பாலச்சந்தர் மற்றும் பாலு மஹேந்திராவோட ஃபேவரைட் ஹீரோ.. தெலுங்கை தாண்டி தமிழிலும் ஜெயிச்ச பானு சந்தர்..

தெலுங்கு திரை உலகின் பல முன்னணி நடிகர்கள் தமிழ் திரை உலகிலும் தங்கள் சாதனையை பதிவு செய்துள்ளனர். சிரஞ்சீவி முதல் தற்போதைய மகேஷ் பாபு வரை பல நடிகர்கள் நேரடி தமிழ் படங்களில் நடித்துள்ளார்கள். இதன் காரணமாக, தெலுங்கு மாநிலத்தை தாண்டி தமிழ்நாடு, கேரளா வரைக்கும் இவர்களுக்கு ரசிகர்களும் அதிகமாக உள்ளனர்.

அந்த வகையில் தெலுங்கில் கடந்த 80கள் மற்றும் 90களில் பிரபலமாக இருந்த நடிகர் தான் பானு சந்தர். இவர் தமிழ் திரையுலகிலும் பல மறக்க முடியாத திரைப்படங்களில் நடித்துள்ளார். பிரபல தெலுங்கு திரை உலகின் இசையமைப்பாளரான மாஸ்டர் வேணு என்பவரின் மகன் தான் பானு சந்தர். இவர் தெலுங்குத் திரை உலகில் கடந்த 1978 ஆம் ஆண்டு முதல் நடித்து வரும் நிலையில் 1980 இல் பாலு மகேந்திரா இயக்கத்தில் உருவான ’மூடுபனி’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இந்த படத்தில் ஷோபா மற்றும் பிரதாப் முக்கிய இடத்தில் நடித்திருந்தாலும் பானுச்சந்தர் சோபாவின் காதலராக ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பார்.

இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் அடுத்தடுத்து பானுசந்தருக்கு தமிழில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. குறிப்பாக தியாகராஜன் ஹீரோவாக நடித்த ’நீங்கள் கேட்டவை’ என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார். அதேபோல் பாலு மகேந்திரா இயக்கத்தில் உருவான தேசிய விருது பெற்ற ’வீடு’ என்ற படத்தில் பானுசந்தர் தான் நாயகன்.

மேலும் விசில் படத்தில் காவல்துறை அதிகாரியாகவும், விஷால் நடித்த திமிரு திரைப்படத்தில் விஷாலின் மாமாவாகவும் நடித்திருப்பார். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதனை அடுத்து சிறுத்தை சிவா இயக்கத்தில் கார்த்தி நடித்த சிறுத்தை திரைப்படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்த அசத்திருப்பார்.

மேலும் ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் உருவான காஞ்சனா 2 உள்பட சமீபத்திய படங்களிலும் நடித்த பானுசந்தர், கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான ’ஓ மை காட்’ என்ற திரைப்படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். தமிழில் மட்டுமின்றி அவர் தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்துள்ளார்.

மேலும் பானுசந்தர் தனது மகனுக்காக ‘நா கொடுக்கு பங்காரம்’ என்ற தெலுங்கு திரைப்படத்தையும் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் அவருடைய மகன் சுமந்த் அஸ்வின் என்பவர் ஹீரோவாக நடித்த நிலையில் இந்த படம் நல்ல வரவேற்பு பெற்றது.

பாலச்சந்தர், பாலு மகேந்திரா, கே விஸ்வநாத் உள்பட பல பிரபலங்களின் படங்களில் நாயகனாகவும் முக்கிய வேடத்திலும் நடித்துள்ளார். மேலும் கடந்த 1990 ஆம் ஆண்டு சுற்றதருள் என்ற திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக அவருக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதும் கிடைத்திருந்தது.

தற்போது 71 வயதாகும் பானுசந்தர் தனது வயதுக்கேற்ற வேடங்களில் நடித்து வருகிறார் என்பதும் இன்றும் அவர் சுறுசுறுப்பாக தனது நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...