திற்கு இறுதி அஞ்சலி செலுத்த வடிவேலு வரவில்லை என சில தகவல்கள் கிடைத்துள்ளது. விஜயகாந்த் மறைந்த செய்தி அறிந்ததும் அந்த நாளில் அவர் மிகவும் மனமுடைந்து போனதாகவும், அந்த நாளில் அவர் சாப்பிடாமல் இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

மேலும் அந்த நாள் அழுது புலம்பிய வடிவேலு, விஜயகாந்தின் மறைவிற்கு நேரில் வந்தால் ஏதாவது அசம்பாவிதங்கள் ஏற்பட்டு விடும் என்பதற்காக தான் அங்கே செல்லாமல் வடிவேலு இருந்ததாகவும் மேலும் தகவல்கள் கூறுகின்றது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews