ஒரே நேரத்தில் வந்த அஜித், விஜய் படங்களின் வாய்ப்பு.. நடிகையின் செலக்‌ஷன் என்னாவா இருந்திருக்கும்?

இன்று கோலிவுட்டில் இருபெரும் உச்ச நட்சத்திரங்களாக இருப்பவர்கள் விஜய் மற்றும் அஜீத். எம்ஜிஆர் – சிவாஜி, ரஜினி – கமல் இவர்கள் வரிசையில் அடுத்ததாக விஜய் – அஜித் இவர்களின் ஆதிக்கம் தான் அதிகமாக இருக்கின்றது. இருவரும் அவரவர் கெரியரில் பிஸியாக இருந்து வருகின்றனர். இருவரின் படங்களும் தான் போட்டி போட்டு வெளியாகி கொண்டிருக்கின்றன.

ஒரு பக்கம் விஜய் கோட் திரைப்படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அஜித் விடாமுயற்சி படத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறார். கடைசியாக இருவரின் துணிவு மற்றும் வாரிசு போன்ற படங்கள்தான் ஒரே நேரத்தில் ஒன்றாக மோதிக்கொண்டன. விமர்சன ரீதியாக துணிவு திரைப்படம் வரவேற்பை பெற்றது. வசூல் ரீதியாக வாரிசு திரைப்படம் நல்ல வசூலை அடைந்தது.

இந்த நிலையில் விஜய் தற்போது கோட் திரைப்படத்தில் நடித்துக் கொண்டு வருவதால் அதில் ஒரு குத்துப் பாடல் இடம்பெற இருப்பதாக ஒரு தகவல் வெளியானது. அந்த குத்துப்பாடலில் த்ரிஷா ஆட இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. தேர்தலுக்குப் பிறகு அந்த பாடலுக்கான படப்பிடிப்பு பிரசாத் ஸ்டூடியோவில் வைத்து நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இருவரும் சேர்ந்து ஆடிய கில்லி படத்தின் அப்படி போடு பாடலைப் போன்று இந்தப் பாடலும் இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் முதலில் இந்த பாடலில் ஆட இருந்தவர் குண்டூர்காரன் திரைப்படத்தின் நாயகியான ஸ்ரீ லீலா. அந்த சமயத்தில் தான் அஜித் நடிக்கும் குட் பேட் அக்லி திரைப்படத்தின் பேச்சு வார்த்தை ஸ்ரீ லீலா உடன் நடந்து கொண்டிருந்ததாம்.

அப்போது கோட் திரைப்படத்தில் குத்துப் பாடலுக்கு நடனமாட வாய்ப்பு வரும்போது ஸ்ரீ லீலா அஜித் படத்திற்காக கோட் திரைப்படத்தில் ஆட முடியாது என மறுத்து விட்டாராம். ஏனெனில் கோட் திரைப்படத்தில் ஒரே ஒரு குத்துப் பாடல். ஆனால் அஜித் படத்தில் ஹீரோயின். அதனால் சுதாரித்துக் கொண்ட ஸ்ரீலீலா குத்து பாடலில் என்னால் ஆட முடியாது என்று சொல்லிவிட்டாராம். அதன் பிறகு திரிஷா இந்த பாடலில் ஆடுவதற்கு சம்மதம் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.

Published by
Staff

Recent Posts